Tuesday, August 18, 2015

குண்டாறு – அமைதியான சுற்றுலாத் தலம்

குண்டாறு – அமைதியான சுற்றுலாத் தலம்





 செங்கோட்டையில் இடதுபுறம்
ஐந்துகல் தொலைவில்
குண்டாறு அணை...!
சொந்த வாகனங்கள் அதோடு நிறுத்தம்!


அருகே அழகான பெரிய அணை 


அழகான சோலை வனமாக காட்சி 
அளிக்கும் ரம்மியமான அணையை  விட்டு 
வேறு பாதையில் சென்றால்     
   
மலை மேல் கரடுமுரடான பாதையில்
ஜீப் கார் பயணம்..!

பசுமையான சோலை வனதில்  
அற்புதமான  ட்ரக்கிங் அனுபவம்.

செல்லும் பாதையில் சிரிய காட்டாறு 
கண்ணாடி  போன்ற பளபளவேன்ற நீர்,  

       

முதல் அருவி அரசு அருவி..இலவசக் குளியல்!
அதுவரை நடந்தும் வரலாம்..பெண்களும் கூட!


அதற்கு மேலாக பாதையில்
ஆடி உலுக்கிச் சென்றால்..
அரைமணி நேரம் இரண்டுகல் தூரம்
அடுத்து அடுத்து இரண்டு அருவிகள்..
ஆர்ப்பாட்டமில்லா அருவிகள்..
ஏகாந்தமாக..
ஒரு சமயத்தில் ஒரு குழு மட்டுமே!
கொண்டாடத் தடை ஏதுமில்லை!

மலையில் இருக்கும் எஸ்டேட்களுக்கு சொந்தமானவை..!
கூட்டத்தைக் குறைக்க வேண்டி
அனுமதியும் வெகுமதியும் தேவை!
வண்டிக்கும் குளியலுக்கும்
இரண்டாயிரம் வரை தேவை..!
ஒரு குழுவிற்கு..!
சுமார் எட்டுநபர் வரை!
அல்லது ஒரு வாகனத்தில் வருபவர்க்கு!


பிரதான அருவிக் குளியல் அளவு
இல்லை எனினும்
பிரமிப்பூட்டும் அனுபவம் நிச்சயம்..!

முடிந்தால் சென்று வாருங்கள்..!
குழுவாகச் செல்வது நல்லது..!


குற்றாலம் சென்றால் மறக்காமல் செல்லுங்க 
 குண்டாறுக்கு  

Wednesday, August 12, 2015

பிஎப் தொகையை கணக்கிடுவது எப்படி? ரொம்ப ஈசி பாஸ்

பிஎப் தொகையை கணக்கிடுவது எப்படி? ரொம்ப ஈசி பாஸ்


நாம் ஒவ்வொருவரும் மாதம் தவறமல் விரும்பியோ அல்லது விரும்பமலோ சேமநல நிதிக்காக (provident fund) ஒரு தொகையை நாம் பணிபுரியும் நிறுவனத்தில் செலுத்தி வருகிறோம். இது நாம் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது நம் கணக்கை புதிய நிறுவனங்களுக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் இப்போது உள்ளது. 

சரி, இந்த சேமநல நிதி எப்படி கணக்கிடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா??

சேமநல நிதி 


ஒரு பணியாளரின் சம்பளத்தில் 12 சதவீதத்தை நிறுவனவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது பழைய முறை. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. ஒரு பணியாளரின் சம்பளம் மற்றும் கிராக்கிப்படி எனப்படும் DAவும் இணைந்து 12 சதவிதாம் செலுத்த வேண்டும்.

