Tuesday, December 3, 2019

நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை?

நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை?


லப்படமில்லாத உணவு என்று தாய்ப்பாலை சொல்வார்கள். இயற்கையின் அந்தக் கொடையையும் விஷமாக்கிய அந்தக் கொடூரம் இந்தியாவில் அரங்கேறி, சரியாக 35 ஆண்டுகள் முன் இதே நாளில்.  ஆம், உலகின் சுற்றுச்சூழல் சீர்கேடு அழிவிற்கு மிகப்பெரும் மரண சாட்சியான போபால் விஷவாயு விபத்துதான் அது.

இருபதாம் நூற்றாண்டின் கொடும் விபத்தான போபால் விஷவாயு கசிவு, உலகின் மோசமான பேரழிவு நிகழ்வுகளில் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறது. 1984 டிசம்பர் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால்  நகரத்தின் வீதி விளக்குகள் மின்னத்துவங்க, மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். 900,000 மக்கள் வசித்துவரும் அந்த நகரம், சிறப்பானதொரு தொழிற் நகரமும் கூட.  
அதற்கு 4 வருடங்களுக்கு முன்புதான், அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கழகத்தின் உதவியால் பூச்சிக்கொல்லி  தயாரிக்கும் [Pesticide]​ ​ரசாயனக் கூடம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இரவின் உறக்கத்தினிடையே அந்த நிறுவனம் வழக்கமான தனது இரவுப்பணியை துவக்கியிருந்தது. இரவு 9:30 மணிக்கு இரண்டாம் ஷிப்ட் அதிகாரியின் உத்தரவுப்படி, பணிகள் நடந்துகொண்டிருந்தன.
போபால் கூடத்தில் 15,000 காலன் கொள்ளளவு கொண்ட E610, E611, E619 என்ற மூன்று மிக் கலன்களில் இரண்டில்தான் எப்போதும் மிக் திரவம் இருக்க வேண்டும். ஒரு கலன் அவசியம் காலியாய் இருக்க வேண்டும். 
ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று மூன்று கலன்களிலும் மிக் நிரப்பப்பட்டிருந்தது. பணியாளர் ஒருவர் E610 அடையாளமிட்ட மிக் கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடி, நீரைச் செலுத்தினார். பராமரிப்புப் பணியில் வாடிக்கையாகப் பைப்பைக் கழுவப் பயன் படுத்திய நீர் எதிர்பாராதவாறு, 13000 காலன் மிக் நிரப்பப்பட்ட  E610 கலனில் தெறித்து கொட்டியது. மிகச்சிறிய கவனக்குறைவு, உலகையே அச்சுறுத்திய பேரழிவாக மாறித்தொடங்கியது அந்த நிமிடத்திலிருந்துதான்.

மிக் ரசாயனம் மிகவும் வீரியமானது. கொடிய நச்சுத்தன்மைகொண்ட இது நீருடன் கலந்தால் தீவிர வெப்பத்தை வெளியாக்கும் தன்மை கொண்டது. மொத்தத்தில் மிக்,  'மரண மூட்டும் விஷ ரசாயனம் ' என்கிறது வேதியியல் நூல் ஒன்று. எப்போதாவது இப்படி வால்வுகளில் கசிவு நிகழும்போது பாதுகாப்பு நடவடிக்கையாக வட்டத் தட்டை இடையில் நுழைத்து [Isolation with Blind Flange] கலன் தனித்து விடப்பட வேண்டும். ஊழியருக்கு அது நன்கு பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று பணியாளர் கவனக்குறைவாக தட்டை அமைத்துக் கலனைத் தனித்து விடவில்லை. கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கும் இது வரவில்லை. பைப்பைக் கழுவ நீர் திறக்கப்பட்டு செலுத்தப்பட்டது.


