Friday, February 27, 2015

இந்தியாவின் தீரா மர்மங்கள்.

இந்தியாவின் தீரா மர்மங்கள்.


இதற்கு முன் எழுதிய உலகின் தீரா மர்மங்கள் பதிவை காண இங்கே <<கிளிக்>> செயுங்கள்.. 


எப்படி உலகம் முழுக்க இன்னமும் தீர்க்கப்படாத பல மர்மங்கள் விடையில்லா கேள்விகளுடன் உறங்குகிறதோ... அதேப்போல நம் இந்தியாவிலும் பல மர்மங்கள் உண்டு. எண்ணிலடங்கா மர்மங்கள் இருந்தாலும் இந்தத்தொகுப்பு டாப் லிஸ்ட் மட்டுமே...


இது முழுக்க முழுக்க தொகுக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமேயொழிய எனது தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் இதிலில்லை.


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
எப்போதுமே மிதவாதத்துக்கும் தீவிரவாதத்துக்குமான ஆதரவில் இளைய சமுதாயம் இரண்டாவதில்தான் அதீத ஆர்வமும் ஆதரவும் கொண்டிருக்கும். நேதாஜி என்ற பேரைக்கேட்டாலே இன்றளவும் இளைஞர் கூட்டம் எழுச்சியடைவதற்கான வரலாறு மிகப்பெரியது. பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தபோது காந்தி ஒரு பக்கம் அஹிம்சைப்  போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதேப்போல நாடு முழுவதும் பலவிதமான குழுக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.


இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாதப்போராட்டத்தை இராணுவப்போராட்டமாக மாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான். இன்றைய இந்திய இராணுவத்திற்கு அடித்தளமிட்டவரும் இவர்தான். (அவருடைய வரலாற்றைப்பற்றி எழுதுவதனால் அதற்கு தனியே ஒரு பதிவு தேவைப்படும் என்பதால் இந்தப்பதிவின் தலைப்பிற்கான சமாச்சாரத்தை பற்றி மட்டும் இதில் பார்க்கலாம்.


சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்கவேண்டிய நேதாஜி... உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டதுதான் இன்று வரையிலும் சுதந்திர இந்தியாவின் தீராத மர்மங்களில் நேதாஜிக்கு முதலிடம் வழங்கியிருக்கிறது.


1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை. உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன. 1945ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் ஜப்பான் சரணடையும் முடிவை எடுத்த மூன்றாவது நாளில் நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாக வெளியிடப்பட்ட செய்தியே, ஆங்கிலோ-அமெரிக்க படைகளிடம் போர்க்கைதியாக சிக்காமலிருக்க நேதாஜியால் நடத்தப்பட்ட நாடகம்தான் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. நேதாஜி இறந்ததாக தகவல் வெளியான சமயத்தில் உண்மையில் அவர் ஜப்பானின் டோக்யோ நகரத்தின் வழியாக சோவியத் யூனியனுக்கு சென்று விட்டதாக தகவல் உண்டு.


இன்று வரையிலும் நேதாஜி விஷயத்தில் இந்திய மக்களுக்கு தெரியாமல் போன மர்மமாய் நீடிப்பதில் கீழ்க்காணும் விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை... 


1)   தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து நடந்ததாக எந்தவித ரெக்கார்டுகளும் இல்லை என்று மறுத்திருப்பது இந்திய அரசாங்கத்தால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது.


2)   பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று முடிவெடுத்ததாக பதியப்பட்டிருக்கிறது. இது நடந்தது அக்டோபர் 1945ல். அப்படியென்றால் ஆகஸ்ட் 1945ல் போஸ் இறந்ததாகக் கூறப்பட்டது பொய்தானா?... 


3)   CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950 வரையிலும் நேதாஜிக்கான தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. உண்மையிலேயே 1945லேயே நேதாஜி இறந்திருந்தால் 1950 வரையிலும் அவரைத்தேடியிருக்க வேண்டிய அவசியமென்ன?...


4)   1946ல் கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய இரீஷ் பிரசிடெண்ட் டி’வலேராவை டப்ளின் நகரில் நேதாஜியை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டி’வலேராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம். அத்தோடு மட்டுமில்லாமல் 1946க்கு பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த டி’வலேரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்! 


5)   பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் நேதாஜி எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத்தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப்பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.


6)   ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர்.சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் நேதாஜியும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாக பக்கத்து பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே நேதாஜிக்கு சிறை ரெக்கார்டுகளில் ‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதைவிட அதிர்ச்சிகரத்தகவல் என்னவென்றால் சிறையிலிருந்து நேதாஜி பலமுறை நேருவுக்கு தான் இந்தியாவுக்கு திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச்செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதுதான்!!! 


7)   1946ல்தான், அதாவது நேதாஜி இறந்ததாகக் கூறப்பட்ட ஒரு வருடம் கழித்துதான் இந்திய அரசாங்கம் நேதாஜி இறந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்திருக்கிறது. 


8)   நேதாஜியின் இறப்பு மர்மம் குறித்த விசாரணைக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷனில் நிசாமுதீன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட விமானத்தில் கேப்டன் ஏக்ரம், லால்சிங் மற்றும் சில பெங்காளி வீரர்களும், மூன்று ஜப்பானியர்களும் மட்டுமே அதில் பயணித்ததாகவும், நேதாஜி அதிலில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.


9)   விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட தேதியிலும், அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இருக்கும் பத்து நாட்களிலும் தாய்பேயில் அப்படி எந்தவொரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்த நீதிபதி முகர்ஜி கமிஷனின் அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் நிராகரித்தது?...


10) நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இதுவரையிலும் அந்த விமான விபத்து பற்றிய புகைப்படங்களோ... இல்லை… அந்த விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களைப்பற்றிய தகவல்களோ ஏனில்லை?... 


இதைப்போன்ற விடையில்லா கேள்விகள் போலவே நேதாஜியின் விஷயத்தில் நீடித்திருக்கும் மர்மத்திற்கு காரணம் நேருவே என்றும் ஒரு தகவல் உண்டு. சுதந்திரத்திற்கு பிறகான ஆட்சிக்கு குறிவைத்த நேருவுக்கு அக்காலத்தில் மிகப்பெரிய தலைவலியாய் தெரிந்தவர் அமோக மக்கள் ஆதரவு கொண்ட நேதாஜி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நேதாஜியை நேருவே கடைசிவரை ரஷ்யாவிலேயே வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் சில தகவல்கள் உலவுகின்றன. நேதாஜி இந்தியாவுக்குள் 1985 வரையிலும் ‘’பகவான்ஜி’’ என்ற பெயரில் உத்திரப்பிரதேசத்தில் ஒரு ஆன்மீகவாதியாய் வாழ்ந்ததாகவும் தகவலுண்டு.