உதாரணம் 

மணிகண்டனன் என்னும் நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் இவரின் அடிப்படை சம்பளம் மாதம் 30,000 ரூபாய், போக்குவரத்து படியாக 5,000 ரூபாய் மற்றும் மருத்துவ படியாக 5,000 ரூபாய். இவரின் சேமநல நிதி எவ்வளவு என்பதை இப்போது 

பழைய முறை 



பழைய முறைப்படி மணிகண்டனின் மாத வருமானத்தில் சேமநல நிதி 30,000 ரூபாய்க்கு மட்டுமே கணக்கிடப்படும், ஆதாவது அவரின் அடிப்படை சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்படும். இதனால் இவர் மாதம் 3,600 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இபிஎஃப் = 30,000*12/100= 3,600 ரூபாய்

புதிய முறை 



புதிய முறைப்படி மணிகண்டனின் மாத வருமானத்தில் சேமநல நிதி போக்குவரத்து படி மற்றும் மருத்துவ படியையும் சேர்த்து 40,000 ரூபாய்க்கு கணக்கிடப்படும். இதனால் இவர் மாதம் 4,800 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இபிஎஃப் = 40,000*12/100= 4,800 ரூபாய்

Thursday, August 6, 2015

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் ஒரு முழு வரலாறு - II


 ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் ஒரு முழு வரலாறு - II

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...



காலை 7.30 மணி. 

ஹிரோஷிமாவில் விழும் வழக்கமான அமெரிக்க போர் விமான குண்டுகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க தடுப்புகளை உருவாக்கும் வேலையில் ஜப்பானிய குழந்தைகளும் ஈடுபடுவது வழக்கம். பள்ளிக்குச் செல்லும் முன் வழக்கம்போல இந்தப் பணியில் பங்கேற்க 12 வயதான சுமார் 8,000 பிஞ்சுகள் ஹிரோஷிமாவின் மையப் பகுதியில் உள்ள Aioi Bridge பாலம் அருகே கூடுகின்றனர். 


7.50 மணி 

எல்லோரும் தயாராகுங்கள். அணுகுண்டு வீச்சின் ஒளி கண்ணைப் பறிக்கும். இதனால் அந்த சிறப்பு கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள். ஒளி அடங்கும் வரை யாரும் அதைக் கழற்றக் கூடாது. கதிர்வீச்சிலிருந்து தப்ப உதவும் உடைகளையும் அணியுங்கள் என உத்தரவிடுகிறார் பைலட் டிபிட்ஸ். 

8.12 மணி 

ஜெர்மனியில் 60 முறை விமானம் மூலம் குண்டுகளை வீசி அனுபவம் வாய்ந்த மேஜர் தாமஸ் ப்ரீபீ தான் லிட்டில் பாய் குண்டை ஹிரோஷிமா மீது போட வேண்டும். தனது டார்கெட்டான Aioi Bridge பாலத்தை நோக்கி தனது பார்வையைத் திருப்புகிறார். விமானம் மணிக்கு 420 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்க, இன்னும் 3 நிமிடம் தான் பாக்கி என அறிவிக்கிறார் பைலட். அணுகுண்டை செயல்பட வைத்த தாமஸ் 3 நிமிடங்கள் 43 நொடி என டைமரை செட் செய்கிறார்.

8.15 மணி 


எனோலா கே விமானத்தின் பாம் கதவுகள் திறக்க, லிட்டில் பாய் அணுகுண்டு கீழே பாய, 43 வினாடிகளை கவுண்ட் டவுன் செய்ய ஆரம்பிக்கிறது எனோலா கே விமானக் குழு. 31,000 அடிக்குக் கீழே ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகள், முதியோர், பள்ளிச் சிறார்கள் என பல தரப்பட்ட மக்களும் தங்கள் அன்றாட வாழ்வில்... 

சரியாக தரையிலிருந்து 1,890 அடியை எனோலா கே எட்ட, 43 வினாடிகள் முடிய... இதுவரை உலகம் பார்த்திராத ஒரு மாபெரும் ஒளிப் பிழம்பு. 

இதுவரை கேட்டிராத ஒரு மாபெரும் ஒலி. அந்த குண்டு வெடித்த மையப் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவில் இருந்த மனிதர்கள், விலங்குகள் அனைத்தும் பஸ்பமாகிவிட, கட்டிடங்கள் சிதறி விட ஒன்றுமே மிச்சமில்லை. 

