Tuesday, December 3, 2019

நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை?

நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை?


லப்படமில்லாத உணவு என்று தாய்ப்பாலை சொல்வார்கள். இயற்கையின் அந்தக் கொடையையும் விஷமாக்கிய அந்தக் கொடூரம் இந்தியாவில் அரங்கேறி, சரியாக 35 ஆண்டுகள் முன் இதே நாளில்.  ஆம், உலகின் சுற்றுச்சூழல் சீர்கேடு அழிவிற்கு மிகப்பெரும் மரண சாட்சியான போபால் விஷவாயு விபத்துதான் அது.

இருபதாம் நூற்றாண்டின் கொடும் விபத்தான போபால் விஷவாயு கசிவு, உலகின் மோசமான பேரழிவு நிகழ்வுகளில் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறது. 1984 டிசம்பர் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால்  நகரத்தின் வீதி விளக்குகள் மின்னத்துவங்க, மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். 900,000 மக்கள் வசித்துவரும் அந்த நகரம், சிறப்பானதொரு தொழிற் நகரமும் கூட.  
அதற்கு 4 வருடங்களுக்கு முன்புதான், அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கழகத்தின் உதவியால் பூச்சிக்கொல்லி  தயாரிக்கும் [Pesticide]​ ​ரசாயனக் கூடம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இரவின் உறக்கத்தினிடையே அந்த நிறுவனம் வழக்கமான தனது இரவுப்பணியை துவக்கியிருந்தது. இரவு 9:30 மணிக்கு இரண்டாம் ஷிப்ட் அதிகாரியின் உத்தரவுப்படி, பணிகள் நடந்துகொண்டிருந்தன.
போபால் கூடத்தில் 15,000 காலன் கொள்ளளவு கொண்ட E610, E611, E619 என்ற மூன்று மிக் கலன்களில் இரண்டில்தான் எப்போதும் மிக் திரவம் இருக்க வேண்டும். ஒரு கலன் அவசியம் காலியாய் இருக்க வேண்டும். 
ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று மூன்று கலன்களிலும் மிக் நிரப்பப்பட்டிருந்தது. பணியாளர் ஒருவர் E610 அடையாளமிட்ட மிக் கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடி, நீரைச் செலுத்தினார். பராமரிப்புப் பணியில் வாடிக்கையாகப் பைப்பைக் கழுவப் பயன் படுத்திய நீர் எதிர்பாராதவாறு, 13000 காலன் மிக் நிரப்பப்பட்ட  E610 கலனில் தெறித்து கொட்டியது. மிகச்சிறிய கவனக்குறைவு, உலகையே அச்சுறுத்திய பேரழிவாக மாறித்தொடங்கியது அந்த நிமிடத்திலிருந்துதான்.

மிக் ரசாயனம் மிகவும் வீரியமானது. கொடிய நச்சுத்தன்மைகொண்ட இது நீருடன் கலந்தால் தீவிர வெப்பத்தை வெளியாக்கும் தன்மை கொண்டது. மொத்தத்தில் மிக்,  'மரண மூட்டும் விஷ ரசாயனம் ' என்கிறது வேதியியல் நூல் ஒன்று. எப்போதாவது இப்படி வால்வுகளில் கசிவு நிகழும்போது பாதுகாப்பு நடவடிக்கையாக வட்டத் தட்டை இடையில் நுழைத்து [Isolation with Blind Flange] கலன் தனித்து விடப்பட வேண்டும். ஊழியருக்கு அது நன்கு பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று பணியாளர் கவனக்குறைவாக தட்டை அமைத்துக் கலனைத் தனித்து விடவில்லை. கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கும் இது வரவில்லை. பைப்பைக் கழுவ நீர் திறக்கப்பட்டு செலுத்தப்பட்டது.


கொஞ்ச நேரத்தில் மிக் கலனின் அழுத்தம் 2 psi ஐ தொட்டுநின்றது. 11 மணிக்கு இரவு ஷிப்ட் குழு வந்தபோது அழுத்தம் 10 psi ஆகக் கலனில் ஏறியிருந்தது. அழுத்தமானியின் எச்சரிக்கையைக்கூட இரவுப்பணி அதிகாரி அலட்டிக்கொள்ளவில்லை. இன்னும் சில மணித்துளிகளில் உலகை உலுக்கிப்போடப்போகும் விபத்தை தடுத்து நிறுத்த கிடைத்த கடைசி சந்தர்ப்பத்தை அந்த கணத்தில் தவறவிட்டார் அந்த அதிகாரி. 12:40 நள்ளிரவில் அழுத்தம் 40 psi என உச்ச நிலையை அடைந்திருந்தது. தாங்கமுடியாத அழுத்தத்தால் கலன் உப்பி உடைய ஆரம்பித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது சரியாக இரவு மணி 12:45. 
கலனின் உஷ்ணம் கூடியிருந்ததை கண்ட அவர்,  நடக்கவிருக்கும் விபரீதத்தை ஓரளவு யூகித்துக்கொண்டார். விடுவிடுவென முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மற்ற பணியாளர்களை ஆயத்தப்படுத்துவங்கினார். ஆனால் எல்லோரும் கண்களை கசக்கியபடி ஏதும் செய்யமுடியாதவர்களாக இருந்தனர். அதற்குள் விஷ வாயு கட்டுப்படுத்த முடியாத நிலையில் காட்டுத் தீ போல் பரவியது. அங்கிருந்த 120 அடி உயரப் புகைபோக்கியில் மேல் மட்டத்தில் வாயு பிதுங்கி வெளியேறியது. யோசிக்க நேரமின்றி அதிகாரிகள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
காட்டு வெள்ளமாய் கட்டுப்படுத்தமுடியாமல் கிளம்பிய அதன் மீது நீரை பீய்ச்சி அடித்தும்,  மீறிக் கொண்டு வானில் மிதந்தது மிக் வாயு. காற்றைவிடக் கனமானது என்பதால் கொஞ்சநேரத்தில்  காற்றின் தாக்கத்தினால் தாழ்ந்து தரை மட்டத்தில் பரவ ஆரம்பித்தது வாயு. 1:30 மணிக்கு அபாய சங்கு இயக்கப்பட்டது. சில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர். விழித்துக்கொண்ட சிலரும் கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் என உடல் உபாதைகளுடன் கொஞ்சநேரத்தில் தெருவிலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மருத்துமனைகள் நிரம்பி, விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் தெருவில் கிடத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.