எது எப்படியோ?... நேதாஜியின் இறப்பு இன்று வரையிலும் சர்ச்சைகள் விலகாத இந்தியாவின் டாப் மர்மமாகவே நீடித்திருக்கிறது. 


லால் பகதூர் சாஸ்திரி
இந்தியாவின் தீராத மர்மங்களில் இரண்டாவது இடத்தை லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்தான் பிடித்திருக்கிறது. லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்பதைத்தவிர பெரும்பாலான விஷயங்கள் பலருக்குத் தெரியாது.


அக்டோபர்-2, 1904ல் பிறந்த லால் பகதூர் சாஸ்திரி இந்திய சுதந்திரப் போராட்டக் காலங்களில் இண்டியன் நேஷனல் காங்கிரசின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். சுதந்திர இந்தியாவின் நேருவின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்த போதும், பெரிதாய் பரபரப்பாய் வெளியில் தெரியாத அமைதியான அரசியல்வாதியாகவே இருந்தவர்.


மே-27, 1964ல் நிகழ்ந்த நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்திராகாந்தியை பிரதமராக்குவதற்கு முன்னிலைப்படுத்திய நிகழ்வுகளை இந்திரா மறுத்ததால் லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் ஜீன், 1964ல் பொறுப்பேற்றார்.


இவரது நிர்வாகத்திறமைகளில் முக்கியமானது... இவரின் வெண்மைப்புரட்சி... பால் உற்பத்திக்கு முதலிடம் அளித்து இவரால் உருவாக்கப்பட்டதுதான் ‘’நேஷனல் டெய்ரி டெவலெப்மெண்ட் போர்டு’’ என்பது நம்மில் பலர் அறியாத ஆச்சர்யச்செய்தி. நாடு முழுவதும் உணவுப்பஞ்சம் நிலவியபோது சாஸ்திரி நாட்டு மக்களை தலைக்கு ஒரு உணவை அரசாங்கத்திடம் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு பெறப்படும் உணவை பதப்படுத்தி பஞ்சம் நிலவும் ஏரியாக்களில் விநியோகிக்க திட்டமிட்டார். பசுமைப்புரட்சியை உருவாக்கியதிலும் சாஸ்திரி முதன்மையானவரே. இந்தோ-பாக் 2ம் யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையில் சாஸ்திரியால் முழக்கமிடப்பட்ட கோஷமே ‘’ஜெய் ஜவான், ஜெய் கிசான்’’...


தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் சாஸ்திரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தித்திணிப்பை விரும்பாத மாநிலங்களில் ஆங்கிலமே தொடர்ந்து மத்திய அரசு மொழியாக நீடிக்கும் என்று சாஸ்திரி வழங்கிய உத்திரவாதத்திற்குப் பிறகே மொழிப்போர் போராட்டங்கள் அமைதியடைந்திருக்கின்றன.


ஈழத்தமிழர் விவகாரத்திலும் சாஸ்திரியின் பங்களிப்பு இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்?...


1964ல் சாஸ்திரி அப்போதைய சிறிலங்கன் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கேவுடன் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளார். சிறிமாவோ-சாஸ்திரி அல்லது பண்டாரநாயக்கே-சாஸ்திரி என்றழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துகளின்படி ஆறு இலட்சம் இந்தியத் தமிழர்கள் இந்தியாவில் மீள் குடியமர்த்தப்படவேண்டும். மூன்று இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் தமிழர்களுக்கு சிறிலங்க குடியுரிமை வழங்கப்படவேண்டும். இவையனைத்தும் அக்டோபர்-31,1981க்குள் நிறைவேற்றப்படவேண்டும். சாஸ்திரியின் மறைவுக்குப்பின்னர் 1981 நிலவரப்படி இந்தியா மூன்று இலட்சம் தமிழர்களை இந்தியாவில் மீள்குடியமர்த்தியிருக்கிறது. சிறிலங்கா 1,85,000 தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. அதன்பிறகு இந்தியாவாலேயே இந்த ஒப்பந்தம் காலாவதியானதாக சொல்லப்பட்டு நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பது காலத்தின் கொடுமையே. 


பாகிஸ்தான் அதிபர் முகம்மது அயூப்கான் இந்தியாவில் வலுவில்லாத தலைமை அமைந்திருப்பதாகக் கருதி இந்தியா மீதான போர் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். செப்டம்பர்,1965ல் இந்தோ-பாக் இரண்டாம் யுத்தம் தொடங்கியது. இந்திய மக்களிடையே லால் பகதூர் சாஸ்திரி மிகப்பெரிய ஹீரோவாக உருவெடுத்தது இந்தப்போரினால்தான். அதற்கு முந்தையை இந்தோ-சைனா போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவின் தவறான முடிவே காரணமென்பதால் சாஸ்திரி பல திறமையான முடிவுகளை எடுத்து இந்தோ-பாக் இரண்டாம் யுத்தத்தில் இந்தியாவின் முன்னிலைக்கு வழிவகுத்தவர்.


இந்தப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்யா ஏற்படுத்திய சமாதானப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு ஜனவரி-10,1966ல் பிரபலமான தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் கையெழுத்திட்டார் சாஸ்திரி. அதுதான் இந்திய நாட்டிற்காக அவர் போட்ட கடைசி கெயெழுத்து என்பது நமது துரதிர்ஷ்டமே.


ஜனவரி-11, 1966ல் அதாவது தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே சாஸ்திரி ரஷ்யாவில் தான் தங்கியிருந்த அறையில் அதிகாலை 1.32க்கு மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


சாஸ்திரியின் இந்தத் திடீர் மரணமும் நேதாஜியின் மரணத்தைப் போலவே பல மர்மங்களுடன் இந்தியாவின் தீரா மர்மங்களின் வரிசையில் கலந்து போனதற்கான காரணங்கள்...


1)   இறப்பிற்கு பின்னர் சாஸ்திரியின் உடல் நீல நிறமாக மாறியதால் சாஸ்திரியின் குடும்பமும், எதிர்க்கட்சிகளும், பெரும்பாலான நாட்டு மக்களும் சாஸ்திரியின் மரணம் இயற்கையானதல்ல என்று எதிர்ப்பு தெரிவித்தும், கடைசி வரையிலும் அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை


2)   கடைசியாக சாஸ்திரிக்கு குடிக்க தண்ணீர் வழங்கிய வேலையாள் ரஷ்ய அரசால் கைது செய்யப்பட்டு பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறான். சாஸ்திரியின் மரணம் ஹார்ட் அட்டாக்தான் என்றால் எதற்காக அந்த உடனடி கைது நடவடிக்கை நிகழ்ந்திருக்கிறது?...