கொஞ்ச நேரத்தில் மிக் கலனின் அழுத்தம் 2 psi ஐ தொட்டுநின்றது. 11 மணிக்கு இரவு ஷிப்ட் குழு வந்தபோது அழுத்தம் 10 psi ஆகக் கலனில் ஏறியிருந்தது. அழுத்தமானியின் எச்சரிக்கையைக்கூட இரவுப்பணி அதிகாரி அலட்டிக்கொள்ளவில்லை. இன்னும் சில மணித்துளிகளில் உலகை உலுக்கிப்போடப்போகும் விபத்தை தடுத்து நிறுத்த கிடைத்த கடைசி சந்தர்ப்பத்தை அந்த கணத்தில் தவறவிட்டார் அந்த அதிகாரி. 12:40 நள்ளிரவில் அழுத்தம் 40 psi என உச்ச நிலையை அடைந்திருந்தது. தாங்கமுடியாத அழுத்தத்தால் கலன் உப்பி உடைய ஆரம்பித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது சரியாக இரவு மணி 12:45. 
கலனின் உஷ்ணம் கூடியிருந்ததை கண்ட அவர்,  நடக்கவிருக்கும் விபரீதத்தை ஓரளவு யூகித்துக்கொண்டார். விடுவிடுவென முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மற்ற பணியாளர்களை ஆயத்தப்படுத்துவங்கினார். ஆனால் எல்லோரும் கண்களை கசக்கியபடி ஏதும் செய்யமுடியாதவர்களாக இருந்தனர். அதற்குள் விஷ வாயு கட்டுப்படுத்த முடியாத நிலையில் காட்டுத் தீ போல் பரவியது. அங்கிருந்த 120 அடி உயரப் புகைபோக்கியில் மேல் மட்டத்தில் வாயு பிதுங்கி வெளியேறியது. யோசிக்க நேரமின்றி அதிகாரிகள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
காட்டு வெள்ளமாய் கட்டுப்படுத்தமுடியாமல் கிளம்பிய அதன் மீது நீரை பீய்ச்சி அடித்தும்,  மீறிக் கொண்டு வானில் மிதந்தது மிக் வாயு. காற்றைவிடக் கனமானது என்பதால் கொஞ்சநேரத்தில்  காற்றின் தாக்கத்தினால் தாழ்ந்து தரை மட்டத்தில் பரவ ஆரம்பித்தது வாயு. 1:30 மணிக்கு அபாய சங்கு இயக்கப்பட்டது. சில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர். விழித்துக்கொண்ட சிலரும் கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் என உடல் உபாதைகளுடன் கொஞ்சநேரத்தில் தெருவிலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மருத்துமனைகள் நிரம்பி, விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் தெருவில் கிடத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.

தங்களுக்கு நேர்ந்தது என்னவென்று அறியாமலேயே ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். உலகின் மோசமான ரசாயன விபத்து என வரலாற்றில் இடம்பெற்றது போபால் சம்பவம். போபால் சம்பவம் நடந்து கிட்டதட்ட 32 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஏற்பட்ட பாதிப்பின் பின்விளைவுகளும் சோகமும் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விசாரணையில்,  போபால் நிறுவனத்திலிருந்து வெளியேறி மக்களைக் கொன்றது 40 டன் மிக் விஷ வாயு என கணக்கிடப்பட்டது. 
பாதிப்பின் சோகம் தொடர்ந்ததற்கு காரணம் மண்ணிலும் காற்றிலும் தேங்கிய மிக் விஷவாயு. மிக் வாயு நாம் சுவாசிக்கும் காற்றை விடக் கனமானதால், அது மேல்நோக்கி செல்லாமல் முழுவதும் தளப்பரப்பை நோக்கியே வழிந்து தேங்கியதாலேயே அது மனிதர்களுக்கு பெரும் நாசத்தை விளைவிக்க காரணமானது. வாயு வெளியேறிய நான்கு மணி நேரத்தில், தன் கொடூரத்தை அரங்கேற்றி முடித்தது மிக் வாயு.
தூக்கத்தில் இறந்தவர்கள் 4000 பேர், Fibrosis, Brochial Asthma, Chronic Obstructive Airways Disease, Emphysema, Recurrent Chest Infections, Pulmonary Tuberculosis என இன்று வரை உடல் உறுப்புகளை இழந்து தவிப்பவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகள் 400,000 பேர் என்கிறது இந்த விபத்து குறித்த ஒரு அறிக்கை.  நாளாக நாளாக தங்கள் பார்வையை இழந்தவர்கள் பெரும்பாலோனோர். வாயு தாக்கத்தினால் அப்பகுதியில் இருந்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை இறந்து பிறந்தது. பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்தடுத்த வருடங்கள் உடல்குறைபாடுகளுடனேயே பிறந்தன குழந்தைகள்.