தங்களுக்கு நேர்ந்தது என்னவென்று அறியாமலேயே ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். உலகின் மோசமான ரசாயன விபத்து என வரலாற்றில் இடம்பெற்றது போபால் சம்பவம். போபால் சம்பவம் நடந்து கிட்டதட்ட 32 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஏற்பட்ட பாதிப்பின் பின்விளைவுகளும் சோகமும் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விசாரணையில்,  போபால் நிறுவனத்திலிருந்து வெளியேறி மக்களைக் கொன்றது 40 டன் மிக் விஷ வாயு என கணக்கிடப்பட்டது. 
பாதிப்பின் சோகம் தொடர்ந்ததற்கு காரணம் மண்ணிலும் காற்றிலும் தேங்கிய மிக் விஷவாயு. மிக் வாயு நாம் சுவாசிக்கும் காற்றை விடக் கனமானதால், அது மேல்நோக்கி செல்லாமல் முழுவதும் தளப்பரப்பை நோக்கியே வழிந்து தேங்கியதாலேயே அது மனிதர்களுக்கு பெரும் நாசத்தை விளைவிக்க காரணமானது. வாயு வெளியேறிய நான்கு மணி நேரத்தில், தன் கொடூரத்தை அரங்கேற்றி முடித்தது மிக் வாயு.
தூக்கத்தில் இறந்தவர்கள் 4000 பேர், Fibrosis, Brochial Asthma, Chronic Obstructive Airways Disease, Emphysema, Recurrent Chest Infections, Pulmonary Tuberculosis என இன்று வரை உடல் உறுப்புகளை இழந்து தவிப்பவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகள் 400,000 பேர் என்கிறது இந்த விபத்து குறித்த ஒரு அறிக்கை.  நாளாக நாளாக தங்கள் பார்வையை இழந்தவர்கள் பெரும்பாலோனோர். வாயு தாக்கத்தினால் அப்பகுதியில் இருந்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை இறந்து பிறந்தது. பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்தடுத்த வருடங்கள் உடல்குறைபாடுகளுடனேயே பிறந்தன குழந்தைகள்.


உலகின் மாசற்ற உணவு என்கிற தாய்ப்பாலையும் மிக் வாயு விட்டுவைக்கவில்லை. ரசாயனக் கூடத்தின் அருகில் வாழ்ந்த பெண்களின் தாய்ப்பாலில் பாதரசம், ஈயம், ஆர்கனோ குளோரின் (Mercury, Lead, Organo-Chlorines] இருந்ததாக, 2002 பிப்ரவரி கிரீன்பீஸ் அறிக்கை [Greepeace Report] ஒன்று அதிர்ச்சி தகவலை கூறியது. போபால் விபத்து சுற்றுச்சூழல் பேரழிவை மட்டுல்ல, அரசு இயந்திரத்தின் அவலட்சணத்தையும் உலகிற்கு சொன்னது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மூலம். போதிய மருத்துவமனைகள் இன்றி, மருத்துவக் கண்காணிப்புகள் இன்றி, பாதிக்கப்பட்டோர் நஷ்ட ஈடு பெற வழிகாட்டுதல்கள் இன்றி, நிதி உதவி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர். 
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியாக பெற்றுத்தரவேண்டிய நீதியைக்கூட அரசு அலட்சியம் செய்தது. இந்தியா நெருக்கடி நிலையில் தத்தளித்த ஒருநாளில்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு (அக்டோபர் 31, 1975) அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் தலையீடு மற்றும் அரசு இயந்திரம் ஸ்தம்பித்த ஒருநாளில், விதிகளை மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதி லட்சக்கணக்கான உயிர்களின் விதியோடு விளையாடி முடிந்தது.
போபால் விஷ வாயுக் கசிவு மாபெரும் மனிதத் தவறுகளாலும், முக்கிய பாதுகாப்பு இயந்திரங்கள் இயங்காமல் பராமரிப்பில் முடங்கியதாலும் ஏற்பட்டதென பின்னாளில் விசாரணையில் தெரியவந்தது. 

செய்யும் பணி குறித்த அறிவற்ற பணியாள் ஒருவனின் அஜாக்கிரதை, முடங்கிக் கிடந்த இயந்திரங்கள், பணிகளை முறைப்படுத்தவேண்டிய கண்காணிப்பாளரின் அசட்டை, ஆபத்து கால தீவிர அபாய சங்கு ஒலி வழக்கமாக முறையிலேயே ஒலித்ததால் மக்கள் காட்டிய அலட்சியம், படிப்பறிவற்ற வேலையாட்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களை தெரிந்துகொள்ளாதிருந்தது போன்றவை போபால் விபத்துக்கு காரணமானது. போபால் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் முழுப் பொறுப்பையும் யூனியன் கார்பைடு நிறுவனம் ஏற்றுக் கொண்டது. 
அனைத்து பாதிப்புகளுக்குமாக சுமார் 500,000 பேர் நஷ்ட ஈடு பெற தகுதியுடையவர்கள் என கணக்கிடப் பட்டது. 1989 பிப்ரவரி 24 ம் தேதி, யூனியன் கார்பைடு நிர்வாகம் 470 மில்லியன் டாலர்களை இந்திய அரசிடம் ஒப்படைத்தது. இதன்பின்னணியில் இருந்த அரசியல் பின்னாளில்தான் தெரியவந்தது. ஆம்  இந்த வழக்கின் குற்றவாளியான வாரண் ஆண்டர்சன் வசதியாக தன் நாட்டுக்கு தப்பிச்செல்ல, அப்போதைய மத்திய அரசு உதவி செய்திருந்தது.