3)   சாஸ்திரியின் மரணம் பற்றிய விசாரணைக்காக ராஜ் நரைன் என்கொயரி கமிஷன் என்று ஒன்று நிறுவப்பட்டு அதன் முடிவுகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. (இன்று அந்த என்கொயரி கமிஷனின் ரிப்போர்ட் இந்தியன் பார்லிமெண்ட் லைஃப்ரரியிலும் இல்லாமல் தொலைந்திருக்கிறது). 


4)   2009ம் ஆண்டு பத்திரிக்கையாளர் அனுஜ் தர் என்பவரால் தகவலறியும் உரிமைச்சட்டதின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் சாஸ்திரியின் மரணம் பற்றி கேட்கப்பட்ட தகவல்களுக்கு பிரதமர் அலுவலகம் செக்சன் RTI - 8(I) (a)ன் படி நிராகரித்திருக்கிறது. ( இந்த செக்சன் எதற்கு தெரியுமா?... ஒரு விஷயம் அரசாங்கத்தால் வெளியிடப்படும்போது அது குறிப்பிட்ட சில நாடுகளுடனான நல்லுறவில் விரிசல் உண்டாக்குவதாகவோ… இல்லை உள்நாட்டில் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திடுவதாகவோ இருக்கும் பட்சத்தில் அரசாங்கம் அதை நிராகரிக்க உரிமையுண்டு!!!)


5)   சாஸ்திரியின் மரணத்திற்கு பின்னால் இந்தியாவின் பிரதமரானவர் யார் தெரியுமா?... இந்திரா காந்தி!!! அவரின் ரஷ்ய ஆதரவு அவரது ஆட்சி வரலாற்றில் நாடறிந்த விஷயம்...


இப்படி இந்தியாவின் இரண்டாவது பிரதமரின் வரலாறே தீரா மர்மங்களுடன் தெளிவான விடையின்றிதான் முடிந்து கிடக்கிறது என்பது மர்மத்திலும் சோகமே…


சஞ்சய் காந்தி
என்னை ஆச்சர்யப்பட வைத்த விஷயங்களில் ஒன்று... இந்தியாவின் தீரா மர்மங்களைப்பற்றி ஆராயும்போது பெரும்பாலும் மரணங்களே அதில் வியாபித்திருப்பதுதான்...


சஞ்சய் காந்தி... இந்திரா காந்தியின் இளைய மகன். அரசியலில் எவ்வித பதவியும் வகிக்காமலேயே அசுர வளர்ச்சியடைந்தவர். இவரது அண்ணன் ராஜீவ் காந்தி எந்தளவுக்கு அமைதியானவரோ அதற்கு நேரெதிர் சஞ்சய் காந்தி! தடாலடிப்பார்ட்டி என்றும் அடாவடிப்பார்ட்டி என்றும் பலவிதமான தகவல்கள் நிலவுகின்றன.


  நமது இன்றைய மாருதி-சுசூகி கம்பெனி இவரால்தான் நிறுவப்பட்டது என்பது நம்மில் பலர் அறிந்திருக்காத ஆச்சர்யச்செய்தி!. இந்திராகாந்தி 1975ல் எமெர்ஜென்சி பிரகடனம் செய்தபோது இந்திராகாந்திக்கு முழுக்க முழுக்க ஆலோசகராக செயல்பட்டவர் சஞ்சய் காந்திதான். அப்போது நாடு முழுவதும் இந்தியாவை ஆள்வது பிரதமர் அலுவலகம் அல்ல... பிரதமரின் வீடுதான் என்றுகூட ஒரு விமர்சனம் கிளம்பியிருக்கிறது. சஞ்சய் காந்தியின் மற்றுமொரு சாதனை நாடு முழுவதும் பரப்பப்பட்ட ‘’குடும்பக்கட்டுப்பாடு’’ திட்டம்!


பெரும்பாலான கருத்துக்களும், தகவல்களும் இந்தியாவின் இரும்புப் பெண்மணியாய் அறியப்பட்ட இந்திரா காந்தியையே அவரது மகன் சஞ்சய் காந்தி பிளாக் மெயில் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக தெரிவிக்கின்றன.


தடாலடிக்கு பேர் போனவராய் விளங்கி இந்திராவின் அரசாங்கத்தையே தனது கைக்குள் வைத்திருந்த சஞ்சய் காந்தி ஜீன்-23,1980ல் டெல்லியில் டெல்லி ஃபிளையிங் கிளப்பைச் சேர்ந்த ஒரு புது ரக விமானத்தை இயக்கிப் பறந்தபோது விபத்துக்குள்ளாகி இறந்திருக்கிறார். அவருடன் இறந்த ஒரே ஆள் அந்த விமானத்தில் இருந்த கேப்டன் சுபாஷ் சக்சேனா.
சஞ்சய் காந்தி இறந்த விமானவிபத்து இதுதான்...


சஞ்சய் காந்தியின் இந்த திடீர் மரணம் பலவித சந்தேகங்களுடனும், தகவல்களுடனும் வரலாற்றில் தீரா மர்மமாகவே இடம்பிடித்ததற்கு சில காரணங்கள் உண்டு...


1)   சஞ்சய் காந்தியின் இறப்புச்செய்தி கேட்டதும் இந்திராகாந்தி எழுப்பிய முதல் கேள்வி சஞ்சய் காந்தியிடமிருந்த ரிஸ்ட் வாட்ச் மற்றும் சாவிக்கொத்தைப்பற்றியதுதான்!


2)   சஞ்சய் காந்தியின் மரணத்திற்கு பிறகு அதை விசாரிப்பதற்காக இந்திராவால் அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எல்.ஜெயின் தலைமையிலான விசாரனைக்கமிஷன் வெகு விரைவிலேயே இந்திராவால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏன் இந்திராகாந்தி அந்த விசாரணைக்கமிஷனை தள்ளுபடி செய்தார் என்பது புரியாது புதிர்தான்.


3)   சஞ்சய் காந்தியின் இறப்பிற்கு பிறகு ராஜீவ் காந்தி உடனடியாக அரசியலில் நுழைந்திருக்கிறார்!!!


இன்னமும் கூட சஞ்சய்காந்தியின் மரணத்திற்கு இந்திராதான் காரணம் எனும் எண்ணம் மக்கள் மனதிலிருந்து அகலாமலிருப்பது அவரது மரணத்தில் நீடித்திருக்கும் தீரா மர்மமே...