உலகின் மாசற்ற உணவு என்கிற தாய்ப்பாலையும் மிக் வாயு விட்டுவைக்கவில்லை. ரசாயனக் கூடத்தின் அருகில் வாழ்ந்த பெண்களின் தாய்ப்பாலில் பாதரசம், ஈயம், ஆர்கனோ குளோரின் (Mercury, Lead, Organo-Chlorines] இருந்ததாக, 2002 பிப்ரவரி கிரீன்பீஸ் அறிக்கை [Greepeace Report] ஒன்று அதிர்ச்சி தகவலை கூறியது. போபால் விபத்து சுற்றுச்சூழல் பேரழிவை மட்டுல்ல, அரசு இயந்திரத்தின் அவலட்சணத்தையும் உலகிற்கு சொன்னது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மூலம். போதிய மருத்துவமனைகள் இன்றி, மருத்துவக் கண்காணிப்புகள் இன்றி, பாதிக்கப்பட்டோர் நஷ்ட ஈடு பெற வழிகாட்டுதல்கள் இன்றி, நிதி உதவி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர். 
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியாக பெற்றுத்தரவேண்டிய நீதியைக்கூட அரசு அலட்சியம் செய்தது. இந்தியா நெருக்கடி நிலையில் தத்தளித்த ஒருநாளில்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு (அக்டோபர் 31, 1975) அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் தலையீடு மற்றும் அரசு இயந்திரம் ஸ்தம்பித்த ஒருநாளில், விதிகளை மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதி லட்சக்கணக்கான உயிர்களின் விதியோடு விளையாடி முடிந்தது.
போபால் விஷ வாயுக் கசிவு மாபெரும் மனிதத் தவறுகளாலும், முக்கிய பாதுகாப்பு இயந்திரங்கள் இயங்காமல் பராமரிப்பில் முடங்கியதாலும் ஏற்பட்டதென பின்னாளில் விசாரணையில் தெரியவந்தது. 

செய்யும் பணி குறித்த அறிவற்ற பணியாள் ஒருவனின் அஜாக்கிரதை, முடங்கிக் கிடந்த இயந்திரங்கள், பணிகளை முறைப்படுத்தவேண்டிய கண்காணிப்பாளரின் அசட்டை, ஆபத்து கால தீவிர அபாய சங்கு ஒலி வழக்கமாக முறையிலேயே ஒலித்ததால் மக்கள் காட்டிய அலட்சியம், படிப்பறிவற்ற வேலையாட்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களை தெரிந்துகொள்ளாதிருந்தது போன்றவை போபால் விபத்துக்கு காரணமானது. போபால் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் முழுப் பொறுப்பையும் யூனியன் கார்பைடு நிறுவனம் ஏற்றுக் கொண்டது. 
அனைத்து பாதிப்புகளுக்குமாக சுமார் 500,000 பேர் நஷ்ட ஈடு பெற தகுதியுடையவர்கள் என கணக்கிடப் பட்டது. 1989 பிப்ரவரி 24 ம் தேதி, யூனியன் கார்பைடு நிர்வாகம் 470 மில்லியன் டாலர்களை இந்திய அரசிடம் ஒப்படைத்தது. இதன்பின்னணியில் இருந்த அரசியல் பின்னாளில்தான் தெரியவந்தது. ஆம்  இந்த வழக்கின் குற்றவாளியான வாரண் ஆண்டர்சன் வசதியாக தன் நாட்டுக்கு தப்பிச்செல்ல, அப்போதைய மத்திய அரசு உதவி செய்திருந்தது.