 உயர் நீதிமன்ற உத்தரவின்படி, போபால் மக்களை நிரந்தரமாக பராமரித்து சிகிச்சையளிக்க யூனியன் கார்பைடு 1991 அக்டோபரில்,  17 மில்லியன் டாலர் செலவில் ஒரு மருத்துவமனையை போபாலில் கட்ட ஒப்புக் கொண்டது. வழக்கு விசாரணை நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. இது தொடர்பாக 1996 ல் நீதிபதி அஹமதி வழங்கி தீர்ப்பு மூலம், போபால் விஷயவாயு வழக்கு கொலைப் பாதகச் செயலுக்கான தண்டனையிலிருந்து சாதாரண கவனக்குறைவால் ஏற்படும் பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. (304 பி-யிலிருந்து 304 ஏ ) (Culpable Homicide to Cri​​minal Negligence).
வழக்கு விசாரணைக்காக 2002 ஆகஸ்டு மாதம்  போபால் நீதிமன்றம், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான வாரன் ஆன்டர்ஸனை குற்ற விசாரணைக்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்தது. நீதிமன்றம் ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தகவலறிந்த வாரன் ஆன்டர்ஸன்,  தன் அமெரிக்க இல்லத்திலிருந்து தலைமறைவானார். இறுதிவரை வாரன் ஆண்டர்சனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த மத்திய அரசு முன்வரவில்லை. இடையில் ஆண்டர்சன் இருக்கும் இடத்தை உள்துறை மோப்பம் பிடித்த பின்னும் அது கிடப்பில் போடப்பட்டது.

இந்தியாவை உலுக்கிய இந்த கோர படுகொலைக் குற்றத்தை,  நிர்வாகப் புறக்கணிப்பு என அறிவித்து மெளனமாய் இருந்து விட்டது.  நிவாரண உதவிகளும் அவர்களுக்கு முறையாக சென்று சேரவில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் இன்றளவும் இதன் தாக்கம் அந்த மண்ணில் எதிரொலித்தபடியே இருக்கிறது.
இதற்காக இந்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திடமும் கோரிக்கை வைத்தது. முதலில் ஒப்புக்கொண்ட குஜராத் அரசு,  அம்மாநில மக்களின் போராட்டத்தால் இடம்தர மறுத்து விட்டது. நாக்பூரில் அனுமதி கேட்கப்பட்டு அங்கும் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இன்றுவரை இந்த பிரச்னை தொடர்கிறது.
இந்நிலையில் மிகப்பெரும் படுகொலை நிகழ்த்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ஆண்டர்சன், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையிலேயே தேடப்படும் குற்றவாளியாகவே தன் நாட்டில் மரணமடைந்தார்.


மக்களின் மீதான இந்திய அரசுகளின் அலட்சியம், வளைவு நெளிவுகளோடு உறுதியற்ற இந்திய சட்ட நெறிமுறைகள், ஆளும் வர்க்கம் முதலாளி வர்க்கத்தோடு கைகோர்த்துக்கொண்ட போலி ஜனநாயகம் ஆகிய மூன்றின் சாட்சியாக இந்திய வரைபடத்தில் ரத்தக்கறையுடன் போபால் நகரம் காட்சியளிக்கிறது.


|- எஸ்.கிருபாகரன்

Monday, December 2, 2019

1992-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியை நிலைகுலைத்த பெருவெள்ளம்

1992-ல் நெல்லை, தூத்துக்குடி, குமரியை நிலைகுலைத்த பெருவெள்ளம்


            1992ல் நடந்த சம்பவம் இன்றும் ஞாபகம் இருக்கிறது,

அன்று எனக்கு ஐந்து வயது தான் ஆனால் மறக்க முடியாத நிகழ்வு,

நெல்லை மாவட்டம் முழுவதும் அடை மழை,

என்னையும் என் அக்காவையும் வீட்டை வீட்டு வெளியே விளையாட அனுமதிக்காமல் வீட்டு சிறையில் அடைபட்டு இருந்த நேரம்,


தாமிரபரணி நதி வெள்ளத்தை பற்றி என் தந்தை தாயிடம் விவரிக்கும் போது நெல்லை பஸ் ஸ்டண்ட் வரை வந்து தாமிரபரணி தண்ணிர் வந்த்து என்று கூறும் போது, எனக்கு பீதியை ஏற்படுத்தியது,

ஞாயிறு விடுமுறையில் எங்கள் தந்தை அறிவியல் மையம் அழைத்து செல்லும் போது, பேருந்து நிலையத்தில் இருந்து அறிவியல் மையத்திற்கு நடந்து தான் சொல்லுவோம், அதன் தொலைவு தான் எங்கள் பிரமிக்கவைத்து,

தாமிரபரணி வெள்ளம் வடிந்த பின் தான் அதன் கொர தனம் தெரிந்த,

எனது வகுப்பு தோழியும், என் ஆண்டை வீட்டாருமான ஸ்ரீ கூறிய விடயம் தான் நெஞ்சை நடுங்க வைத்தது,

1992 நவம்பர்13 இரவு தொடங்க இருந்த நேரத்தில் என் தோழியின் உறவினர்கள் விக்கிரமசிங்கபுரம்  வசித்து இருந்தனர், அன்று இரவு வெள்ள அபாயம் பற்றி எச்சரிக்கையை அரசு தண்டோர செய்ய,

நதிக்கும் வீட்டுக்கு பல கல் தொலைவு இங்கு எப்படி வெள்ளம் வரும் என்கிற நம்பிக்கையில் பாதுகாப்பான இடம் செல்லுவதை தவிர்த்தனர்,

ஆனால் அவர்கள் எதிர்பாக்கவில்லை வெள்ள நீர் அன்று நள்ளிரவிலே அவர்கள் வீடு வரை தாமிரபரணி தன் எல்லையை விரிவுபடுத்தும் என்று, 

வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டில் பொருள்கள் வைக்கும் பரண் மீது  அவரது பிள்ளைகளையும், அவர் மனைவியுடன் ஏறி அமர்ந்து கொண்டு வீட்டின் கதவுகளை ஐன்னல்களையும் அடைத்து கொண்டு தங்க, கொஞ்சம் கொஞ்சமாக நீர் மட்டம் உயர, கதவுகளிலும், ஐன்னல்கள் இடையே கிடைத்த விரிசல் வழியாக நீர் வீட்டிற்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நீர் உயர அரம்பித்து பரண் மேல் அமர்ந்து இருந்தவர்கள் மூழகடிக்க அரம்பித்தது,

அதிகாலையில் தாமிரபரணி அவர் வீட்டையும் மூழ்கடித்து அதன் மேல் பயணிக்க தொடங்கியது,

இரண்டு நாள்களுக்கு பிறகே வீட்டில் பரண் மீது இருந்த அனைவரிடன் உயிர்அற்ற சுடலமே மீட்கப்பட்டது ஸ்ரீயின் தந்தை தான் அவ்வுடல்களை நல்லடக்கம் செய்ய விக்கிரமசிங்கபுரம் சென்றார்,

இதை பற்றி ஒவ்வொரு தடவையும் என்னையே அறியாமல் பீதயை ஏற்படுத்தியது அந்த வெள்ள நினைவுகள்

உங்கள் சகோதரன்

ரஹ்மான்ஃபாயட்./... 