(ராஜீவ் காந்தியின் மரணமும் தீரா மர்மமே... என்று உங்களில் எவராவது கேள்வி எழுப்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)


நடிகை திவ்யபாரதி
இந்தி நடிகை திவ்யபாரதி... இவரது மரணமும் இன்னமும் புரியாத மர்மமாகவே நீடித்திருக்கிறது.


திரையுலகில் இவரது அசுரவேக வளர்ச்சி எவரும் கணிக்காத ஒரு விஷயம். ஆனால் அதே அசுரவேக வளர்ச்சிதான் அவரது இறப்புக்கு பின்னாலான மர்ம முடிச்சுகளுக்கும் காரணமாகிப்போனது.


ஏப்ரல்-5, 1993ல் இரவு 11.45மணிக்கு திவ்யபாரதி தான் குடியிருந்த அபார்ட்மெண்ட்டின் பால்கனியிலிருந்து தவறி விழுந்து இறந்ததாக வரலாற்றில் பதியப்பட்ட செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது இன்னமும் நீடிக்கும் மர்மம்.





அவர் குடித்திருந்ததாகவும் குடிபோதையில் தவறி விழுந்ததாகவும் செய்திகள் உண்டு. பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் மூன்று பெக் அளவுக்கு மொரிஷியன் ரம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜெ.ஜி.ஜாதவ் என்ற இன்ஸ்பெக்டரின் கூற்றுப்படி திவ்யபாரதியின் வீட்டிலிருந்த மொரிஷியன் ரம் பாட்டில் திறக்கப்படாத புது பாட்டில். ஒரு உயர் ரக விஸ்கி பாட்டில் மட்டும் கொஞ்சம் காலியான நிலையில் இருந்திருக்கிறது.


அவருடைய மரணத்துக்கு பின்னால் பாம்பே நிழலுலகத் தாதாக்களின் கைங்கர்யம் இருப்பதாக ஒரு செய்தியுண்டு. திவ்யபாரதியின் அசுரவேகத்தை பொறுக்க இயலாத எதிர்கோஷ்டியினர் திட்டமிட்டு அவரைத் தீர்த்துக் கட்டியதாக பின்னனிக் கதையுமுண்டு. திவ்யபாரதி தற்கொலை செய்து கொண்டார்... அவருக்கு இது புதிதல்ல... அவ்வப்போது ஷீட்டிங் ஸ்பாட்களில் கூட பிளேடை எடுத்து கையை அறுத்துக்கொள்வதாக மிரட்டுவார் என்று அவரது இறப்புக்கு பின்னால் பேட்டியளித்தவர்களும் உண்டு. திவ்யபாரதி அவரது தாயை எதிர்த்து சாஜித் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திவ்யபாரதியின் மரணத்துக்குப்பின்னால் அவரது கணவரின் கைங்கர்யம் கூட இருக்கலாம் என்றும் ஒரு செய்தியுண்டு.


திவ்யபாரதி இறந்தபோது அவரது வீட்டிலிருந்த அவரது பியூட்டிஷியன் மற்றும் பியூட்டிஷியனின் கணவர் ஆகியோர் மீதும் சந்தேகப்பார்வை உண்டு.


எவ்வளவோ பரபரப்புகள் அவரது இறப்பின் போது இந்தியா முழுவதும் எழுந்தாலும் 1998ம் ஆண்டு விபத்து என்று கூறி ஒரு 19வயது செல்லுலாய்டு தேவதையின் மரணம் தீராத மர்மமாகவே மூடப்பட்டது!!!


தாஜ்மஹால் 
உலக அதிசயங்களில் ஒன்றாக, காதலின் சின்னமாக, வெள்ளைப் பளிங்கு கற்களில் கம்பீரமாக எழுந்து நிற்கும் நமது தாஜ்மஹாலும் நம்மால் ஒரு தீரா மர்மமாகவே பார்க்கப்படுகிறது என்பது நம்மில் பலர் அறியாத அதிர்ச்சிச்செய்தி!


நமக்கெல்லாம் தெரிந்த கதை... தாஜ்மஹால் என்பது மன்னர் ஷாஜகானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம் என்பதுதான். ஆனால் பலர் இதை மறுக்கின்றனர். ஏனென்றால் மும்தாஜ் மரணத்தை தழுவும்போது இருந்த இடம் தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா அல்ல! ஆக்ராவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால்தான் மும்தாஜ் இறந்திருக்கிறார். அவர் இறந்த இடத்திலேயே அவரது உடல் புதைக்கப்பட்டிருக்கிறது. தாஜ்மஹாலில் இருப்பது அவரது பதப்படுத்தப்பட்ட உடலா?... இல்லை... ஏற்கனவே புதைக்கப்பட்ட அவரது உடலின் மீதங்கள் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் தாஜ்மஹாலில் புதைக்கப்பட்டதா என்று பல கேள்விகள் வரலாற்று ஆய்வாளர்களால் எழுப்பப்படுகிறது.


இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தாஜ்மஹால் என்பது ஷாஜகானால் கட்டப்பட்டதே அல்ல. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலேயே கட்டப்பட்டு ஷாஜகானால் ஆக்கிரமிக்கப்பட்ட சிவன்கோயில் என்றும் சில ஆச்சர்யத்தக்க விவாதங்களை எடுத்து வைக்கின்றனர்!


இதுபோன்று இறக்கைக் கட்டிப் பறக்கும் தகவல்களுக்கு கூடுதல் பலம் சேர்ப்பதுபோல இந்திய அரசின் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டும் மும்தாஜின் கல்லறை இருப்பதாகக் கூறப்படும் தாஜ்மகாலின் கீழ்த்தளத்தை நிரந்தரமாக மூடி மர்மத்தைக்கூட்டியிருக்கிறது. இதே காரணத்தால்தான் பலர் அந்த கீழ்த்தளத்தில் சிவன் கோயில் இருப்பதாகவும் அது வெளியில் தெரிந்தால் தாஜ்மஹால் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக மாறி நாட்டில் தேவையில்லாத மதக்கலவரங்களும், பிரச்சினைகளும் உண்டாகலாம் என்பதால் அரசாங்கம் மூடி மறைப்பதாக மர்மத்தைக்கிளப்புகின்றனர். எப்படியாயினும் சரி... உலகம் போற்றும் காதலின் சின்னமாய் நமது நாட்டில் வீற்றிருக்கும் தாஜ்மஹாலின் கீழ்த்தளத்திலிருப்பது உண்மையிலேயே தீரா மர்மம்தானோ என்னவோ தெரியவில்லை!!!
யேட்டி
யேட்டி என்பது மனிதக்குரங்கு போன்ற தோற்றம் கொண்ட ஒரு உயிரினம் என்றும் இது ஹிமாலயன் மலைப்பிரதேசத்தில் சுற்றுவதாகவும் பலர் அவ்வப்போது இதைப் பார்த்ததாகவும் கதைகள் நிலவுகின்றன. இது மனிதர்கள் கண்ணில் பட்டால் உடனே ஓடி மறைந்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. பலர் இதைப்பெரிய உருவம் கொண்ட மனித இனமாகவே நம்புகின்றனர். இதன் கால்தடமும் பல இடங்களில் கண்டறியப்பட்டதாக கதைகள் உலவுகிறது.


