Tuesday, December 18, 2012

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-5.

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-5.




 

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...



2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் தொடர்-13


நாஸா அனுப்பிய IRAS தொலை நோக்கிக் கருவி, 
நமது சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அருகே, பூமியை விட மிகப் பெரிதாக ஒரு கோளைக் கண்டு பிடித்தது. இதுவரை இப்படிப் பல கோள்கள் விண்வெளியில் கண்டு விஞ்ஞானிகளால் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், இந்தக் கோள் ஒரு விசேசமானதாகக் காணப்பட்டது. காரணம் இந்தக் கோள் நகர்ந்து வரும் பாதை சூரியக் குடும்பத்தை நோக்கியதாகவும், குறிப்பாக பூமியை நோக்கிய நகர்வாகவும் இருந்ததுதான்.

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் வேறு ஒரு கோளையோ, நட்சத்திரத்தையோ, நட்சத்திர மண்டலத்தையோ மையமாக வைத்தே சுற்றுகின்றன. காரணம் அவைகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசை (Gravitation). இந்த ஈர்ப்பு விசை  அவற்றை, ஒன்றுடன் ஒன்றாக இணைத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும். அப்படி இருக்கும் போது, IRAS என்னும் நாஸா அனுப்பிய தொலைநோக்கிக் கருவி கண்டு பிடித்த அந்தக் கோள், எப்படிச் சூரியனை நோக்கி நகர முடியும் எனப் பார்த்த போது கிடைத்தது ஒரு ஆச்சரியமான பதில்.




பிளானெட் X என்னும் அந்தக் கோள் சூரியனின் ஈர்ப்பு விசையில், சூரியனையே சுற்றி வருகின்றது என்பதும், சூரியனைச் சுற்றிவரும் ஒன்பதாவது கோளாக அது இருக்கிறது என்பதும்தான் ஆச்சரியப்படத் தக்க அந்த விசயம் (புளூட்டோவை கோள் என்று எடுத்துக் கொள்ளவில்லை). இப்படி ஒரு கோள் சூரியனைச் சுற்றுகிறது என்ற சந்தேகம் ஏற்கனவே விஞ்ஞானிகளுக்கு இருந்திருக்கிறது.ஆனாலும் அதற்கு ஆதாரம் இல்லாமலே இருந்தது. IRAS இன் வின்வெளிப் பயணத்தின் பின்னர் அந்தச் சந்தேகம் சற்றே விலகத் தொடங்கியது. பிளானெட் Xஎன்பது சூரியனை ஏனைய கோள்கள் சுற்றுவது போல இல்லாமல், வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் சுற்றுவதை படத்திலிருந்து நீங்கள் அவதானிக்கலாம். இதற்கும் காரணம் உண்டு.






நமது 
அண்ட வெளியில் இருக்கும் அநேகமான நட்சத்திரங்கள் இரட்டை நட்சத்திரங்களாகவே (Binary Stars)  இருக்கின்றன. இப்படி இருக்கும் இரட்டை நட்சத்திரங்கள், தம்மைச் சுற்றிக் கொள்ள தமகக்கெனக் கோள்களைத் தனித்தனியே கொண்டிருந்தாலும், அவை இரண்டையும் சேர்ந்து பொதுவாகச் சுற்றும் கோள்களையும் கொண்டிருக்கும். சில இரட்டை நட்சத்திரங்கள், தாமே ஒன்றை ஒன்றும் சுற்றிக் கொள்ளும்.  நமது  சூரியனுக்கு அடுத்ததாக, அண்மையில்  இருக்கும் நட்சத்திரமான 'அல்பா சென்டாரி  (Alpha Centauri) என்னும் நட்சத்திரம் கூட முன்னர் ஒரு நட்சத்திரம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால் அது அல்பா சென்டாரி a,அல்பா சென்டாரி b (Alpha Centauri A, Alpha Centauri B) என்று இரட்டை நட்சத்திரங்கள் அருகருகே இருந்ததால் ஒரே நட்சத்திரம் போல இருந்தது.



இந்த அல்பா சென்டாரி போல, எங்கள் சூரியனுக்கும் இன்னுமொரு இரட்டைச் சூரியன் உண்டு என்றும், அவை இரண்டையும் சுற்றும் ஒரு கோளாகத்தான் இந்த பிளானெட் X இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் (இங்கு சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது). இதன்படி பிளானெட் X மிகவும் வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் இரண்டு சூரியன்களையும் சுற்றுகிறது.






இன்றைய நிலையில், அதாவது 2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில், ஒரு வருடத்துக்கு முன், பிளானெட் X என்னும் கோள், பூமியிலிருந்து 5.8 AU (Astronomical Unit) தூரத்தில் இருக்கிறது (இங்கு ஒரு AU = 149 598 000 கிலோமீட்டர்கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 AUதூரத்தில் இருக்கும். மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 AU என்று மிக அண்மிக்கும். உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012இல் 0.024 AU தூரத்தில் பிளானெட் X இருக்கும். அதாவது வெறும் 3.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும். இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் தூரத்தின் அரைவாசி தூரம்.