 உயர் நீதிமன்ற உத்தரவின்படி, போபால் மக்களை நிரந்தரமாக பராமரித்து சிகிச்சையளிக்க யூனியன் கார்பைடு 1991 அக்டோபரில்,  17 மில்லியன் டாலர் செலவில் ஒரு மருத்துவமனையை போபாலில் கட்ட ஒப்புக் கொண்டது. வழக்கு விசாரணை நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. இது தொடர்பாக 1996 ல் நீதிபதி அஹமதி வழங்கி தீர்ப்பு மூலம், போபால் விஷயவாயு வழக்கு கொலைப் பாதகச் செயலுக்கான தண்டனையிலிருந்து சாதாரண கவனக்குறைவால் ஏற்படும் பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. (304 பி-யிலிருந்து 304 ஏ ) (Culpable Homicide to Cri​​minal Negligence).
வழக்கு விசாரணைக்காக 2002 ஆகஸ்டு மாதம்  போபால் நீதிமன்றம், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான வாரன் ஆன்டர்ஸனை குற்ற விசாரணைக்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்தது. நீதிமன்றம் ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தகவலறிந்த வாரன் ஆன்டர்ஸன்,  தன் அமெரிக்க இல்லத்திலிருந்து தலைமறைவானார். இறுதிவரை வாரன் ஆண்டர்சனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த மத்திய அரசு முன்வரவில்லை. இடையில் ஆண்டர்சன் இருக்கும் இடத்தை உள்துறை மோப்பம் பிடித்த பின்னும் அது கிடப்பில் போடப்பட்டது.

இந்தியாவை உலுக்கிய இந்த கோர படுகொலைக் குற்றத்தை,  நிர்வாகப் புறக்கணிப்பு என அறிவித்து மெளனமாய் இருந்து விட்டது.  நிவாரண உதவிகளும் அவர்களுக்கு முறையாக சென்று சேரவில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் இன்றளவும் இதன் தாக்கம் அந்த மண்ணில் எதிரொலித்தபடியே இருக்கிறது.
இதற்காக இந்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திடமும் கோரிக்கை வைத்தது. முதலில் ஒப்புக்கொண்ட குஜராத் அரசு,  அம்மாநில மக்களின் போராட்டத்தால் இடம்தர மறுத்து விட்டது. நாக்பூரில் அனுமதி கேட்கப்பட்டு அங்கும் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இன்றுவரை இந்த பிரச்னை தொடர்கிறது.
இந்நிலையில் மிகப்பெரும் படுகொலை நிகழ்த்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ஆண்டர்சன், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையிலேயே தேடப்படும் குற்றவாளியாகவே தன் நாட்டில் மரணமடைந்தார்.


மக்களின் மீதான இந்திய அரசுகளின் அலட்சியம், வளைவு நெளிவுகளோடு உறுதியற்ற இந்திய சட்ட நெறிமுறைகள், ஆளும் வர்க்கம் முதலாளி வர்க்கத்தோடு கைகோர்த்துக்கொண்ட போலி ஜனநாயகம் ஆகிய மூன்றின் சாட்சியாக இந்திய வரைபடத்தில் ரத்தக்கறையுடன் போபால் நகரம் காட்சியளிக்கிறது.


|- எஸ்.கிருபாகரன்

Monday, December 2, 2019

1992-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியை நிலைகுலைத்த பெருவெள்ளம்

1992-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியை நிலைகுலைத்த பெருவெள்ளம்


            1992ல் நடந்த சம்பவம் இன்றும் ஞாபகம் இருக்கிறது,

அன்று எனக்கு ஐந்து வயது தான் ஆனால் மறக்க முடியாத நிகழ்வு,

நெல்லை மாவட்டம் முழுவதும் அடை மழை,

என்னையும் என் அக்காவையும் வீட்டை வீட்டு வெளியே விளையாட அனுமதிக்காமல் வீட்டு சிறையில் அடைபட்டு இருந்த நேரம்,


தாமிரபரணி நதி வெள்ளத்தை பற்றி என் தந்தை தாயிடம் விவரிக்கும் போது நெல்லை பஸ் ஸ்டண்ட் வரை வந்து தாமிரபரணி தண்ணிர் வந்த்து என்று கூறும் போது, எனக்கு பீதியை ஏற்படுத்தியது,