என்றாலும் இதுவும் இன்னமும் முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாத மர்மமாகவே நீடிக்கிறது.


கல் மனிதன்
இது இந்தியாவின் தீர்க்கப்படாத வழக்குகளில் பிரசித்தி பெற்றது. இது ஒரு சீரியல் கொலைகாரனைப்பற்றிய தகவல். 1985 முதல் 1987வரை பாம்பேயில் ஒரு டசனுக்கும் அதிகமானோர் இந்தக் கொலைகாரனால் கொல்லப்பட்டிருக்கின்றனர். எல்லா கொலைகளுமே ஒரே மாதிரியான ஸ்டைலில் 30கிலோ எடைகொண்ட கல்லால் அடித்து செய்யப்பட்டிருக்கிறது. இதே ஸ்டைலில் 1989ல் ஆறு மாதத்திற்குள் ஒரு டசனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.


கல்லை உபயோகித்து சீரியல் கொலைகள் நடந்ததில் கொலைகாரனுக்கு மீடியாக்கள் வைத்த பரபரப்புப் பெயர்தான் ‘’ஸ்டோன் மேன்’’.


இன்று வரையிலும் கொலைகாரன் யார் என்றும், கொலைக்கான காரணம் என்னவென்றும் தெரியாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கேஸ் ஃபைலும் இந்தியாவின் தீராத மர்மமே என்பதில் சந்தேகமில்லைதான்!


இதே போன்று இன்னும் எவ்வளவோ மர்மங்கள் தீரா மர்மங்களாக நீடித்திருக்கலாம். எனக்குத் தெரிந்தவரையில் நான் தொகுத்திருக்கிறேன். உங்களுக்கும் இதேப்போல ஏதாவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்... நானும் தெரிந்து கொள்கிறேன்... ஏனென்றால் வாழ்க்கை எப்போதுமே எவராலுமே முழுவதுமாய் கற்றறிய முடியாத மர்மமே!!!

உலகின் தீராத மர்மங்கள்... – டாப் லிஸ்ட்

உலகின் தீராத  மர்மங்கள்... – டாப் லிஸ்ட்



மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சில மர்மங்கள் பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் இன்னமும் விடையின்றி தீரா மர்மங்களாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தீரா மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தை அலசினால் வியத்தகு தகவல்கள் வந்து வியாபிக்கின்றன. உடனே இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் விளைவு மட்டுமே இந்தப் பதிவே தவிர மற்றபடி இதை மூடநம்பிக்கையை வளர்ப்பதாகவோ, வேறு எந்த நோக்கத்துடனோ எழுதவில்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்வது எனது கடமையாகும்.


சரி... முதலில் உலகின் சில டாப் லிஸ்ட் தீரா மர்மங்களைப் பற்றி பார்க்கலாம்...
எகிப்தும் பிரமிடுகளும்
எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே. 
எகிப்து நாட்டில் காணப்படும் இந்தப்பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.




பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிடுகள் என்றாலே சட்டென நம் நினைவில் நிழலாடும் உருவம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிடுதான். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது. 

இதுவரை கண்டறியப்பட்ட பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல.  கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ரு வினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும்.



கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.

பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் Sphinx சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.




ஒரு சராசரி பிரமிடின் எடையென்று எடுத்துக்கொண்டால் அது 54 இலட்சம் டன்னாகும். பிரமிடுகள் கட்ட உபயோகித்திருக்கும் ஒரு கல்லின் சராசரி எடை இரண்டரை டன்னாகும். மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு இலட்சம் மனிதர்களைக்கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ... இல்லை... வேற்றுக்கிரக வாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)
பிரமிடுகள் கட்டப்பட்ட கற்களின் அளவை இந்தப்படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்...

பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள். இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள் அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த மர்மமாகவே ஆராயப்படுகிறது.





எகிப்தின் மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!
பயிர் வட்டங்கள்

2012 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான். 



பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது. இரவுப்பொழுதில் வெளிச்சம் இல்லாமல் சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் எந்தவொரு வாகனமோ, மனிதக்காலடியோ, இல்லை இயந்திரத்தின் தடயமோ இல்லாமல் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாக்கப்படுவது மர்மத்திலும் மர்மமே. அதுவும் சில ஆராய்ச்சிகளில் இந்த பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்ட இடத்தின் மண் மட்டும் பாறைப்படிவம் போல மாறியிருப்பது மர்மத்தின் உச்சம். ஏனென்றால் ஒரு சாதாரண மண் இறுகிப் பாறைபடிவம் போல மாறவேண்டுமென்றால் அதற்கு இயற்கையாய் 1000 ஆண்டுகளுக்குமேல் தேவைப்படும். இப்படி ஒரேயிரவில் பாறைப்படிவம் போல மாறவேண்டுமானால் கிட்டத்தட்ட 8000 டிகிரி வெப்பத்தில் மண்ணை சூடுபடுத்தவேண்டும். அவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படும் பட்சத்தில் அந்த இடமே சின்ன புல் பூண்டு கூட இல்லாமல் பஸ்பமாகிவிடும். மேலும் இதேப்போன்ற பயிர் வட்டங்களை மனிதர்களைக்கொண்டு உருவாக்க நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு சாதாரண உருவத்தை பகல் வெளிச்சத்தில் உருவாக்கவே 5நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கிறது. அதைவிட முக்கிய விஷயம் மனிதர்களைக்கொண்டு இந்த முயற்சியைச் செய்தபோது பயிர்கள் நிறைய உடைபட்டிருக்கின்றன. மனிதர்களின் சேற்றுக்காலடித்தடங்கள் பயிர்களில் பதிந்திருக்கின்றன. ஆனால் உண்மையான பயிர்வட்டங்களில் பயிர்கள் மடக்கப்பட்டிருந்தாலும், வளைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஒரு பயிர்கூட சேதப்பட்டிருக்கவில்லை என்பது கூடுதல் ஆச்சர்யம். 