நவம்பர் 13, 1992ஆம் ஆண்டு நள்ளிரவு - விடியவே விடியாத என்று எண்ணும்  வகையில் ஏக்கத்தை உண்டு பண்ணிய திகில் இரவு. மழை என்றால் அது தான் மழை - விடாத அடை மழை.



திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட 1992-ஆம் ஆண்டு பெருவெள்ளம் 



தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் அணைகள் உள்ள மாவட்டம் திருநெல்வேலி. இங்குள்ள 11 அணைகளில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போதெல்லாம் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி கரையோர குடியிருப்புகளையும், வயல்களையும், தாழ்வான இடங்களையும் வெள்ளநீர் சூழ்வது வழக்கமாக நடந்துகொண்டிருக்கிறது.


ஆனால், 1992-ம் ஆண்டில் இந்த மாவட்டங்கள், அதற்கு முன் இல்லாத வகையில் கடும் வெள்ளப் பாதிப்புகளை சந்தித்தது. 1992-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புயல்வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ. மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ., பாபநாசம் கீழ்அணைப் பகுதியில் 190 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ. என்று வரலாறு காணாத வகையில் மழை கொட்டியிருந்தது.

இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டுவெள்ளம் வந்தது.  திருநெல்வேலியில் சூறாவளியின் காரணமாக எட்டு மணி நேரம் தொடர் மழை பெய்தது




2 லட்சம் கன அடி நீர்



அணைகள் நிரம்பியதன் காரணமாக அதிகாரிகள் நவம்பர் 13 அன்று இரவு பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை மதகுகளைத் திறந்தனர். இரண்டு பெரிய அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் முண்டந்துறை ஆற்றுப் பாலத்தை சில நிமிடங்களில் அடைந்தது. பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து 60 நிமிடத்திற்குள் மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அந்த நாளில் மூன்று அணைகளில் இருந்து விநாடிக்கு 2,04,273.8 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

3 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையும் சேர்ந்துகொண்டதில் தாமிரபரணி ஆற்றில் 2.04 லட்சம் கனஅடி தண்ணீர் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது. இதில், கரையோரக் குடியிருப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கின.

பாபநாசத்தில் பரிதாபம்
பாபநாசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருந்தது. பாபநாசம் கோவிலில் உள்ள அர்த்த சாம மண்டபம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் பாபநாசம் கோவில் முன்பு இருந்த விநாயகர் கோவிலும் தண்ணீரில் மூழ்கியது.
பாபநாசம், திருவள்ளுவர் நகரில் 1992-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அதிகாலையில் 17 பேரை வெள்ளம் பலிகொண்டது. அங்கு வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

முண்டந்துறை பாலம்

முண்டந்துறையில் பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்லும் பாதையில்   சேர்வலார் ஆற்றின் குறுக்கே செல்லும் பழங்காலத்துப் பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பெரிய பாலம்  வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மூன்று வாரங்களாக  போக்குவரத்து இல்லை. ராணுவத்தை அழைத்து புதிய இரும்புப் பாலம் போட்ட பின்னரே - அதாவது மூன்று வாரத்திற்கு பின்பே புதிய இரும்புப் பாலம் மூலமாகப் போக்குவரத்து தொடங்கியது. 
முண்டந்துறை சேர்வலார் பாலம் - வௌ்ளம் அடித்துச் செல்லப்பட்ட பின்
புதிதாய் இராணுவத்தால் போடப்பட்ட இரும்புப் பாலம்


திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையம் - மூழ்கல்

திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் தண்ணீர் புகுந்தது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் த.மு.சாலை வரை கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.



சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. எத்தகைய வெள்ளத்திலும் நிலைகுலையாமல் இருந்த குறுக்குத்துறை முருகன் கோயிலின் மேல்தளத்தில் இருந்த ஓடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. திருநெல்வேலி சந்திப்பில் தேங்கிய வெள்ளம் வடிய 4 நாட்களானது.

குற்றாலம் -

குற்றாலம் கோவில் முழுவதும் வௌ்ளத்தில் மூழ்கியது. பேரருவியில் விழுந்த வௌ்ளம் 10 அடி பள்ளத்தை உருவாக்கி விட்டுச் சென்றிருந்ததது. இன்றும் அக்கோவிலில் அந்த வௌ்ளநீர்மட்டம் வந்த அளவு குறிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் எல்லா அணைக்கட்டுகளிலும் உச்சபட்ச நீர் வௌியேற்றம் செய்யப்பட்டது அன்று தான்.
குற்றாலம் மட்டுமல்ல மாவட்டத்தின் அனைத்துப் பக்கங்களிலும் நீர், நீர், நீர்....மட்டுமே. 

ஆத்தூர் மற்றும் கடைமடைப்பகுதிகள்

    ஆத்தூர் பகுதிகளில் ஆற்றின் கரை உடைந்து வௌ்ளம் ஊருக்குள் புகுந்தது. அனைத்து மக்களும் வௌியேற்றப்ட்டனர். மீண்டும் மக்கள் வந்து குடியமர ஒரு வாரம் ஆனது ஏனென்றால் வௌ்ளம் வடிய அவ்வளவு நாள் ஆனது. வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு பல வாரங்கள் ஆகின. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், திருநெல்வேலி- ஸ்ரீவைகுண்டத்துக்கு போக்குவரத்து சீராக 3 வாரங்கள் ஆனது.