இப்போது இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது 
நமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத தூரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள்.ஒரு நட்சத்திரம் என்றால் அதன் ஒளியை வைத்துக் கண்டு பிடிப்பது சிரமம் இல்லை. ஆனால் ஒரு கோளை அண்டத்தின் இருட்டில் கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல. ஆனாலும் நாஸா அதைக் கண்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறது. எவ்வளவு காரணம் கேட்டாலும், நாஸா "அப்படி ஒரு கோளை நாங்கள் கண்டு பிடிக்கவே இல்லை" என்றும், "குளிர்சாதனக் கருவி பழுதடைந்ததால்தான் IRAS ஐ கீழே இறக்கினோம்" என்றும் அடம் பிடிக்கும் குழந்தை போலச் சொல்லிக் கொண்டு வருகிறது. இந்தக் கோள் பற்றிய இரகசியத்தை நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்று, அமெரிக்கப் பத்திரிகைகளான 'நியூயோர்க் டைம்ஸ்' (New York Times), வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) ஆகியன கூட வெளிப்படையாகப் போட்டுடைத்தன.





நாஸா கண்டு பிடித்த அந்தக் கோளுக்கு ஆராய்ச்சியாளர்கள் 'பிளானெட் எக்ஸ்' (Planet X) என்று பெயர் கொடுத்தாலும், 6000 ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பதேமியாவில் (Mesopotamia) வாழ்ந்த சுமேரியர்கள் அதற்கு 'நிபிரு' (Nibiru) என்று பெயரிட்டிருந்தனர். மொசப்பதேமியா என்பது ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே அமைந்திருந்த ஒரு பண்டைய நிலப்பகுதியாகும். அவர்கள் நிபிரு பற்றி என்ன சொன்னார்கள் என்று விளக்குவதற்கு, நான் எங்கள் மாயன்களின் கடவுளான'குக்கிள்கான்' (Kukilcan) என்பவரிடம் அழைத்துச் சென்று உங்களுக்குச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். இதுவரை மாயன்கள் இங்கு எங்குமே சம்மந்தப்படாமல் இருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போ அமைகிறது.

 மாயன்களின் கடவுள்களில் ஒருவர்தான் குக்கிள்கான். இவர் மனித வளர்ச்சிக்கும்,கலாச்சாரத்துக்கும் கடவுளாக மாயன்களால் வணங்கப்படுகிறார். மாயன்களின் மிகப் பெரிய இராச்சியமாக அமைந்த யூகட்டானில் (Yucatan) இல் உள்ள 'சிஷேன் இட்ஷா' (Chichen Idza) என்னுமிடத்தில், குக்கிள்கானுக்கென்றே ஒரு மிகப் பெரிய பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரமிட் பற்றி கடந்த பதிவுகளில் சொல்லியிருந்தேன்.



குக்கிள்கானுக்காக அமைக்கப்பட்ட இந்தப் பிரமிட்டின் படிகளின் அமைப்பு 365நாட்களைக் குறிக்கும்படி கட்டப்பட்டுள்ளது. அத்துடன் வேறு ஒரு அதிசயத்தாலும் உலக உல்லாசப்பிரயாணிகள் எல்லாரையும் அது கவர்ந்துள்ளது. அந்த அதிசயம் என்னவென்று பின்னர் சொல்வதாக முன்னர் சொல்லியிருந்தேன். ஆனாலும் இப்போதும் கூட அதை சொல்ல முடியவில்லை. அதை நான் தனியாகவே ஒரு அத்தியாயத்தில் எழுத வேண்டும். எனவே அதை இனி வரும் அதியாயங்களில் தருகிறேன்.


தனது கையில் ஒரு பாம்பை வைத்திருக்கும் இந்தக் குக்கிள்கான், உண்மையில் மாயன்களின் கடவுளா? அல்லது அவர் ஒரு அரசரா? என்று ஆராய்ந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். குக்கிள்கானின் சிலை ஒன்று, அவருக்கு என்று அமைக்கப்பட்ட பிரமிட்டிலேயே செதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சிலையையும், மாயன்களின் சித்திர எழுத்துகளையும் ஆரய்ந்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான ஒன்றைக் கண்டுபிடித்தனர்.




குக்கிள்கான், வெள்ளை நிறத்தவராகவும், நீலக் கண்களை உடையவராகவும்,வெள்ளைத் தலை முடியைக் கொண்டவருமாக இருந்திருக்கிறார் என்பதையே அவர்கள் கண்டு கொண்டனர். அத்துடன் அவரது தலை பின் பக்கம் நீண்டதாகவும் இருந்திருக்கிறது. இவை எவையும் மாயன்களின் அடிப்படைத் தன்மைக்கு சற்றும் ஒத்துவராத சாயலாக இருந்திருக்கிறது. மாயன்கள் கருத்த நிறமும், தலைமுடியும் கொண்டவர்கள்.


இதனடிப்படையில் மேலும் ஆராய்ந்து பார்த்த போது, குக்கிள்கான் கடவுளாக இருப்பதற்குப் பதிலாக அவர் ஒரு மனிதனாகவ, மாயன்களின் அரசராக இருந்ததற்குச் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தார்கள். அப்படி அவர் மனிதனாக இருந்த பட்சத்தில், நிச்சயமாக அவர் மாயன் வம்சத்தில் உள்ள ஒருவராக இருந்திருக்க முடியாது.