இந்தப் பயிர் வட்டங்கள் இரவு நேரத்தில் வானத்திலிருந்து வரும் ஒரு ஒளிக்கற்றையால் உருவாக்கப்படுவதாகவும், வேற்றுக்கிரக வாசிகளின் வாகனம் இறங்கிச் சென்ற தடையங்களே இந்தப்பயிர் வட்டங்கள் என்றும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் செல்லும் மிருகங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் கடிகாரம் வேகமாகவும், மெதுவாகவும் மாறி மாறிச்சுற்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டங்களுக்குள் நுழையும்போது தலைச்சுற்றல் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டத்துக்குள் நுழைந்ததும் தங்கள் உடம்பிலிருந்த நோய்கள் சரியானதாகவும் வித விதமான மர்மக்கதைகள் நமக்கு மயக்கத்தையே வர வைக்கின்றன. 


எனினும் வெறும் காகிதத்திலேயே வரையச் சிரமப்படும் பல டிசைன்கள், பயிர்களில் சேதமில்லாமல் உருவாகியிருப்பது மர்மமான ஆச்சர்யம்தான்.














பயிர் வட்டங்கள் பற்றிய மேலும் பல சுவாரசியத்தகவல்களுக்கும், புகைப்படங்களுக்கும் இந்த வெப்சைட்டில் பார்க்கவும்...

ஸ்டோன் ஹென்ஜ்

உலகின் தீரா மர்மங்களில் ஸ்டோன் ஹென்ஜ் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல் சிறப்பு.
ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணீத்தீர்களேயானால், ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின் மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள் ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும்.  




இது உருவாக்கப்பட்ட விதமாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட தகவல்கள் இதுதான்...


1)   முதலில் கி.மு.3100ம் ஆண்டில் மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன.


2)   அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் இந்த கல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய கருங்கற்கள் கிட்டத்தட்ட 240மைல் தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள் இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும் என்பது மர்மமே. இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள் முற்றுபெறாத ஒரு இரட்டை வட்ட வடிவில் மிட்சம்மர் சூரிய உதயத்திற்கு அலைன்மெண்ட் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.


3)   இதன் முன்னர் மூன்றாவது நிலையாக கி.மு.2000வது ஆண்டில் மேலும் சில கற்கள் 25மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது.


4)   இதன் பின்னர் மேலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சிலரால் இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்ட வடிவத்தில் இந்தக்கற்கள் மறுஒழுங்கு செய்யப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது.



இன்று வரையிலும் இந்தக்கற்கள் அடுக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் எந்தவொரு முடிவையும் எட்டவில்லை. இது ஒரு வழிபாட்டுத்தலம், வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர், சுடுகாட்டு மயானம் என்று விதவிதமான கதைகள் திரிந்தாலும் இது இன்னமும் தீர்க்கப்படாத ஒரு மர்மம்தான்!!!


நகரும் கற்கள்
செயிலிங் ஸ்டோன் என்றழைக்கப்படும் இந்த கற்கள் விலங்குகளோ இல்லை மனிதர்களோ இல்லாமல் தானாகவே நகர்ந்து நீண்டதொரு பாதையில் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன. இவைகளைப் பற்றிய தகவல்கள் பலவிதமான எண்ணிக்கையில் அமேரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ரேஸ் ட்ராக் பிளேயா, டெத் வேலி என்ற இடத்தில் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கற்கள் வெறும் நேர் கோட்டில் மட்டுமே நகராமல் வளைவுகளுடன் நகர்வது மேலும் மர்மமே. இவற்றில் ஒரு சில கற்கள் 700 பவுண்டு வரை எடை உள்ளவை என்பது கூடுதல் தகவல். இவைகளின் நகர்வுக்கு பின்னால் உள்ள சக்தி இன்னமும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் ஆராய்ச்சிக்குரியதாகவே நீடித்துக் கொண்டிருப்பது தீராத மர்மமே!


மரண பள்ளத்தாக்கில் தானாக நகரும் பாறைகள்.. ஆவிகளின் சேட்டையா, விஞ்ஞான புதிரா? அரிய இங்கே <<கிளிக்>> செயுங்கள்   



இரும்புத்தூண் – டெல்லி


ஆச்சர்யத்திற்குரிய விஷயமிது. உலகின் தீரா மர்மங்களைப்பற்றி அலசிக்கொண்டிருந்தபோது அதில் இடம் பெற்றிருக்கும் நமது இந்தியாவின் இரும்புத்தூண் நான் எதிர் பார்க்காத... என்னை வியக்க வைத்த விஷயம்.

டெல்லியில் இருக்கும் குதுப்மினார் பற்றி நம்மில் பலபேர் அறிந்திருப்போம். அதன் அருகில்தான் இந்த இரும்புத்தூணும் அமைந்திருக்கிறது. 2000 வருடங்களுக்கும் மேலாக பழமையானதாக கருதப்படும் இந்தத்தூண் 98% சுத்தமான இரும்பினால் செய்யப்பட்டு எவ்வித பாதுகாப்பு பூச்சுகளுமின்றி திறந்தவெளியில் துளியளவும் துருப்பிடிக்காமல் இருப்பது இன்றளவும் தீர்க்கப்படாத மர்மமே !.


இரும்புத்தூணையும், ஃஈபிள் டவரையும் பற்றிய ஒரு சிறிய ஒப்பீடு உங்கள் பார்வைக்கு...



பிமினி ரோடு

பிமினி ரோடு அல்லது பிமினி சுவர் என்றழைக்கப்படும் இந்த விஷயம் பஹாமா மாகாணத்தின் வடக்கு பிமினித்தீவில் தண்ணீருக்கடியில் கண்டறியப்பட்ட ஒரு பாறைப்படிவமாகும். 0.8 கி.மீ நீளமுடன் கூடிய இந்தச்சுண்ணாம்பு பாறை படிவத்தில் காணப்படும் சதுரமான பாறைகளாலான ரோடு போன்ற அமைப்பும், படிக்கட்டுகள் போன்ற அமைப்பும், தூண்கள் போன்ற அமைப்பும் இதைச்சுற்றிய ஏராளமான மர்மக்கதைகளுக்கு காரணமானதாய் அமைந்திருக்கிறது.