அடுத்த சில வினாடிகளில் அணுகுண்டின் ஒளி மறைய, ஹிரோஷிமாவை ஆக்கிரமிக்கிறது கடும் இருளும் புகை மூட்டமும். மயான அமைதி. அதே நேரத்தில் குண்டுபோட்ட எனோலா கே விமானம் கதிர்வீச்சிலிருந்து தப்ப உயரத்தை அதிகரித்தபடியே, எதிர் திசையில் பறக்க அவர்களையும் விரட்டுகிறது அணுகுண்டு வெடிப்பின் அதிர்வலைகள். 

கீழே குண்டு வெடித்த இடத்திலிருந்து அதன் அதிர்வலைகள் எல்லா பக்கமும் பரவியபடி, வழியில் இருந்த உயிர்கள், கட்டிடங்களை நிர்மூலமாக்க, துணை விமானியான லூயிஸ், நாம் என்ன காரியம் செய்துள்ளோம். கீழே என்ன நடக்கிறது. எத்தனை பேரை கொன்று கொண்டிருக்கிறோம் என தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அலற, விமானத்தில் இருந்த அனைவரிடத்திலும் அதே கேள்விகள். இப்படி ஒரு சேதமா என தாங்களே வெறித்தபடி வேகமாக அமெரிக்கா நோக்கி திரும்புகிறது எனோலா கே.


இந்த தாக்குதலில் உடனடியாக பஸ்பமானவர்கள் சுமார் 1 லட்சம் பேர். கதிர்வீச்சால் உடல் எரிந்து, தோல் எரிந்து போய், உடல் திசுக்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டு அடுத்த நாட்களில், வாரங்களில், மாதங்களில் பலியானவர்கள் மேலும் 1 லட்சம் பேர். குண்டுவெடித்ததில் ஏற்பட்ட பயங்கரமான அதிர்வலையில் பல பேரின் கண்கள் அவர்களின் கண் குழிகளில் இருந்து வெளியேறி தொங்கியது தான் மகா கொடூரம்.

10 மணி. 

நாம் அமெரிக்காவில் தரையிறங்கும்போது ஜப்பான் சரணடைந்திருக்கும் என பேசியபடியே எனோலா கே விமானக் குழுவினர் பறந்து கொண்டிருக்க, ஜப்பான் சரணடைய மறுக்கிறது. இதையடுத்து அடுத்த 10 நாளில் நாகசாகி நகரிலும் இன்னொரு அணுகுண்டைப் போடுகிறது அமெரிக்கா. 

அடுத்த இரு வாரங்களில் செப்டம்பர் 2ம் தேதி அமெரிக்காவிடம் சரணடைகிறது ஜப்பான். ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு போடப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் முடிகின்றன. 

இன்று காலை 8.15 மணிக்கு, அணுகுண்டு வெடித்த அதே நேரம், இன்று ஒட்டுமொத்த ஜப்பானிய மக்களும் 2 நிமிடம் மெளனமாய் நின்று மறைந்த அந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

ஹிரோஷிமாவில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ''உலகிலேயே அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு நாம் தான். இதனால் உலகத்தில் அணுகுண்டே இல்லாத நிலையை உருவாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் உள்ள நாடும் நாம் தான்''. 

''என் வாழ்விலேய நான் செய்த மிகப் பெரிய தவறு, அணுகுண்டு தயாரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்து போட்டது தான். ஜெர்மன் அணுகுண்டு தயாரித்துவிடும் என்ற சந்தேகத்தில் தான் நான் இதைச் செய்து விட்டேன்...'' இப்படி மனம் வருந்தியது ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டதால் வேதனை அடைந்த அணுகுண்டு உருவாக காரணமான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். 

ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட நிலையில், ஜப்பானும் கிட்டத்தட்ட தோல்வி அடையும் நிலையில் தான் இருந்தது. இந் நிலையில் அணுகுண்டு போட்டுத்தான் தான் ஜப்பானை அடக்கியிருக்க முடியும் என்ற சூழல் அப்போது இல்லை. ஆனாலும் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. 

ரூஸ்வெல்ட், ஹாரி ட்ரூமென் ஆகியோர் காலத்தில் கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் வில்லியம் லே, ''போரில் ஈடுபடாத குழந்தைகளையும் பெண்களையும் பஸ்மாக்கித் தான் வெற்றி பெற முடியும் என்றால், அந்த வெற்றி எனக்குத் தேவையில்லை''

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் ஒரு முழு வரலாறு - I

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் ஒரு முழு வரலாறு - I


மனிதம் மரித்த அந்த நாள்  


ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் பெர்லின் நகரை சுற்றி வளைத்துவிட, அங்கே பங்கரில் பதுங்கியிருந்த ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதையடுத்து ஹிட்லரின் படைகள் நேரடியாக போரை நிறுத்திவிட்டாலும் ஆங்காங்கே சிறிய அளவில் அமெரிக்கக் கூட்டணி, சோவியத் யூனியன் படைகளுடன் மோதிக் கொண்டிருந்தன. 

மே 8, 1945. இந் நிலையில் ஜெர்மனியின் முப்படையினரும் மே 8ம் தேதி அமெரிக்க- பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் சோவியத் யூனியனிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இத்தோடு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. 

ஆனால், அமெரிக்க கூட்டுப் படையினரிடம் ஜப்பான் சரணடைய மறுக்கவே இரண்டாம் உலகப் போர் பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தது. இதையடுத்து ஜூலை 26ம் தேதி ஜப்பானுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகியவை ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்தன. உடனடியாக சரணடையாவிட்டால் ஜப்பான் மீது அழிவு மிகுந்த தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது Potsdam Declaration எனப்படும் அந்த எச்சரிக்கை. இதை ஜப்பான் நிராகரித்துவிட்டது. 

முன்னதாக 1941ம் ஆண்டில் டிசம்பர் 7ம் தேதி ஹவாய் தீவில் உள்ள தனது பியர்ல் ஹார்பரில் நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டு ஜப்பான் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களைக் கொன்றதோடு, நூற்றுக்கணக்கான போர்க் கப்பல்களையும் மூழ்கடித்ததற்கு பதிலடி தருவதில் ஆவேசமாக இருந்தது அமெரிக்கா. 

(பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் ஏன் தாக்குதலை நடத்தி அமெரிக்க கப்பற்படையின் பசிபிக் பிரிவையே நீருக்குள் மூழ்கடிக்க வேண்டும்... 
இந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த அமெரிக்கக் கடற்படை, ஜப்பானின் கடல் வழி வர்த்தகத்தை முடக்கலாம் என்ற சந்தேகம் தான்) ஜப்பான் மீது உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த அன்றே திட்டமிட்டது. 


Manhattan Project என்ற பெயரிலான இந்தத் திட்டம் மூலம் தான் உலகிலேயே முதன்முதலாக அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. இதில் கனடாவும் இங்கிலாந்தும் அமெரிக்காவுக்கு முழு அளவில் உதவின. விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள், உளவுப் பிரிவினர், ஆயுத நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் லெஸ்லி குரோவ்ஸ் அணு விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் ஆகியோர் தலைமையில் மிக ரகசியமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 நியூமெக்சிகோ பாலைவனத்தில் முதல் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடக்க, அணுகுண்டை ஏந்திச் செல்ல வசதியாக போயிங் B-29 Superfortress போர் விமானங்களை மாற்றி வடிவமைக்கும வேலையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

ஆகஸ்ட் 6, 1945. 
அமெரிக்காவின் மியாமி நகரில் 57 வயதான எனோலா கே தன் வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்க, அவரது பெயர் சூட்டப்பட்ட ஒரு B-29 Superfortress போர் விமானம் லிட்டில் பாய் என்ற அணுகுண்டை ஏந்தியபடி டினியன் என்ற பசிபிக் தீவில் இருந்து அதிவேகத்தில் கிளம்புகிறது. 

அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தது ஏனோலா கேவின் மகனான பைலட் பால் டிபிட்ஸ். இவரது தலைமையிலான டீம் தான் ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டைப் போட்டது. 

விமானத்துக்கு தனது தாயாரின் பெயரை சூட்டியது இவர் தான். 

யுரேனியம் கன்-டைப் அடிப்படையிலான இந்த லிட்டில் பாய் அணுகுண்டு 10 அடி நீளம் கொண்டது. 5 டன் எடை கொண்ட இந்த குண்டு 20,000 டன் டி.என்டி வெடிப்புக்கு சமமானது. 6 மணி நேர பயணத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு மேகக் கூட்டங்களில் மாறி மாறி நுழைந்து, வெளியேறி என ஜப்பானை நெருங்கியது எனேலோ கே. ஹிரோஷிமாவை நெருங்க நெருங்க விமானத்தின் பறக்கும் உயரமும் 31,000 அடிக்கு உயர்த்தப்பட்டது.

 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமாவில் கோடை காலம். மேகக் கூட்டங்கள் குறைவான இந்த மாதம் தான் அணுகுண்டின் தாக்கத்தை பல மடங்கு அதிகரிக்க உதவும் என்பதால் இந்த நாளை தேர்வு செய்திருந்தனர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள். 

ஹிரோஷிமாவை எனோலா கே விமானம் நெருங்கும் வேளையில், அமெரிக்காவின் வானிலை ஆய்வு விமானமான Straight Flush அங்கே தலையைக் காட்டியது. வானிலை சரியாக இருப்பதாக தகவல் தர வேகமாக முன்னேறியது எனோலா கே. முன்னதாக 1945ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே அமெரிக்காவின் B-29 போர் விமானங்கள் ஹிரோஷிமா மீது பறப்பதும், அப்போது ஆரஞ்சு வண்ணத்திலான ‘pumpkins' எனப்படும் சாதாரண ரக வெடிகுண்டுகளைப் போட்டுவிட்டுப் பறப்பதும் வழக்கமாக இருந்தது. இதனால் இந்த B-29 ரக அமெரிக்க விமானங்கள் தங்கள் நகருக்கு மேலே பறப்பதையும, ‘pumpkins' குண்டுகள் விழுவதையும் ஹிரோஷிமா மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட காலம் வந்திருந்தது. 

நகர் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தாலும் கூட B-29 போர் விமானங்கள் தங்கள் தலைக்கு மேலே பறந்தால், மக்கள் பங்கர்களுக்குள் ஓடி ஒளிவதை பெரும்பாலும் கைவிட்டுவிட்டிருந்தனர். இதைத் தான் அமெரிக்காவும் எதிர்பார்த்தது. இதனால் தான் B-29 போர் விமானங்களை வைத்து பல மாதங்கள் ஹிரோஷிமா மக்களுக்கு விளையாட்டு காட்டி ஏமாற்றி வந்தது.

தொடரும்..

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


நன்றி
A.K. கான்.

Wednesday, August 5, 2015

கரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை

கரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை


காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்த எனது தந்தை தினமும் அதிகாலையில்
கரலாகட்டை சுற்றுவது வழக்கம். இதற்காக மூன்று விதமான தேக்கு கரலாக்கட்டைகளை தினமும் காலையில் பளபளவென பாலீஷ் போட்டு வைத்திருப்பார். ஆனால், இன்றோ ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய கரலாக்கட்டை அடுப்புக்கு போய் சாம்பலாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு பதிலாக பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து, விதவிதமாக உடற்பயிற்சி கருவிகளை வாங்கி காட்சிக்கு வைத்திருக்கும் அவலமே காணப்படுகிறது. அது மட்டுமன்றி எழுதினால் கை வலி, திரும்பினால் கழுத்து வலி, குனிந்தால் முதுகு வலி, படுத்து எழுந்தால் எல்லாமே வலி என ஓடிக்கொண்டிருக்கும் அவசர வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் போய்விட்டது.ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு உடற்பயிற்சி கருவி தான் கரலாக்கட்டை. மக்கள் திலகம் 