அப்படியானால் இந்தக் குக்கிள்கான் யார்? மாயன் அல்லாத வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்திருப்பார்?


ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் குக்கிள்கான் அயல் கிரகத்தில் இருந்து வந்த ஒரு ஏலியனோ என்றும் சந்தேகித்தனர். ஆனால் அப்படி இல்லை என பின்னர் முடிவுக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் முடிவுக்கு வருவதற்குக் காரணமும் ஒன்று உண்டு.


மாயன்களின் பதிவின்படி, குக்கிள்கான் மாயன்களுடன் இருந்து பின்னர் அவர்களை விட்டுப் பிரிந்து விடைபெற்றுச் செல்கிறார். அப்படிச் செல்ல முடிவெடுத்த குக்கிள்கான் கடல் வழியாகவே கிழக்கு நோக்கிச் செல்கிறார். அத்துடன் அவர் தனது சொந்த இடத்துக்குச் செல்வதாகச் சொல்லியும் விடைபெறுகிறார். சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அதன்  பின்னரே மாயன்களின் அழிவும் ஆரம்பித்திருக்கிறது.


அப்படியென்றால் குக்கிள்கான் கடல் வழியாக எங்கே சென்றிருப்பார் என்று ஆராய்ந்து பார்த்தால், குக்கிள்கான் சென்ற இடம் 'சுமேரியா' (Sumeria) எனத் தெரிய வந்தது. அவர் சொந்த இடம் செல்வதாகச் சொன்னபடியால் அவர் சென்ர இடம் சுமேரியாவாகவே இருந்திருக்க வேண்டும். இதுவரை மாயன்கள் பற்றி பெருமையுடன் சொல்லி வந்தாலும், அவர்கள் சரித்திரம் 4000 ஆண்டுகள் கொண்ட வரலாறாகவே எமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் சுமேரியரின் வரலாறோ 10000வருடங்களுக்கு முந்தயது. உலக நாகரீகங்களிலேயே மிகவும் தொன்மையான நாகரீகம் சுமேரிய நாகரீகமாகத்தான் இருந்திருக்கிறது.




எம்மை வியக்க வைக்கும் அறிவுடன் ஆச்சரியப்படுத்திய மாயனுக்கே, அந்த அளவுக்கு அறிவைப் புகுத்தியது குக்கிள்கான்  என்ற ஒரு சுமேரியர் என்றால், அந்தச் சுமேரியர்கள் எவ்வளவு அறிவுடன் இருந்திருக்க வேண்டும்? 6000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல், தொழில் நுட்பம் ஆகிய அனைத்திலும் சுமேரியர் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு பல தொல்லியல் ஆதாரங்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றன. மாயன்கள் வைத்திருந்த 'கிறிஸ்டல் மண்டையோடுகள்' கூட(Crystal Skulls) சுமேரியாவில் இருந்துதான் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது என்றால்,நீங்களே சுமேரியர்கள் பற்றிய ஒரு முடிவுக்கு வாருங்கள்.




ஆனாலும், இப்போது சுமேரியரைப் பற்றி ஆராய்வதல்ல எனது நோக்கம். அதனால் மிகவும் சுவாரஷ்யமான சுமேரியர் பற்றிய பல தகவல்களை உங்களுக்கு என்னால் சொல்ல முடியவில்லை. அது நிச்சயம் உங்களுக்கு ஒரு இழப்புத்தான். எனவே மாயனின் உலக அழிவுடன் சம்மந்தப்பட்ட சுமேரியரின் தகவலை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.


சுமேரியர்களின் அரசர், வேறு சிலருடன் உரையாடும் காட்சி உள்ள ஒரு சுவர் ஓவியம் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தச் சுவர் ஓவியம் மிகச் சாதாரணமாகவே முதலில் பார்க்கப்பட்டது. ஆனால் தற்செயலாக அதில் ஒரு இடத்தில் வடிவமைக்கப்பட்ட சூரியக் குடும்பத்தின் படத்தைப் பார்த்த போதுதான் ஆச்சரியம் தோன்றியது.




அந்த ஓவியத்தில், 
நமது  சூரியன் மையத்தில் இருக்க, அதைச் சுற்றி சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும், அதன் அதன் வரிசையில் வரையப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல், அந்தக் கோள்களின் அளவுகள் கூட கொஞ்சமும் பிசகாமல் வடிவமைக்கப் பட்டிருந்தன.




மிகச் சமீபத்தில்தான், நவீனமான நாங்களே சூரியனைத்தான் மற்றக் கோள்கள் சுற்றுகின்றன எனக் கண்டு பிடித்தோம். அதுவரை பூமியைத்தான், சூரியன் உட்பட மற்றக் கோள்கள் சுற்றுகின்றன என நினைத்திருந்தோம். ஆனால் சுமேரியர்களோ,சூரியனை மையப் பகுதியில் வைத்ததுமில்லாமல், அனைத்துக் கோள்களையும் அதனதன் உருவ அளவுகளிலும் வடிவமைத்திருக்கிறார்கள்.