அட்லாண்டிஸ் என்ற புராதன நகரம் காணாமல் போனதான வரலாறுகள் மேலைநாட்டில் திரைப்படங்களிலும், நாவல்களிலும் பிரசித்தபெற்றவை. கதைகளில் இருக்கும் புராதன அட்லாண்டிஸ் நகரம்தான் பிமினியின் தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட படிவங்கள் என்ற கதையும், இது இயற்கையாக உருவான படிவமா... இல்லை மனிதர்களால் உருவாக்கப்பட்டு கடலுக்குள் புதையுண்ட நகரமா என்பது இன்றளவும் ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட தீரா மர்மமாகவே நீடிக்கிறது.


இந்தியாவிலும் இதேப் போல துவாரகா என்ற புராதன நகரம் கடலுக்கடியில் மூழ்கியிருப்பதாய் நிலவும் கதைகள் உங்களுக்கான கூடுதல் தகவல்!


இன்கா தங்கப்புதையல்


 லத்தின் அமெரிக்காவில் மத்திய ஈகுவடாரில் அமைந்திருக்கும் அடர்ந்த மலைப்பிரதேசத்தின் குகைகளில் டன் கணக்கில் தங்கப்புதையல் இருப்பதான கதைகளின் பின்னனி சுவாரசியமான வரலாறு.


1532ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ என்பவரின் தலைமையில் ஸ்பானீஷ் படையொன்று இன்கா பேரரசரை சிறைபிடிக்கும் முயற்சியில் முன்னேறியது. ஏற்கனவே இன்கா பேரரசில் அப்போதுதான் சகோதர யுத்தம் நடந்து தனது சகோதரர் குயாஸ்கரை வீழ்த்தி அரியணையில் அமர்ந்திருக்கிறார் அதூல்பா. ஏற்கனவே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் களைப்படைந்து போயிருந்த இன்கா படைகள் ஸ்பானீஷ் படைகளிடம் எளிதாய் வீழ்ந்திருக்கிறது. அதூல்பா இன்கா தலைநகரான கஜமார்காவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்.


தன்னை விடுவித்தால் அதற்கு ஈடாக மலை மலையாக தங்கம் தருவதாக பிஸ்ஸாரோவிடம் பேரம் முடித்திருக்கிறார் அதூல்பா. அதன்படி தங்கள் அரசரை விடுவிப்பதற்காக இன்கா பேரரசு முழுவதுதிலுமுள்ள மக்களிடமிருந்து தங்கமும் வெள்ளியுமாய் பெறப்பட்டு அவை இரண்டு தவணையாக பிஸ்ஸாரோவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. விதவிதமான தங்க கைவினைப்பொருட்கள் முதல் தவணையில் ஒப்படைக்கப்பட்டவுடன் பிஸ்ஸாரோ அந்த அழகிய தங்க வைவினைப்பொருட்கள் அனைத்தையும் உருக்கி தங்கக்கட்டிகளாய் ஸ்பெயினுக்கு அனுப்பி விட்டு இரண்டாவது தவணையைப் பற்றி அறியாமல் தனது வாக்குறுதியைக் மீறி இன்கா பேரரசர் அதூல்பாவை ஆகஸ்ட்-29, 1533 அன்று இன்கா தலைநகரான கஜமார்காவிலேயே கொன்று தீயிலிட்டு கொளுத்தியிருக்கிறான்.

கிட்டத்தட்ட 60,000 பணியாட்கள் மூலம் 750 டன் தங்க கைவினைப்பொருட்களை இன்கா தலைநகரை நோக்கி சுமந்து வந்து கொண்டிருந்த இன்கா ஜெனரல் ருமினாஹீய், இன்கா பேரரசர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் தங்கம் மொத்தத்தையும் ல்லங்கானேட்ஸ் என்ற  ஈகுவடாரின் மலைப்பிரதேசத்துக்கு எடுத்துச்சென்று மறைத்துவிட்டார். அதற்குப் பின்னர் இன்கா ஜெனரல், ஸ்பானீஷ் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு, சிறைபிடிக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இன்கா தங்கத்தை வைத்த இடம் பற்றி எவ்விதத் தகவலையும் கூறாமல் அந்த மர்மப்புதையலை தனது மரணத்தோடு சேர்த்தே மறைத்து கொண்டார்.



தொடர்ந்து வந்த காலங்களில் இன்று வரையிலும் தங்க வேட்டைக்காக பலவிதமான தேடல்கள் நடந்து கொண்டேயிருந்தாலும் எல்லாமே வெறுங்கையாகவே முடிந்த கதைகள் இன்கா தங்கப்புதையலை இன்னமும் தீரா மர்மமாகவே நீட்டித்திருக்கிறது.


நாஸ்கா கோடுகள்


 புராதன உலகத்தின் முக்கிய மர்மங்களுள் ஒன்றாக விளங்கும் நாஸ்கா கோடுகள் தெற்கு பெருவில் உள்ள நாஸ்கா சமவெளியில் காணப்படுகின்றன. இந்தக்கோடுகள் முதன்முதலில் உலகுக்குத்தெரிய வந்தது கமெர்ஷியல் ஏர்லைன்ஸ் சேவைகள் பெரு சமவெளியின் மீது பறக்கத்தொடங்கிய 1920ம் ஆண்டில்தான். இந்தக்கோடுகள் கி.பி.400 லிருந்து 600ம் ஆண்டுக்கு மத்தியில் வரையப்பட்டதாய் கணக்கிடப்பட்டிருக்கிறது. உலகில் இதுபோல இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில வரைபடங்கள் காணப்பட்டாலும் முன்னூறுக்கும் அதிகமாய் ஒரேயிடத்தில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட காரணம்தான் நாஸ்காவின் முக்கியத்துவத்துக்கு அடிப்படையாகும். வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே புலப்படக்கூடிய அளவுக்கு சில வரைபடங்கள் 1000அடி நீளத்திற்கும் மேல் வரையப்பட்டிருப்பது அறிவியல் கண்டுபிடிப்புகளற்ற 400ம் வருடத்தில் என்பதுதான் நம்ப முடியாத ஆச்சரியம்.



இதே காரணம்தான் இதைப்பற்றிய பல மர்மகதைகளுக்கும் வித்தாகிப்போனது. பலர் இதை வேற்று கிரகவாசிகளின் விமானத்தளம் என்றே வாதிக்கின்றனர். அதற்கு காரணம் இதன் ஒருசில வரைபடங்கள் மாடர்ன் விமானநிலையத்தின் பார்க்கிங் அமைப்பை ஒத்திருப்பதாய் அமைந்திருப்பதேயாகும்.