எம்.ஜி.ஆரை நினைக்கும் போதெல்லாம் கரலாக்கட்டை தான் ஞாபகத்திற்கு வரும். வெள்ளை நிறக் கைலியை அணிந்து அதிகாலை 4 மணிக்கு அரைமணி நேரம் கரலாக்கட்டை சுற்றும் உடற்பயிற்சி தான் தனது அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணம் என்று எம்.ஜி.ஆர் சொன்னது தெரியுமா? துப்பாக்கியால் சுடப்பட்ட போது அவரது கழுத்து தசைகள் பலமாக இருந்ததால் தான் குண்டு வெளியேறாமல் தொண்டையிலேயே தங்கி அவர் உயிரை காப்பாற்றியது. ஆம், அந்த அளவிற்கு கை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு தசைகளை கல்லைப் போல் வலிமையாக மாற்றும் ஆற்றல் கரலாக்கட்டைக்கு உண்டு.

சித்த மருத்துவத்தில் 


கரலாக்கட்டைக்கும் சித்த மருத்துவத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. ஒவ்வொரு சித்த மருத்துவமனையிலும் கரலாக்கட்டையை உடற்பயிற்சி கருவியாக வைத்து, அனைத்து நோயாளிகளும் அந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என சித்த மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தேசிய தர மேம்பாட்டு நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரரின் நோய் தீர்க்கும் கோயிலில் அமைந்துள்ள கல் தூண் ஒன்று கரலாக்கட்டை சித்தரின் சமாதியாக வணங்கப்படுகிறது. கரலாக்கட்டை நமது பாரம்பரிய உடற்பயிற்சியின் அடையாளம். பீமர், அனுமார் போன்ற
களும் கரலாக்கட்டை வடிவிலான ஆயுதங்களை சுமந்து வந்ததை புராணம் மூலம் அறியலாம்.

கழுத்து வலி ஏன் 


நமது தலை மற்றும் உடலை இணைக்கும் கழுத்துப் பகுதி பலமற்ற சாதாரண எலும்புகளால் ஆனது. ஆனால் இந்தப் பகுதிகளை சூழ்ந்துள்ள தசைகளின் வலிமையால் தான் நம்மால் ஆரோக்கியமாக இயங்க முடிகிறது. மூளைக்கு போகும் ரத்த ஓட்டத்தை பாதுகாத்தல், காதுகளின் சமநிலையை நிலை நிறுத்துதல், கை, கால்களுக்கு பலம் மற்றும் அசைவை உண்டாக்குதல் மற்றும் மார்பு தசைகளை சீராக இயக்க கழுத்து மட்டுமன்றி, மேல் முதுகு, தோள்பட்டை, கை மற்றும் மார்பு பகுதிகளிலும் வலியுண்டாகிறது. கழுத்து எலும்புகள் மற்றும் தசைகள் தங்கள் இடத்தைவிட்டு சில மில்லி மீட்டர்கள் இடம் பெயர்ந்தாலே தலைச்சுற்றல், தசை இறுக்கம், விரல்களால் வேலை செய்ய சிரமம் என பல உபாதைகள் ஏற்படுகின்றன. 