அத்துடன் நவீன விஞ்ஞானமே 'நெப்டியூன்' (Neptun), 'புளூட்டோ' (Pluto) ஆகியவற்றை சமீபமாகக் கண்டு பிடித்த வேளையில், சுமேரியர்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அவற்றை மிகச் சரியாகக் கண்டு பிடித்திருந்தனர். இது எப்படிச் சாத்தியம்? நம்பவே முடியாத ஆச்சரியம் அல்லவா இது? அதுவும் வெற்றுக் கண்களால் பார்த்துக் கணிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

சுமேரியர்களின் ஓவியத்தில் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இந்தப் பதிவுக்குக் காரணமே அந்த ஆச்சரியம்தான். அது என்ன தெரியுமா……? பிளானெட் எக்ஸ் அல்லது நிபிரு என்று சொல்லப்பட்ட, நாஸா கண்டு பிடித்த அந்தக் கோளும் அதில் காணப்பட்டது.







நுணுக்கமாக அமைந்த அவ்வோவியத்தில் சூரியனை மொத்தமாக பதினொரு கோள்கள் சுற்றுவதாக வரையப்பட்டிருந்தது. அது எப்படி பதினொரு கோள்கள் வரும் எனப் புரியாமல் தவித்தனர் ஆராய்ச்சியாளர்கள். இவ்வளவு நுணுக்கமாக,சூரியன், வியாழன், சனி, பூமி, செவ்வாய் என அனைத்துக் கிரகங்களையும் அளவு கணக்கில் மிகச் சரியாக கணித்த சுமேரியர்கள் இப்படி ஒரு மாபெரும் தவறை விட்டிருப்பார்களா…?

பின்னர் சுமேரியர்களின் சித்திர எழுத்துகளையும், கல்வெட்டுகளையும் படித்த போதுதான் அதற்கு விடை கிடைத்தது. அதன்படி அவர்கள் சுவரில் வரைந்திருக்கும் பதினோராவது கோளை 'நிபிரு' எனச் சொல்லியிருக்கிறார்கள். சுமேரியன் மொழியில்'நிபிரு' என்றால் இடைவெட்டும் கோள் (Crossing Planet) என்று அர்த்தம். எப்படி, இப்படி ஒரு அர்த்தம் வரும் வகையில் அவர்கள் பெயரிட்டிருக்க முடியும்?


இவ்வளவுக்கும் காரணமான நிபிருவால் பூமிக்கு 2012 மார்கழி மாதம் அழிவு உண்டுதானா? அல்லது வேறு காரணதால் பூமிக்கு அழிவு உண்டா என்று என்னைக் கேட்டால், "ச்சே! அப்படி எதுவும் இல்லை. பயப்பட வேண்டிய அவசியமே இல்லை"என்றுதான் நானும் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் எம்மைச் சுற்றி சிலாரால் இரகசியமாகச் சுற்றப்பட்டு வரும் சதிவலை பற்றி அறிந்ததிலிருந்து அப்படிச் சொல்ல முடியவில்லை. அது உண்மையோ, பொய்யோ என்று கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் உறக்கமே வரமுடியாது. அது உண்மையாக இருந்தால் நீங்கள் கூட உறங்க மாட்டீர்கள்.





"அறிவியல், அறிவியல்  என்று இதுவரை காலமும் எமக்குப் படம் காட்டிவிட்டு, திடீரென உலகம் அழியத்தான் போகிறது என்பது போலப் பயம் காட்டுகிறாரே இந்த ஆள்" என்று நீங்கள் என்னைப்பற்றி, கடந்த பதிவை வாசித்ததிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கலாம்.
 "பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் பயமாக இருக்கிறது" என்று எழுத்தாளர் புதுமைப்பித்தன் சொன்னது போலத்தான், உலக அழிவு பற்றி நானும் சொல்ல வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து, மாபெரும் மர்மமான உலக மகா பயங்கரம் ஒன்று தன் வாயை 'ஆ' எனத் திறந்து எம்மை விழுங்கக் காத்திருக்கிறது. பல இக்கட்டுகளைத் தாண்டி இன்று அவற்றைப் பற்றி முழுமையாக உங்களுக்கு நான் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு வந்திருக்கிறேன். 

ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய ஆய்வுகளின்படி, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழிவதாயின் எந்த எந்த வகையில் அழியலாம் என்பதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி....,

1. சூரியன், பால்வெளி மண்டலத்தில் உள்ள கருப்புப் பள்ளத்தினாலோ(Dark Rift) அல்லது கருந்துளையினாலோ (Black Hole) ஈர்க்கப்பட்டு அழியலாம்.

2. பூமியின் வட, தென் துருவங்களுக்கு ஊடாகச் செல்லும் அச்சு இடம்மாறி (Pole Shift), பூமியின் காலநிலை மாற்றங்களினால் அழியலாம்.

3. விண்ணில் சுற்றித் திரியும் மிகப் பெரிய விண்கற்களில் (Asteroid)ஏதாவது ஒன்று தாக்கி பூமியில் அழிவுகள் ஏற்படலாம்.

4. பிளானெட் எக்ஸ் (Planet X) அல்லது நிபிரு (Nibiru) என்று சொல்லப்படும் கோள் தாக்குவதால் பூமி அழியலாம்.

5. சூரியனில் ஏற்படும் அதியுயர் மிகைவெப்பப் பாய்ச்சலால் உருவாகும் மின்காந்தக் கதிர்களின் தாக்கத்தால் பூமி அழியலாம்.