குமரி துண்டிப்பு


அதே நாளில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்துடனான சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், ரப்பர் தோட்டங்கள் மூழ்கின. குழித்துறை தாமிரபரணியிலும், பழையாற்றிலும் பல உடல்கள் அடித்து வரப்பட்டன. சுசீந்திரத்தில் தாணுமாலய சுவாமி கோயில் வரை வெள்ளம் புகுந்தது. சுவாமிதோப்பு உப்பளங்கள் மூழ்கின. இதன்பிறகு 2004-ல் சுனாமி பாதிப்பும் பெரும் சோகத்தை உருவாகியது.

நெல்லை வட்டாரத்தின் வரலாற்றில் 1992 ஆம் ஆண்டு வௌ்ளம் என்றுமே அழிக்க முடியாதது. மீண்டும் அப்படி ஒரு வௌ்ளம் வருமா என்றும் தெரியாது!!??

Sunday, December 1, 2019

மறக்கமுடியுமா சைக்கிள் சவாரியை ???

மறக்கமுடியுமா சைக்கிள் சவாரியை ???


அப்போதெல்லாம்
வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது.

அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால்,
அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.

இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் அப்போது
சைக்கிள் ஓட்டத் தெரியாமல்,
அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள்.
’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.

சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது..?

அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன.

இப்போதும்
உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன.
ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம்  50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும்.
அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.

கேரியர் வைத்த சைக்கிள்,
கேரியர்இல்லாத சைக்கிள்,
டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.

‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே,
தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள்.

உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும்
10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள்.
அந்த ஒரு பத்து நிமிஷம்,
இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள்.

’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.

இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.

சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு,
தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள்.

பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு.
பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

‘செகண்ட் ஹேண்ட்’ சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது.

அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன,
உப்புத்தாள் கொண்டு,
வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன...
என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.

எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன்.
ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி.

நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன.

‘ராபின்ஹூட்’ என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும்.

பத்துமுறை பெடல் செய்தால், ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று
அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள்.

ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம்...
என சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.

டைனமோ இல்லையெனில்
போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும்.
அதேபோல்,
சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது,
அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும்.

‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது..’ என்று அலுப்பும்சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.

‘ஓவராயிலிங்..’ சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர்.

அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு,
அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி,
ஹேண்டில் பார் கைப்பிடி,
சீட்டுக்கு முன்னே இருக்கும்
பார் பகுதிக்கு ஒரு கவர்,
சீட்டுக்கு குஷன் கவர்,

இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது
ஒரு கலை.

இன்னும் சிலர்,
சின்னச்சின்ன மணிகளை,
வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள்.

 டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது
மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம்.
கறிவேப்பிலை வாங்கவே,
டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம்.

அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு,
கெத்துக் காட்டுவோம்.

சைக்கிளின் ரெண்டுபக்கமும்
பெல் வைத்து,
வித்தியாச ஒலி எழுப்புவார்கள்.

மாற்றங்கள்...
வேகங்கள்..

சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.

 ‘என்னடா மாப்ளே...
இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே.
இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா.
இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.

அப்பா ஓட்டிய சைக்கிள்,
முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம்
மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன.
அப்பாவுக்கு பைக்,
மனைவிக்கு ஆக்டீவா, 
மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.

குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன.

வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை.

’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது..’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.

காலச் சுழற்சியில்...
தொப்பையைக் குறைக்கவும்
சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

ஸ்டாண்ட் போட்டு,
சைக்கிளிங் பண்ணுவதற்கு,
காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது.
எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும்,
நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா..?

உங்கள் நினைவுகளை
கொஞ்சம் தட்டி விடுங்கள்....

Tuesday, November 19, 2019

தினமும் 120 குழந்தைகளுக்கு தன் சொந்தச் செலவில் காலை உணவு அளித்து வரும் தமிழாசிரியர் இளமாறன்

தினமும் 120 குழந்தைகளுக்கு தன் சொந்தச் செலவில் காலை உணவு அளித்து வரும் தமிழாசிரியர் இளமாறன்


‘‘இளமாறன் சார் ஸ்கூல்னு சொல்லியிருந்தா நேரா கொண்டுபோயி வுட்ருப்பனே... அவரோட அன்புக்கு ஈடே இல்ல. உங்களாண்ட பேரமெல்லாம் பேச மாட்டேன். 100 ரூபா கொடுங்க போதும்...’’ என்றார் அந்த ஆட்டோ டிரைவர். குறைந்தது ரூ.200 தூரத்தில் இருக்கும் இடம் அது!

இந்த ஆட்டோ ஓட்டுநர் என்றில்லை, வியாசர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர், மூலக்கடை... என வட சென்னை ஏரியாவைச் சேர்ந்த ஆட்டோகாரர்கள் அனைவருமே இப்படித்தான் இளமாறன் சார் என்றால் அன்பு காட்டுகிறார்கள். மக்களோ தங்கள் இதயம் நிறைய நிறைய பிரியத்தை வழிய விடுகிறார்கள்!

மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் வீட்டில் தங்கிவிட்ட விருந்தாளிகளுக்கே சோறு போட முகம் சுளிக்கும் இக்காலத்தில் ஒரு மனிதர் தினமும் 120 குழந்தைகளுக்கு தன் சொந்தச் செலவில் காலை உணவு அளித்து வருகிறார் என்றால் நம்பமுடிகிறதா?

ஆச்சர்யத்துடன் காமராஜர் சாலையில் இருக்கும் சென்னை உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். காலையிலேயே பள்ளிச் சிறுவர்களுக்கு சூடான இட்லி, பொங்கலை கொடுத்துக் கொண்டிருந்தார் தமிழாசிரியரான இளமாறன். ‘‘இதெல்லாம் ஒரு செய்தினு என்னைத் தேடி வந்திருக்கீங்களே...’’ என்றபடி கூச்சத்துடன் பேச ஆரம்பித்தார் இளமாறன்.