தவறான முறையில் படுத்து தூங்குதல், உயரமான தலையணை வைத்திருத்தல், அளவுக்கு அதிகமாக தலையை நிமிர்த்தி கொண்டு நடத்தல், தோள்பட்டையை உயர்த்தாமல் தலையை மேலும், கீழும் அடிக்கடி அசைத்தல், கைகளை தோலுக்கு மேல் உயர்த்தாமல் குனிந்தவாறே வேலை பார்த்தல் போன்ற பல காரணங்களால் நமக்கு வலி ஏற்படுகிறது.கழுத்து வலி ஏற்பட' ஸ்டெர்னோ கிளிடோமாஸ்டாய்டு' என்ற தசையின் இறுக்கமே முதற்காரணம்.

 கரலாக்கட்டை பயிற்சி செய்வதால் டென்ஷன், தலைவலி, டென்னிஸ் எல்போ, 'ப்ரோசன் சோல்டர்',' கார்பல்டனல் சின்ரோம்' போன்ற நோய்கள் வருவது தடுக்கப்படும். தினமும் அரைமணி நேரம் கரலாக்கட்டை பயிற்சி செய்வதால் இதயத் தசைகளுக்கு கிடைக்கும் வலிமையானது தினமும் ஒரு மணி நேரம் நடப்பதற்கு சமமானது. எடை குறைவான, விலை மலிவான, எளிதல் எடுத்துச் செல்லக்கூடிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய கரலாக்கட்டை ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். எப்படி பயிற்சி செய்வது இந்தியன் கிளப் என்றழைக்கப்படும் கரலாக்கட்டை பயிற்சி மிகவும் ஆரோக்கியமானது. 

18ம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் புகுந்த ஆங்கிலேய படை வீரர்கள் இந்தியர்களின் வீரத்தைப் பார்த்து வியந்து, அவர்களிடமிருந்து கரலாக்கட்டை பயிற்சியை கற்றுக் கொண்டனர். மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களும் தசைகளை பலப்படுத்திக் கொள்ள பயிற்சிக்கு முன்பாக கரலாக்கட்டை சுற்றி தயாராவது வழக்கம். 

கருங்காலி, தேக்கு, எட்டி மற்றும் பீச் போன்ற கடினமான மரங்களால் 
கரலாக்கட்டை செய்யப்பட்டன. கரலாக்கட்டைகளின் அடியானது பருத்தும், நுனியானது சிறுத்தும் கைப்பிடி நழுவாமல் இருப்பதற்கு வளைய பிடியுடன் காணப்படுகிறது. இரண்டு கிலோ முதல் நான்கு கிலோ எடையுள்ள கரலாக்கட்டைகளை பெண்களும், நான்கு முதல் எட்டு கிலோ எடையுள்ள கரலாக்கட்டைகளை ஆண்களும் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம். 

பயிற்சியின் ஆரம்பகட்டத்தில் ஒன்று அல்லது ஒன்றரை கிலோ கரலாக்கட்டைகளை பயன்படுத்தினாலே போதுமானது. இரண்டு கைகளிலும் தனித்தனியே கரலாக்கட்டை சுற்றி பயிற்சி செய்வது நல்லது. கடிகார பெண்டுலம் போல் இடம் வலம், முன் பின், மேல் கீழ் என சுழற்றி பயிற்சி செய்யலாம்.நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு, ஒரு கையை பின்னால் மடக்கி, கால்களை அகட்டி, ஒரு காலை மடக்கி இவ்வாறு தொடர்ந்து மாற்றி, மாற்றி கரலாக்கட்டை பயிற்சி செய்யலாம். பயிற்சியின் போது பிறர் மேல் கரலாக்கட்டை பட்டுவிடாமல் இருக்க முன் பின், இடம் வலம் என குறைந்தது ஆறு அடி இடைவெளி விட்டு பயிற்சி செய்வது நல்லது. கரலாக்கட்டை பயிற்சி நமது பாரம்பரிய உடற்பயிற்சி. வீரத்தமிழர்களின் உடல் வலிமைக்கு கரலாக்கட்டையே காரணம். நாமும் தினமும் கரலாக்கட்டையை பிடிப்போம்!-

நன்றி 
டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ்,சித்த மருத்துவர்,மதுரை. 98421 67567