இப்படிப் பல விதங்களில் பூமி அழியும் என்று அவர்கள் சொன்னாலும்,அவற்றில் சில உண்மையாகவே நடப்பதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளில் பலர் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, அந்த அழிவுகளில் மிக முக்கியமாக சொல்லப்படுவது சூரியனின் மின்காந்தக் கதிர்த் தாக்குதலைத்தான்.


இவற்றில் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை உண்டு, எந்த அளவுக்குப்பொய் உண்டு என்பதைச் சாதாரணமான மக்களுடன் பகிர்ந்து கொள்ள,எந்த நாட்டு அரசுகளும் முன்வரவில்லை. நாட்டின் நலன்களும், நாட்டு மக்களின் நலன்களும்தானே அரசுகளுக்கு முக்கியம். அப்படி இருக்க ஏன் அரசுகள் இவற்றைச் சொல்லத் தயங்குகின்றன? உண்டு, இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியதுதானே! ஏன் இன்றுவரை எந்த அரசும் இது பற்றி தன் வாயைத் திறக்கவே இல்லை? மக்கள் இவற்றை அறியக் கூடாது என இந்த அரசுகளைத் தடுப்பது யார்?

இவற்றைக் கூர்மையாகப் பார்த்தால், உலக மக்களைச் சுற்றி,அவர்களை அறியாமலேயே ஒரு மிகப் பெரிய சதிவலை பின்னப்பட்டு வருகிறதோ எனச் சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்தச் சதிக்குக் காரணமாக இருப்பவர்கள் உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் மிகப் பெரிய சக்திகளே என்னும் சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. எனது தனிப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையை மட்டும் வைத்து, இந்தச் சதிகள் பற்றிச் சாதாரணமாக உங்களுக்கு நான் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் பாதுகாப்பு நிறைந்தவனோ, பெரியவனோ கிடையாது. இவற்றை வெளி உலகுக்கு வெளியிடத் துணிச்சலும், பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது.காரணம், இங்கு குற்றம் சாட்டப்படும் சக்திகளின் வீரியம் மிகப் பெரியது. 

நான் சொல்லப் போகும் சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே பலர் கருத்து வெளியிட்டிருந்தாலும், அதில் முக்கியமானவர் என்று கருதப்படும் ஒருவரைக் குறிப்பிட்டு உங்களுக்குச் சொல்ல வேண்டும்.அவர் பெயர் ஜெஸ்ஸி வென்டூரா (Jesse Ventura). அமெரிக்க மல்யுத்தம்(American Wrestling) என்னும் மிகப் பயங்கமாக மோதும் மல்யுத்தப் போட்டிகளை, நீங்கள் நிச்சயம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.அந்த மல்யுத்தத்தில் ஒரு பிரபலமான வீரராக இருந்தவர்தான் இந்த ஜெஸ்ஸி வென்டூரா. இவரை நாம் ஒரு மல்யுத்த வீரர் என்னும் சிறிய கூட்டுக்குள் வைத்து அடைத்துவிட முடியாது. அதையும் தாண்டி இவர் பன்முகத் தன்மை கொண்டவர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னொல்ட் ஸ்வார்ட்ஸநெகர் (Arnolt Schwarzenegger) போல, ஜெஸ்ஸி வென்டூராவும் அமெரிக்காவின் மினஸொட்டா (Minnesota) மாநிலத்தின் கவர்னராக இருந்திருக்கிறார். அத்துடன் இவர் ஒரு சினிமா நட்சத்திரமும் கூட. பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். இதில்விசேசம் என்னவென்றால் இவரும் ஸ்வார்ட்ஸநெகரும் சேர்ந்து 'பிரெடேட்டர்' (Predator) என்னும் வெற்றிப் படத்தில் நடித்துள்ளனர்.


தற்போது இந்த ஜெஸ்ஸி வென்டூரா, உலகில் நடக்கும் சதிகளைத் தொலைக்காட்சி மூலம், வெட்ட வெளிச்சத்துக்குத் துணிச்சலாக கொண்டுவருகிறார். நான் இனி தரும் விபரங்கள் இவரும், வேறு பலரும் வெளிக்கொண்டு வந்தவையாக இருக்கும். ஆனாலும் ஆதாரத்துக்காக, ஒருவரையாவது உங்களுக்கு நான் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற நிலையில் இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 

இனி நான் தரும் எல்லாமே அதிர்ச்சி தரும் தகவல்களாகவே இருக்கும். எனது தொடரின் உச்சக்கட்டமாக அமைவதும் இவைகளாகத்தான் இருக்கும். இவற்றை நீங்கள் வாசிக்கும்போது, உங்களால் நம்பவே முடியாமல் போகும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எனவே தயங்காமல், நான் தரும் தகவல்களையும்,பெயர்களையும் கொண்டு கூகிள் (Google) மூலமாகவும், யூட்யூப் (Youtube)மூலமாகவும், வேறு இணையத் தளங்கள் மூலமாகவும் தேடினீர்களென்றால், தகவல்கள் அருவி போல கொட்டும். 