ஒரு சிலர் இதை நாஸ்கா மக்கள் தண்ணீருக்காக கடவுளிடம் வழிபாட்டு நடத்துவதற்காக உருவாக்கிக்கொண்ட வரைபடம் என்கிறார்கள். ஒருசிலர் இதை ஈமச்சடங்குகளுக்கான ஏரியாவாக வாதிக்கின்றனர்.


ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் இதை வானவெளி பற்றிய காலண்டர் என்று வாதிக்கின்றனர்.



எது எப்படியிருந்தாலும் வெறும் மணல்வெளியில் வரையப்பட்டிருக்கும் இந்த கோடு வரைபடங்கள் காலங்கள் பல கடந்தும் அழியாமல், முழுக்காரணமும், வரையப்பட்ட விதமும் தெரியாமல் வீற்றிருப்பது நிச்சயமாய் மர்மமே!


பெர்முடா முக்கோணம் 


பெரும்பாலும் இதைப் பற்றிய தகவல் தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நார்த் அட்லாண்டிக் கடலின் மேற்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்பரப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களும், விமானங்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும்  மர்மமான முறையில் காணாமல் போயிருக்கின்றன. குறிப்பிட்ட இந்த முக்கோணப்பகுதிக்குள் நுழையும் கப்பல்களோ... இல்லை இதற்கு நேர் மேற்பரப்பில் பறந்த விமானங்களோ இதுவரை என்னவாயிற்று என்றே தெரியாமல் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது.


பலவித ஆராய்ச்சிகளுக்குப்பிறகும் பெர்முடா முக்கோணம் அறிவியல் சம்பந்தப்பட்ட காரணமா... இல்லை அமானுஷ்ய சக்திகளின் காரணமா என்பது இன்னமும் புரிபடாமல் நீடிப்பது கண்டிப்பாய் தீராத மர்மம்தான் !

அது பற்றி முழுமையாக அறிய இங்கே <<கிளிக்>> செயுங்கள்  



மாயன் காலண்டர் 

மாயன் காலண்டர்... 2012ம் ஆண்டை பற்றிய மர்மத்தை தாங்கி நிற்கும் கல்வெட்டு இது. ஒரு சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி மாயன் என்ற இனத்தால் கடைபிடிக்கப்பட்டு வந்த காலண்டர் இது என்றும், இந்த காலண்டர் டிசம்பர் 21, 2012 அன்றோடு முடிவதாகவும் அதுதான் உலகம் அழியும் நாளாக மாயன் இனத்தவரால் கணிக்கப்பட்ட நாள் என்றும் பரவிய செய்திதான் இன்று இந்த விஷயத்தை உலகின் டாப் லிஸ்ட் மர்மங்களில் ஒன்றாக்கியிருக்கிறது.


இருந்தாலும் பல அறிவியலாளர்களால் மாயன் காலண்டர் சமாச்சாரம் உண்மையில்லை என்று மறுக்கப்பட்டிருக்கிறது. நமது காலண்டர் எப்படி டிசம்பர்-31 ல் முடிகிறதோ அதேப்போல இந்த காலண்டருக்கும் இருக்கும் முடிவுதான் இது. மற்றப்படி டிசம்பர்-21, 2012ல் உலகம் அழிவதற்கான எவ்வித அறிவியல் கூறுகளும் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருக்கிறது. 


எனினும் 2012 திரைப்படம் உலகம் முழுக்க வசூலை அள்ளிக் குவித்த காரணமே மக்கள் மனதில் மாயன் காலண்டர் விதைத்த மர்மம்தான் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை...
மாயன்களை பற்றி முழுமையாக அறிய இங்கே <<கிளிக்>> செயுங்கள் 


பறக்கும் தட்டுகள்


உலகின் தீர்க்கப்படாத மர்மங்களின் டாப் லிஸ்ட்டில் இந்தப் பறக்கும் தட்டுகள் பற்றிய செய்தியும் இடம் பெறுவதற்கு இதைப் பற்றிய கதைகளும், மக்களுக்கு வேற்று கிரகவாசிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களின் மீதிருக்கும் ஈர்ப்புமே முக்கியக்காரணம்.

பறக்கும் தட்டை பார்த்ததாய் பதியப்பட்ட முதல் செய்தி 1878ம் ஆண்டுதான். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் விவசாயி ஒருவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது வட்டவடிவில் ஏதோவொன்று மிக அதிவேகத்தில் பறந்து சென்றதை பார்த்ததாகக் கூறினார். அதன் பின்னர் 1916ம் ஆண்டு இங்கிலாந்தின் ஃபைலட் ஒருவர் தான் விமானம் ஓட்டிக்கொண்டிருந்தபோது நெருப்பு பந்து போன்ற ஏதோவொன்று பயங்கர வெளிச்சத்துடன் பறந்ததை பார்த்ததாகத் தெரிவித்தார்.



1950களுக்குப் பிறகு சயின்ஸ் ஃபிக்சன் கதைகளின் மூலம் இந்தப்பறக்கும் தட்டுகள் மேலும் பிரபலமடைந்தன. பறக்கும் தட்டுகள் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட உளவு விமானம் என்றும், ரஷ்யாவினால் ஏவப்பட்ட உளவு விமானம் என்றும் எதிர்வாதங்களும் கிளம்பின.
இந்தியாவிலும் பறக்கும் தட்டை பார்த்ததாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
டெல்லியில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள்...


தமிழ்நாட்டில் பொள்ளாச்சி அருகே எடுக்கப்பட்ட புகைப்படம் இது...


என்னதான் ஆராய்ச்சிகளும், மறுப்புகளும் தொடர்ந்து உருவானாலும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாய் நம்பும் பூமிக்கிரகவாசிகளின் மனதில் பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகளும், படங்களும் இன்னமும் அவிழாத மர்ம முடிச்சாகவே நீடித்திருக்கிறது.


இதுவரை பார்த்தவை உலகின் வெறும் ஹிட் லிஸ்ட் தீரா மர்மங்கள் மட்டுமே... மற்றபடி உலகின் மொத்த மர்மங்களையும் பற்றி அறிய நினைத்தால் அது கணக்கிலடங்கா கதைகளுடன் நமது தெரு எல்லை வரைகூட வரலாம்... உண்மையிலேயே இவை மர்மங்களோ... இல்லையோ... ஆனால் இவற்றைப்பற்றிய செய்திகளும், படங்களும் ஒரு சிறந்த மர்மப் பொழுதுபோக்குகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமிருக்காது என்று நம்புகிறேன்...


முடிந்தால் அடுத்த பதிவில் ’இந்தியாவின் தீரா மர்மங்கள் – டாப் லிஸ்ட்’’