ஞாயிறு விடுமுறையில் எங்கள் தந்தை அறிவியல் மையம் அழைத்து செல்லும் போது, பேருந்து நிலையத்தில் இருந்து அறிவியல் மையத்திற்கு நடந்து தான் சொல்லுவோம், அதன் தொலைவு தான் எங்கள் பிரமிக்கவைத்து,

தாமிரபரணி வெள்ளம் வடிந்த பின் தான் அதன் கொர தனம் தெரிந்த,

எனது வகுப்பு தோழியும், என் ஆண்டை வீட்டாருமான ஸ்ரீ கூறிய விடயம் தான் நெஞ்சை நடுங்க வைத்தது,

1992 நவம்பர்13 இரவு தொடங்க இருந்த நேரத்தில் என் தோழியின் உறவினர்கள் விக்கிரமசிங்கபுரம்  வசித்து இருந்தனர், அன்று இரவு வெள்ள அபாயம் பற்றி எச்சரிக்கையை அரசு தண்டோர செய்ய,

நதிக்கும் வீட்டுக்கு பல கல் தொலைவு இங்கு எப்படி வெள்ளம் வரும் என்கிற நம்பிக்கையில் பாதுகாப்பான இடம் செல்லுவதை தவிர்த்தனர்,

ஆனால் அவர்கள் எதிர்பாக்கவில்லை வெள்ள நீர் அன்று நள்ளிரவிலே அவர்கள் வீடு வரை தாமிரபரணி தன் எல்லையை விரிவுபடுத்தும் என்று, 

வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டில் பொருள்கள் வைக்கும் பரண் மீது  அவரது பிள்ளைகளையும், அவர் மனைவியுடன் ஏறி அமர்ந்து கொண்டு வீட்டின் கதவுகளை ஐன்னல்களையும் அடைத்து கொண்டு தங்க, கொஞ்சம் கொஞ்சமாக நீர் மட்டம் உயர, கதவுகளிலும், ஐன்னல்கள் இடையே கிடைத்த விரிசல் வழியாக நீர் வீட்டிற்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நீர் உயர அரம்பித்து பரண் மேல் அமர்ந்து இருந்தவர்கள் மூழகடிக்க அரம்பித்தது,

அதிகாலையில் தாமிரபரணி அவர் வீட்டையும் மூழ்கடித்து அதன் மேல் பயணிக்க தொடங்கியது,

இரண்டு நாள்களுக்கு பிறகே வீட்டில் பரண் மீது இருந்த அனைவரிடன் உயிர்அற்ற சுடலமே மீட்கப்பட்டது ஸ்ரீயின் தந்தை தான் அவ்வுடல்களை நல்லடக்கம் செய்ய விக்கிரமசிங்கபுரம் சென்றார்,

இதை பற்றி ஒவ்வொரு தடவையும் என்னையே அறியாமல் பீதயை ஏற்படுத்தியது அந்த வெள்ள நினைவுகள்

உங்கள் சகோதரன்

ரஹ்மான்ஃபாயட்./... 


நவம்பர் 13, 1992ஆம் ஆண்டு நள்ளிரவு - விடியவே விடியாத என்று எண்ணும்  வகையில் ஏக்கத்தை உண்டு பண்ணிய திகில் இரவு. மழை என்றால் அது தான் மழை - விடாத அடை மழை.



திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட 1992-ஆம் ஆண்டு பெருவெள்ளம் 



தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் அணைகள் உள்ள மாவட்டம் திருநெல்வேலி. இங்குள்ள 11 அணைகளில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போதெல்லாம் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி கரையோர குடியிருப்புகளையும், வயல்களையும், தாழ்வான இடங்களையும் வெள்ளநீர் சூழ்வது வழக்கமாக நடந்துகொண்டிருக்கிறது.


ஆனால், 1992-ம் ஆண்டில் இந்த மாவட்டங்கள், அதற்கு முன் இல்லாத வகையில் கடும் வெள்ளப் பாதிப்புகளை சந்தித்தது. 1992-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புயல்வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ. மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ., பாபநாசம் கீழ்அணைப் பகுதியில் 190 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ. என்று வரலாறு காணாத வகையில் மழை கொட்டியிருந்தது.

இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டுவெள்ளம் வந்தது.  திருநெல்வேலியில் சூறாவளியின் காரணமாக எட்டு மணி நேரம் தொடர் மழை பெய்தது




2 லட்சம் கன அடி நீர்



அணைகள் நிரம்பியதன் காரணமாக அதிகாரிகள் நவம்பர் 13 அன்று இரவு பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை மதகுகளைத் திறந்தனர். இரண்டு பெரிய அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் முண்டந்துறை ஆற்றுப் பாலத்தை சில நிமிடங்களில் அடைந்தது. பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து 60 நிமிடத்திற்குள் மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அந்த நாளில் மூன்று அணைகளில் இருந்து விநாடிக்கு 2,04,273.8 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

3 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையும் சேர்ந்துகொண்டதில் தாமிரபரணி ஆற்றில் 2.04 லட்சம் கனஅடி தண்ணீர் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது. இதில், கரையோரக் குடியிருப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கின.

பாபநாசத்தில் பரிதாபம்
பாபநாசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருந்தது. பாபநாசம் கோவிலில் உள்ள அர்த்த சாம மண்டபம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் பாபநாசம் கோவில் முன்பு இருந்த விநாயகர் கோவிலும் தண்ணீரில் மூழ்கியது.
பாபநாசம், திருவள்ளுவர் நகரில் 1992-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அதிகாலையில் 17 பேரை வெள்ளம் பலிகொண்டது. அங்கு வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

முண்டந்துறை பாலம்

முண்டந்துறையில் பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்லும் பாதையில்   சேர்வலார் ஆற்றின் குறுக்கே செல்லும் பழங்காலத்துப் பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பெரிய பாலம்  வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மூன்று வாரங்களாக  போக்குவரத்து இல்லை. ராணுவத்தை அழைத்து புதிய இரும்புப் பாலம் போட்ட பின்னரே - அதாவது மூன்று வாரத்திற்கு பின்பே புதிய இரும்புப் பாலம் மூலமாகப் போக்குவரத்து தொடங்கியது. 
முண்டந்துறை சேர்வலார் பாலம் - வௌ்ளம் அடித்துச் செல்லப்பட்ட பின்
புதிதாய் இராணுவத்தால் போடப்பட்ட இரும்புப் பாலம்


திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையம் - மூழ்கல்

திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் தண்ணீர் புகுந்தது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் த.மு.சாலை வரை கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.



சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. எத்தகைய வெள்ளத்திலும் நிலைகுலையாமல் இருந்த குறுக்குத்துறை முருகன் கோயிலின் மேல்தளத்தில் இருந்த ஓடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. திருநெல்வேலி சந்திப்பில் தேங்கிய வெள்ளம் வடிய 4 நாட்களானது.

குற்றாலம் -

குற்றாலம் கோவில் முழுவதும் வௌ்ளத்தில் மூழ்கியது. பேரருவியில் விழுந்த வௌ்ளம் 10 அடி பள்ளத்தை உருவாக்கி விட்டுச் சென்றிருந்ததது. இன்றும் அக்கோவிலில் அந்த வௌ்ளநீர்மட்டம் வந்த அளவு குறிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் எல்லா அணைக்கட்டுகளிலும் உச்சபட்ச நீர் வௌியேற்றம் செய்யப்பட்டது அன்று தான்.
குற்றாலம் மட்டுமல்ல மாவட்டத்தின் அனைத்துப் பக்கங்களிலும் நீர், நீர், நீர்....மட்டுமே. 

ஆத்தூர் மற்றும் கடைமடைப்பகுதிகள்

    ஆத்தூர் பகுதிகளில் ஆற்றின் கரை உடைந்து வௌ்ளம் ஊருக்குள் புகுந்தது. அனைத்து மக்களும் வௌியேற்றப்ட்டனர். மீண்டும் மக்கள் வந்து குடியமர ஒரு வாரம் ஆனது ஏனென்றால் வௌ்ளம் வடிய அவ்வளவு நாள் ஆனது. வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு பல வாரங்கள் ஆகின. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், திருநெல்வேலி- ஸ்ரீவைகுண்டத்துக்கு போக்குவரத்து சீராக 3 வாரங்கள் ஆனது.