இதற்கு மேலும் இது பற்றி விளக்கிக் கொண்டிருக்காமல் விசயத்துக்குப் போகலாம் வாருங்கள்.......!    

உலக மக்கள் அனைவரையும் உண்மையை அறிய விடாமல் தடுக்கும் இந்த சக்திகள் யார்? ஏன் இவர்கள் தடுக்கிறார்கள்? என்பன மில்லியன் டாலர் கேள்விகள். இந்த மில்லியன் டாலர் கேள்விகளுக்குப் பதில், பலஇடங்களிலிருந்து எமக்குக் கிடைக்கிறது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். முதலில் நாம் அமெரிக்காவில் உள்ள 'கொலராடோ' (Colorado) மாநிலத்தில் அமைந்த 'டென்வெர் விமான நிலையத்தில்' (Denver Airport) இருந்து எமது தேடலை ஆரம்பிக்கலாம். நீங்களும் ஒருதரம் ஆசுவாசமாக மூச்சை விட்டுக்கொண்டு வாசிப்பதற்குத் தயாராகுங்கள்........!



சாதாரணமாகப் பார்த்தால் பயணிகள் சுறுசுறுப்பாகப் பயணத்தில் ஈடுபடும் ஒரு விமான நிலையம்தான் இது. ஆனால், அந்தப் பயணிகள் எவருக்கும் தெரியாமல் அங்கே அமைதியாக ஒரு விசயம் நடந்து கொண்டிருக்கிறது. பின்னர் எப்படியோ,  இப்படி ஒன்று நடப்பது மெது மெதுவாக கசியத் தொடங்கியதும்தான் மீடியாக்களும் மக்களும் பயத்தில் விழித்துக் கொண்டனர். ஐக்கிய அமெரிக்கப் (USA) பெருநிலத்தில், நட்ட நடுவே அமைந்தது இந்த டென்வெர் விமான நிலையம். விமான நிலையத்துக்குக் கீழே, மிக ஆழத்தில் பலர் தங்கியிருக்கக் கூடிய கட்டடங்கள், அமெரிக்க அரசினாலேயே அமைக்கப்படுகின்றன. அப்படி அமைக்கப்படும் சுரங்க கட்டடத்தின் நீள அகலம் எட்டுச் சதுரக் கிலோ மீட்டருக்கும் அதிகம். இவ்வளவு மிகப்பெரிய பிரமாண்டமான நிலக் கீழ் கட்டடங்கள், மிக ஆழத்தில்அதுவும் ஒரு விமான நிலையத்திற்கும் கீழே கட்டப்படுவதன் காரணம் என்ன? 


இந்த நிலக் கீழ் கட்டடங்கள் எந்த ஒரு அழிவுகளினாலும் பாதிக்கப்படமுடியாதவாறு மிகமிகப் பலம் வாய்ந்த முறையில், நவீனமாக அமைக்கப்படுகின்றன. இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படுவது பற்றி எந்த தகவலும் வெளியே தெரியாமல் மிக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. பாதுகாப்பென்றால், எப்படிப்பட்டபாதுகாப்பென்று நினைக்கிறீர்கள்? அமெரிக்க இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு இதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டடம் அமைப்பவர்களிடம் இது பற்றிக் கேட்டால் கிடைக்கும் பதில் மௌனம் மட்டும்தான்.



மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இதை ஆராய்ந்து பார்த்தால், பலமானபாதுகாப்புகளுடன் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் உலகம் அழியும்போது, பலர் பாதுகாப்பாக வாழும்படி அமைக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறது. அதாவது ஒரு நட்சத்திர விடுதியின் வசதிகளுடன் கூடிய பல அறைகளுடன் இது அமைக்கப்படுகிறது. இதை யார் அமைக்கிறார்கள்? எதற்கு அமைக்கிறார்கள் என்ற எந்தக் கேள்விக்கும்அங்கு யாரும் பதில் சொல்லத் தயாரில்லை.  எல்லாமே மர்மங்களாக இருக்கின்றன. 

கட்டடம் கட்டப்படும் இடத்தில், 'New World Airport Commission' என்னும் ஸ்தாபனத்தால் கட்டடம் கட்டப்படுகிறது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஸ்தாபனம் பற்றி ஆராய்ந்தால்,அப்படி ஒரு ஸ்தாபனம் அமெரிக்காவில் சட்டரீதியாக, எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அந்தக் கல்வெட்டில் உள்ள சின்னமும், 'நியூ வேர்ல்ட் ஆர்டர்' (New World Order) என்னும் பெயரும் எமக்கு முன்னரே பரீட்சயமானதால், பல உண்மைகளையும், பயங்கரங்களையும் அவை சொல்லாமல் சொல்ல ஆரம்பித்திருக்கின்றன.