‘‘ஒரு நாள் கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன். அப்ப ஒரு பொண்ணு வயித்த வலிக்குதுனு சொல்லி அழுதது. என்னனு பார்த்தா முதல்நாள் ராத்திரியும் சாப்பிடலை... காலைலயும் பட்டினினு தெரிஞ்சுது. காலை பிரேயர்லயும் குறைஞ்சது ஐந்து குழந்தைகளாவது பசி மயக்கத்துல சுருண்டு விழுந்தாங்க.

மனசு தாங்கலை. எங்க ஸ்கூல் தலைமையாசிரியர் யு.முனிராமையா சார் கிட்ட பேசினேன். என் செலவுல குழந்தைகளுக்கு காலை சாப்பாடு போடலாம்னு இருக்கேன்னு சொன்னேன். நெகிழ்ந்துபோனவரு, ‘அதிகம் செலவாகுமே... உன் சம்பளத்துல கட்டுப்படி ஆகுமா’னு அக்கறையா கேட்டார்.

‘முடியும் சார்... அனுமதி மட்டும் கொடுங்க’னு சொன்னேன். உடனே ஓகே சொல்லிட்டார். அவர் மட்டும் இல்லைனா இது சாத்தியமாகி இருக்காது...’’ என்று சொல்லும் இளமாறன், உதவும் எண்ணம் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு சுலபமில்லை என்கிறார். ‘‘வீட்ல செஞ்சு கொண்டு வர்றதா இல்ல ஹோட்டல்ல வாங்கறதானு நிறைய கேள்விகள் அடுக்கடுக்கா எழுந்தது. கூடவே சாப்பிட்டு சின்னப் பிரச்னை வந்தாலும் அது ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும்னு புரிஞ்சுது. இதையெல்லாம் எதிர்கொள்ளத் தயாரானேன்.

சாப்பிடவே முடியாத நிலைல யார் யார் இருக்காங்க... யாருக்கெல்லாம் மோசமான குடும்பச் சூழல் இருக்குனு ஒவ்வொரு வகுப்பா கணக்கெடுத்தோம். சில குழந்தைங்க அப்பா அம்மா இல்லாம ஹாஸ்டல்லயும் தெரு ஓரங்கள்லயும் வசிக்கறாங்க. ஒவ்வொருத்தர் கதையும் உங்க மனசை பிசையும். ‘இங்க வர்றதுக்கு முன்னாடி பிச்சை எடுத்துட்டு இருந்தேன் சார்’னு சொல்ற பெண்களும் இங்க இருக்காங்க.

இதையெல்லாம் கணக்குல எடுத்து 120 குழந்தைகளை தேர்வு செஞ்சோம். பக்கத்துல இருக்கிற அம்மா உணவகத்துல இருந்து காலை டிபனை வரவழைக்கிறோம்...’’ என்ற இளமாறன் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இதற்காக செலவு செய்கிறார். ‘‘எங்க வீட்டுக்கு இந்த விஷயம் தெரியாது.

நான் சொல்லலை. மனைவிக்கா விஷயம் தெரிஞ்சு கேட்டாங்க. பிள்ளைகளோட கதையை சொன்னேன். கலங்கிட்டாங்க. முழு ஆதரவும் இப்ப கொடுக்கறாங்க. சக ஆசிரியர்களும் அப்படித்தான். எல்லாருமா ஒண்ணு சேர்ந்து சிசிடிவி வாங்கி பாதுகாப்புக்காக பள்ளில பொருத்தியிருக்கோம். இப்ப ஒரு பையன் வெளிய போனாலும் உள்ள வந்தாலும் அவங்க பெற்றோர்களுக்கு தானா தகவல் போற மாதிரி ஒரு டிவைஸ் பொருத்தலாம்னு இருக்கோம்..’’

புன்னகைக்கும் இளமாறன் 20 வருடங்களாக தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். ஆசிரியராகப் பணிக்கு சேர்வதற்கு முன் சுயேச்சையாக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். ‘‘எங்க இளமாறன் சாரைப் பத்தி நல்லா எழுதுங்க...’’ பேட்டி முடிந்து திரும்பிய எங்களிடம் வேண்டுகோள் வைத்தார் முதல் பத்தியில் வந்த அதே ஆட்டோ ஓட்டுநர்!

Friday, October 18, 2019

ஜானகியின் காதல்

ஜானகியின் காதல்

  கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர்.
அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இராமானுஜனை லண்டன் வருமாறு பேராசிரியர் ஹார்வி அழைத்திருந்தார். ஆனால் கடல்
கடந்து செல்லகூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அதை இராமானுஜன்
மறுத்திருந்தார். அதன்பின் இராமானுஜனை லண்டன் அழைத்துவரும் பொறுப்பை நெவில் எனும் கணித அறிஞரிடம் ஹார்வி ஒப்படைத்தார், அவர்
சென்னை வந்து இராமானுஜனை மிக கன்வின்ஸ் செய்து லண்டன் வர அழைத்தார்.





  இராமானுஜன் இறுதிமுடிவு தன் தாயினுடையதுதான் என கூறிவிட்டார்.
அன்று இரவு இராமானுஜனின் அன்னையின் கனவில் ஐரோப்பியர்களுக்கு மத்தியில் இராமானுஜன் தலையில் ஒளிவட்டத்துடன் அமர்ந்து இருப்பது போல் கனவு வர, அது அவர்களது குலதெய்வம் நாமகிரி தாயார் கொடுத்த
உத்தரவு என கருதி அவரது அன்னை அவரை ப்ரிட்டன் போக அனுமதித்தார்.



1914ம் ஆண்டு இராமானுஜன் லண்டன் கிளம்பினார். அப்போது அவரது வயது 27. அவரது 22வது வயதில் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவி ஜானகி. ஆனால்அன்றைய சம்பிரதாயப்படி அவருக்கு திருமணம் நடக்கையில் ஜானகிக்கு வயது 10 தான்.