குமரி துண்டிப்பு


அதே நாளில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்துடனான சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், ரப்பர் தோட்டங்கள் மூழ்கின. குழித்துறை தாமிரபரணியிலும், பழையாற்றிலும் பல உடல்கள் அடித்து வரப்பட்டன. சுசீந்திரத்தில் தாணுமாலய சுவாமி கோயில் வரை வெள்ளம் புகுந்தது. சுவாமிதோப்பு உப்பளங்கள் மூழ்கின. இதன்பிறகு 2004-ல் சுனாமி பாதிப்பும் பெரும் சோகத்தை உருவாகியது.

நெல்லை வட்டாரத்தின் வரலாற்றில் 1992 ஆம் ஆண்டு வௌ்ளம் என்றுமே அழிக்க முடியாதது. மீண்டும் அப்படி ஒரு வௌ்ளம் வருமா என்றும் தெரியாது!!??

Sunday, December 1, 2019

மறக்கமுடியுமா சைக்கிள் சவாரியை ???

மறக்கமுடியுமா சைக்கிள் சவாரியை ???


அப்போதெல்லாம்
வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது.

அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால்,
அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.

இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் அப்போது
சைக்கிள் ஓட்டத் தெரியாமல்,
அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள்.
’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.

சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது..?

அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன.

இப்போதும்
உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன.
ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம்  50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும்.
அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.

கேரியர் வைத்த சைக்கிள்,
கேரியர்இல்லாத சைக்கிள்,
டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.

‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே,
தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள்.

உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும்
10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள்.
அந்த ஒரு பத்து நிமிஷம்,
இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள்.

’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.

இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.

சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு,
தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள்.

பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு.
பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

‘செகண்ட் ஹேண்ட்’ சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது.

அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன,
உப்புத்தாள் கொண்டு,
வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன...
என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.

எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன்.
ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி.

நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன.

‘ராபின்ஹூட்’ என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும்.

பத்துமுறை பெடல் செய்தால், ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று
அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள்.

ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம்...
என சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.

டைனமோ இல்லையெனில்
போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும்.
அதேபோல்,
சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது,
அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும்.

‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது..’ என்று அலுப்பும்சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.

‘ஓவராயிலிங்..’ சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர்.

அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு,
அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி,
ஹேண்டில் பார் கைப்பிடி,
சீட்டுக்கு முன்னே இருக்கும்
பார் பகுதிக்கு ஒரு கவர்,
சீட்டுக்கு குஷன் கவர்,

இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது
ஒரு கலை.

இன்னும் சிலர்,
சின்னச்சின்ன மணிகளை,
வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள்.

 டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது
மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம்.
கறிவேப்பிலை வாங்கவே,
டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம்.

அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு,
கெத்துக் காட்டுவோம்.

சைக்கிளின் ரெண்டுபக்கமும்
பெல் வைத்து,
வித்தியாச ஒலி எழுப்புவார்கள்.

மாற்றங்கள்...
வேகங்கள்..

சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.

 ‘என்னடா மாப்ளே...
இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே.
இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா.
இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.

அப்பா ஓட்டிய சைக்கிள்,
முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம்
மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன.
அப்பாவுக்கு பைக்,
மனைவிக்கு ஆக்டீவா, 
மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.

குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன.

வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை.

’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது..’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.

காலச் சுழற்சியில்...
தொப்பையைக் குறைக்கவும்
சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

ஸ்டாண்ட் போட்டு,
சைக்கிளிங் பண்ணுவதற்கு,
காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது.
எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும்,
நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா..?

உங்கள் நினைவுகளை
கொஞ்சம் தட்டி விடுங்கள்....