"அட! அவர்களா நீங்கள்?" என்ற ஆச்சரியத்துடன் இதைஆய்வுக்குட்படுத்தியபோது, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்த விமான நிலையம் ஒன்றும் மிக முக்கியமான விமான நிலையமோ அல்லது கொலராடோ ஒரு முக்கிய மாநிலமோ கிடையாது. ஆனால் இந்த விமான நிலையத்துக்கு மிக அருகில், சமீபமாகப் பலர் வீடுகளை வாங்கத்தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்று பார்த்தால் ஒட்டு மொத்த தலையே சுற்றும் போல் உள்ளது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் என்று நீங்கள் யார் யாரை நினைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் அங்கே வீடுகளை வாங்கியிருக்கின்றனர். யார் யார் வாங்கியுள்ளனர் என்ற பெயர்கள் கூட எனக்குத் தெரிந்திருந்தாலும், நான் அவற்றை  இங்கு குறிப்பிட்டுச்சொல்லவில்லை. உலகின் பணக்காரர்கள் எல்லோரும், ஒரு பிரபலமே இல்லாத சாதாரண இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல், மிகமிக இரகசியமாக. 

சொல்லி வைத்தது போல எல்லாப் பணக்காரர்களும் ஏன் டென்வெர் விமான நிலையத்துக்கு அருகில் வீடுகள் வாங்குகிறார்கள்? ஏன் விமான நிலையத்துக்குக் கீழே, நிலக் கீழ் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன?உலகம் அழியும் நிலை தோன்றினால் அதிலிருந்து காப்பாற்றப்பட ஒரு சிலர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுவார்களா? அந்த ஒரு சிலரில் நானோ, நீங்களோ இல்லாமல் அதிகாரத்தில் உள்ளவர்களும், உலகக் கோடீஸ்வரர்களும் மட்டும்தான்காப்பாற்றப்படுவார்களா? 

இந்தக் கேள்விகளின் அடிப்படையிலேயே, சமீபத்தில் வெளிவந்த '2012'என்னும் ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தை ஒரு 'ஆக்ஷன் த்ரில்லர்' என்னும் வகையிலேயே நாம் பார்த்தோம்.ஆனால், ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் பற்றி விரிவாகப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்.  அந்தப் படம் எடுக்கப்பட்டதே, உலகம் அழியுமானால், அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களும், கோடீஸ்வரர்களும், அதியுயர் அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மட்டுமே அந்த அழிவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதை மையமாக வைத்துத்தான். முடிந்தால் அந்தப் படத்தை ஒரு முறை மீண்டும் பாருங்கள். 


உலக அழிவு பற்றிய பயத்தினால், நாம் இப்படி எல்லாம் அவர்களைப்பற்றி அபாண்டமாகச் சந்தேகப்படுகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அப்படி இல்லை என்று பதில் சொல்வதற்கு நான்,டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களைக் காட்ட மீண்டும் உங்களை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

மனிதனால் செய்யப்படும் தொலைதூரப் பயணங்களில் ஆபத்தானது என்று கருதப்படுவது விமானப் பயணம்தான். பிரயாணிகள் பயணம் செல்லும் விமான நிலையங்கள் உலகெங்குமே அழகானவையாகவும்,மனதுக்கு உகந்தவையாகவுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த டென்வெர் விமான நிலையம் எப்படிக் காட்சியளிக்கிறது தெரியுமா?விமான நிலையச் சுவர்களில் விசித்திரமாக, மிகப் பிரமாண்டமாக சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அந்தச் சித்திரங்கள் அனைத்தும் சொல்வது வேறெதைப் பற்றியுமல்ல, உலக அழிவைப் பற்றித்தான்.

விமான நிலையத்துக்குக் கீழே உலக அழிவில் இருந்து தப்பிக் கொள்ளப் பாதுகாப்பான இடம். மேலே உலக அழிவைச்  சொல்லும் சித்திரங்கள். கீழே கட்டப்படுவது வெளியே தெரியவராது என்ற நினைப்பில், குறியீடாக இந்த உலக அழிவு அங்கு சித்திரமாக வையப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு விமான நிலையத்திலாவது இறந்த உடல்கள், சவப்பெட்டிகள், மனித அவலங்கள் எனச் சித்திரங்கள்வரைவார்களா……..? ஆனால் டென்வெர் விமான நிலையத்தில் வரைந்திருக்கிறார்கள். அந்தச் சித்திரங்களில் சிலவற்றை நீங்களே பாருங்கள்………!










படங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்குஉங்களுக்குத் தர முடியவில்லை.

அதிகம் எதற்கு? எந்த விமான நிலையத்திலாவது பயணப் பெட்டியினுள் இருந்து சாத்தான் வெளிப்படுவது போல சிலை செய்து வைத்திருப்பர்களா? அதுவும் இருக்கிறது அங்கே! 
எல்லாம் சரி, உலகம் அழிவது என்றால் மாயன் இல்லாமல் ஒரு உலகஅழிவா...? அதுவும் அங்கே காணப்படுகிறது. மாயன் இனத்துச் சிறுமி ஒருத்தி, மாயன்களின் சுவர் ஓவியத்தின் பகுதியொன்றைத் தன் கைகளில் ஏந்தியபடி இருப்பதும் அந்தச் சித்திரங்களில் காணப்படுகிறது.இது மேலதிக பயத்தை எமக்கு ஏற்படுத்துகிறது. அதையும் பாருங்கள். 

இங்குமா மாயன் என்று ஆச்சரியம் வரவில்லையா...?