  திருமணம் ஆகிய பெண்கள் அதன்பின் வயதுக்கு வரும்வரை தந்தை வீடு
சென்றுவிடுவார்கள். அதுபோல் ஜானகியும் தந்தைவீட்டுக்கு சென்றுவிட்டார்.
வயதுக்கு வந்தபின் தான் இராமானுஜனின் இல்லம்
வந்து சேர்ந்தார். ஆனால் இராமானுஜனின் அன்னை அப்போதும்
அவர்களை தனியாக இருக்க அனுமதிக்கவில்லை. அதன்பின்
இராமானுஜன் சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து இலண்டனுக்கும் ஜானகியை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இலண்டன் செல்ல முடிவானதும் இராமானுஜனின் நண்பர்கள் அவரை லன்டன்
பயணத்துக்கு தயார்படுத்துவதாக சொல்லி படுத்தி எடுத்துவிட்டார்கள்.



  கோட்டு வாங்கலாம், அளவு எடுக்கலாம், தொப்பி வாங்கலாம் என
சொல்லி அலைகழித்தது கூச்ச சுபாவம் உள்ள இராமானுஜனை மிக
சலிபப்டையவைத்தது. லண்டனின் டர்பன் அணிந்து இருந்தால் அங்கே சக
கணிதவியலாலர்கள் அவரை தவறாக நினைக்க மாட்டார்கள்
என்பது அவரது நண்பர்களுக்கு தெரியவில்லை.
இராமானுஜன் சுத்த சைவம். அந்த கால விதிகளின்படி பிராமணர்கள்
சமைத்ததை மட்டுமே உண்னமுடியும். அதனால் கப்பலில்
தானே சமைத்ததை மட்டும் உண்டார். அதுபோக சின்ன, சின்ன
விஷயங்களை கூட அவருக்கு எடுத்து சொல்ல யாரும்
இல்லை. கப்பலில் கடுமையாக குளிர்கிறது என புகார் செய்தபின்
தான் இராமானுஜனுக்கு கப்பலில் உள்ள படுக்கையில் உள்ள போர்வைகளுக்கு அடியே படுக்கவேண்டும் என்ற உண்மையே தெரியவந்தது. அதற்கு முன் இந்தியாவில் கயிற்றுகட்டிலில் படுப்பதுபோல்
கம்பளிகளுக்கு மேலே படுத்து குளிரில் அவதிபட்டுகொண்டு இருந்தார்.

   இங்கிலாந்து சென்றதும் உணவு பிரச்சனை அவரை வாட்டிஎடுத்தது. அது  உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. தன்
உணவை தானே சமைக்கவேண்டும் என்ற நிபந்தனையால்
அவருக்கு குளிர்காலத்தில் காய்கறி கிடைப்பது, ஷாப்பிங் போவது, சமைப்பது முதலியவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டன. 30 மணிநேரம்
தொடர்ந்து ஆராய்ச்சி செய்வார். அதன்பின் 20 மணிநேரம்
தொடர்ந்து உறங்குவார். சமைப்பது ஒரு நாளைக்கு ஒரு
முறை, இருமுறைதான். இதனால் உடல் மிக மெலிந்து விட்டது.
மருத்துவமனையில் சேர்க்கபட்டு பின் இந்திய பயணத்தை உடல் தாங்கும் என மருத்துவர்கள் கூறி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபட்டார், லண்டனில் இருந்த குறுகியகாலத்தில் அவர் செய்த ஆய்வுகளை நூறு ஆண்டுகள் கழிந்தும் இன்னும் கணித உலகில் மிகப்பெரும் அளவில் கொண்டாடபடும் அளவு உள்ளன என்பது குறிப்பிடதக்கது.


  சென்னைக்கு வந்து சேர்ந்ததும் அவரது தாயார் மட்டும் வந்து இருந்தார். "எங்கே ஜானகி" என கேட்கவும் அவரை நாமக்கல்லில் விட்டுவிட்டு வந்ததாக தாயார் கூறினார். கடும்கோபமடைந்த இராமானுஜன் ஜானகியை தன்
மாமியாருடன் சென்னைக்கு வரவழைத்தார். சென்னையில் கடைசி மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் ஜானகி அவருடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டார். இராமானுஜனின் கடைசி 3 ஆண்டுகள் ஜானகியுடன் கழிந்தது. "அவருக்கு அரிசி, லெமென் ஜூஸ்,
பால், நெய் கொடுத்துவந்தேன். வலி எடுக்கையில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பேன். அந்த பாத்திரங்கள் கூட இன்னும் அந்த நினைவாக என்னிடம் உள்ளன" என பெருமிதத்துடன் பின்னாளில் கூறினார் ஜானகி.

   இராமானுஜனுடன் அவரது மனம் முழுமை அடைந்ததா என்பதே பலரும்
சந்தேகித்த விஷயம். சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன்
33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார்.  அப்போது ஜானகியின் வயது 21.



  அதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. 'நான் இறந்தாலும் என் கணிதம் உன்னை காப்பாற்றும்" என மரணதருவாயில் இராமானுஜன் கூறியிருந்தார்.

  1962ம் ஆண்டு இராமானுஜனின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது தான் ஜானகி என ஒருவர் இருப்பதே தெரிந்து அவர்களுக்கு 20,000 ரூபாய் பரிசளித்து மாதம் 1000 ரூபாய் பென்ஷன் வழங்கினார்கள். இராமனுஜனின் வார்த்தைகள் இப்படி பலவருடங்கள்
கழித்தே உண்மையானது,.



  அரசாங்கம் மறந்தாலும் கணித உலகம் ஜானகியை மறக்கவில்லை. உலகின் புகழ்பெற்ற கணித நிபுணர்களான ஆண்ட்ரூஸ், பெர்னபார்ட் முதலானோர் சென்னை வந்தபோதெல்லாம் ஜானகியின் தையல்
கடைக்கு சென்று அவரை சந்திக்க தவறவில்லை. இராமனுஜனுடன் வாழ்ந்த
சிலவருடங்களை தன் இறுதிகாலம் வரை மனதில் சுமந்த
ஜானகி இறக்கையில் அவரை சந்திக்கபோவதாக சொல்லி மகிழ்ச்சியுடன் உயிர்நீத்தார். வருடம் 1994. அன்று ஜானகியின் வயது 95.

மித்தி பாகிஸ்தானில் இப்படி ஒரு ஊரா?

மித்தி பாகிஸ்தானில் இப்படி ஒரு ஊரா?


ஒரு இந்து பெண்ணா இப்படி சொல்வது ?

அந்த  இஸ்லாமிய பெரியவர்களால் அதை நம்பவே முடியவில்லை :
"அம்மா, நீங்கள்
நிஜமாகத்தான்
சொல்கிறீர்களா ?"

அந்தப் பெண் உறுதியான குரலில் சொன்னார்:
"ஆமாங்க பாய் , நமது ஊரில் உள்ள  மசூதியை இன்னும்  பெரியதாக கட்டுவதற்கு ,   நீங்கள் திட்டம் போட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன்.
என் இடம் அதற்கு  பக்கத்தில்தானே இருக்கிறது. அதையும் உங்கள் இடத்துடன் சேர்த்து பெரிதாக கட்டுங்கள் . இது என்னுடைய நன்கொடையாக இருக்கட்டும். "

இதை சொல்லி விட்டு அந்தப் பெண்மணி  அங்கிருந்து போய் விட்டார்.

அந்த இடத்தில் கூடி இருந்த முஸ்லிம் பெரியவர்கள் அனைவரும் கண்களில் நீர் மல்க, அருகில் இருந்த மசூதிக்கு சென்று , மண்டியிட்டு  மனம் உருகி , அந்த  இந்து சகோதரிக்காக
தொழ ஆரம்பித்தார்கள்.

இது நடந்தது நம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் !

கராச்சியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் மித்தி.

அங்குதான் இந்துக்களும் , இஸ்லாமியர்களும் இப்படி  பல ஆண்டு காலமாக ஒற்றுமையுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சுமார் 80 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் 70 சதவீதத்திற்கு மேல் இந்துக்கள்தான் வசிக்கிறார்கள்.

கோவிலில் பூஜை நடக்கும்போது , மசூதியில் ஒலிபெருக்கி வைப்பதில்லை.
அது போல மசூதியில் தொழுகை  நடக்கும்போது  கோவிலில் மணி அடிப்பதில்லை.

அந்த ஊரிலுள்ள  இஸ்லாமிய பெரியவர்  ஹாஜி முகம்மது இப்படிச் சொல்கிறார் :

"இந்துக்கள் தீபாவளி கொண்டாடும் போது எங்களை அழைப்பார்கள். நாங்கள் ஈகைத்திருநாளை கொண்டாடும் போது அவர்களை அழைக்கிறோம்.

ரம்ஜான் நோன்பு காலங்களில் , எங்கள் கண்களில் படும்படியாக இந்து சகோதரர்கள் சாப்பிடுவதில்லை.
சொல்லப்போனால் எங்களோடு சேர்ந்து அவர்களில் சிலரும் நோன்பு இருப்பார்கள்."

எல்லாம் சரி ! அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் எப்படி ?

ஒரு சிலர் அவ்வப்போது மதபேத வம்பு வழக்குகளை   ஆரம்பிப்பது  உண்டாம்;
ஆனால்  இரு தரப்பு பெரியவர்களும் அதை ஆரம்ப கட்டத்திலேயே
அடக்கி விடுவார்களாம்.

மித்தி.

பாகிஸ்தானில் இப்படி ஒரு ஊர் இருப்பது , இன்றுதான் எனக்கு தெரியும் .

மித்தியில் உள்ள இந்து கோவிலின் படத்தையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன் !

அரசியல்வாதிகளிடமிருந்தும் , மதவாதிகளிடமிருந்தும் இந்த ஊரை காப்பாற்றி வரும் இந்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி !

John Durai Asir Chelliah

Tuesday, September 24, 2019

ஓடாதிருக்கும் எஸ்கலேட்டரில் ஏற தடுமாறுவது ஏன்?

ஓடாதிருக்கும் எஸ்கலேட்டரில் ஏற தடுமாறுவது ஏன்?

வெகு ஜனங்கள் நின்று போய்விடும் நகரும் படிகட்டுகளில் (எஸ்கலேட்டர்) ஏறுவதற்கு தடுமாறுவதை பார்க்கிறோம்.

அதே போல புதிதாக அதில் ஏறுவதற்கு பெண்கள் உள்ளூர பயப் படவும் செய்கிறார்கள். (முக்கியமாக சேலை அணிந்திருப்பவர்கள்). குழந்தைகள் இதை பழகிக் கொண்டால் அதில் போய் வருவதையே கொண்டாட்டமாக உணர்கிறார்கள்.

நாலஞ்சு தடவை அதில் ஏறி இறங்கி பழகி விட்டால் மூளை அதன் இயக்கத்தை அனுமானித்து விடுகிறது பதிவும் செய்து வைக்கிறது.

சரி ஓடிக் கொண்டு இருக்கும் எஸ்கலேட்டர் நின்றிருக்கிறது அதில் மேலே ஏற முயற்சிக்கிறீர்கள் தடுமாற்றம் ஏற்படுகிறது ஏன்?

காதுக்குள் இருக்கும் நுண்ணிய நரம்பு முடிச்சு எதிர் பாராத உடல் தகவமைப்பை மூளைக்கு உணர்த்தும் வேலையை செய்கிறது.  நின்றிருக்கும் எஸ்கலேட்டர் என்பதை அதில் ஏறி முடிக்கும் வரை பல தடவைகள் மூளை சூழ்நிலையை கால்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் உணர்த்திக்கொண்டே இருக்கும்.  (ஸ்டீல் படிகள், வடிவமைப்பு இப்படி). இதன் காரணமாகவே சாதாரணமாக படிகளில் ஏறுவதற்கும் நகரும் படியில் ஏறிச் செல்வதற்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது.  இதை உள்ளுணர்வு தடுமாற்றம் (ஆங்கிலத்தில் "Broken escalator phenomenon" ) என்று சொல்லலாம்.

இங்கிலாந்து இம்பீரியல் காலேஜில் 2004ல் இது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில் (ஓட ஓட நிறுத்தி) சுமார் 20 யோசனைகளுக்குப் பிறகே சாதாரணமாக மூளை இது இயங்காத "படி" நிற்காமல் நடக்கலாம் என்பதை உணர்த்துவதாக அறியப்பட்டது.

இந்த தடுமாற்றம் யாவருக்கும் பொதுவானதே.