 இந்தச் சித்திரங்கள் பற்றி நிறையவே விமர்சித்துக் கொண்டு போகலாம். அவ்வளவு உலக அழிவு பற்றிய விபரங்கள் அடங்கிய சித்திரங்கள் அங்கு வரையப்பட்டிருக்கின்றன. ஒரு விமான நிலையத்தில் அப்படிச் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பது அசாதாரணமானவை. ஆனால் ஏன்.....?  

இந்த டென்வெர் விமான நிலையத்தின் நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்ட சுரங்க நகரைப் போல, அமெரிக்காவில் மட்டும் மொத்தமாக பதினெட்டு இடங்களில் நிலக் கீழ்ச் சுரங்கங்கள் இராணுவப் பாதுகாப்புகளுடன் இரகசியமாக அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் உலகெங்கும் பல இடங்களிலும் மிக இரகசியமாக, பல கட்டடங்கள் இப்படி அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆப்ரிக்காவில் மிகப்பெரிய நிலக் கீழ் நகரம் அமைக்கப்பட்டு வருகிறது.இவையெல்லாம் எதற்கு? இவ்வளவு பணச் செலவுகளுடன் காரணமில்லாமல் யாரும் இவற்றை அமைப்பார்களா..? 






மேலே படங்களில் உள்ளவை, அமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்படும் நிலக் கீழ் நகரங்கள். வெளியே எதுவுமே தெரியாத அளவுக்கு அமைதியாகக் காணப்படும் இவை உள்ளே மிகப் பிரமாண்டமானவை. 

 அமெரிக்கா என்னும் நாட்டில் அநேக இரகசியங்கள் மீடியாக்களினால் வெகு சுலபமாக வெளிவந்து விடுகின்றன. ஆனால் அமெரிக்கா தவிர்த்து சீனா, ரஷ்யா போன்ற பிற நாடுகளில் அப்படி அல்ல. அங்கு என்ன என்ன கட்டடங்கள் அமைக்கப் படுகின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியங்கள். இதனாலேயே நான் முன்னர் சொன்ன '2012'என்னும் ஆங்கிலப் படத்தின் இறுதியில் கூட, உலக உயர் சக்திகள் சீனாவில் இணைவதாகக் காட்டியிருந்தார்கள். 

இவை மட்டுமல்ல எம்மை ஆச்சரியப்படுத்துபவை. இதைவிட இன்னுமொன்றும் உண்டு. அதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவும் தெரிந்து விட்டால், உலகம் அழியுமா என்னும் சந்தேகம் வருவதற்குப் பதில், அழியும் என்னும் நம்பிக்கையே உங்களுக்கு ஏற்பட்டுவிடும். இதைத் தெரிந்து கொள்ள ஐரோப்பா,ஸ்காண்டினேவியா நோக்கி எம் பார்வையைத் திருப்ப வேண்டும். 

நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் 'ஸ்வால்பார்ட்' (Svalbard) எனும் தீவு ஒன்று உண்டு. எங்கு பார்த்தாலும் மலைகளும்,அவற்றில் நிறைந்திருக்கும் பனிகளுமாகவே அந்த இடம் எப்போதுமே காட்சியளிக்கும். இந்த இடமும் டென்வெர் விமான நிலையத்தைப் போல மிக முக்கிய இடமாக இப்போது இருக்கிறது. அது என்ன தெரியுமா...?

சொல்கிறேன்......! 


உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள்ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக அங்கு பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது. ஒன்பது மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு, மலைகளைக் குடைந்து, நிலத்தடிச் சுரங்கமாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் இந்த விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.உலகம் அழிந்தாலும், இவற்றிற்கு எந்தப் பாதிப்பும் வரமுடியாத அமைப்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் செலவு செய்து குளிர்பதனப்படுத்தப்பட்டு இவை பாதுகாக்கப்படுகின்றன.


உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில், அதன் பின்னர் உருவாகும்மாற்று உலகத்தில், அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மரம் செடிகளை உற்பத்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.உண்ண உணவின்றிப் பல நாடுகளில் மக்கள் உயிர்களை விட்டுக் கொண்டிருக்கும்போது, இல்லாத அழிவு ஒன்றை எதிர்பார்த்து இவ்வளவு செலவில் இப்படி ஒரு பாதுகாப்பு வைப்பகம் எதற்காக?





இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும்?பூமியின் வட, தென் துருவத்திற்கான அச்சு தனது தடத்திலிருந்து இடம் மாறினால் (Pole Shift), தற்சமயம் வெப்ப வலயப் பிரதேசமாக இருக்கும் இடங்கள், குளிர்ப் பிரதேசங்களாகவும், குளிர்ப் பிரதேசங்கள் வெப்ப வலயப் பிரதேசங்களாகவும் மாறும் ஆபத்து உண்டு என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஏனோ ஞாபகத்திற்கு வரவில்லையா? 




உலகம் அழியும் ஒரு நிலை ஏற்படுமாயின், மரங்களைப் பாதுகாக்கும்இடம் வெப்ப வலயப் பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறலாம். அழிவிலிருந்து காப்பாற்றப்படும் சில மனிதர்களால், வெப்ப வலயமாக மாறியிருக்கும் இந்த நோர்வே பகுதியில் மீண்டும் ஒரு மனித நாகரீகத்தை உருவாக்கும் திட்டம் யாராலும் உருவாக்கப்பட்டதா?

மனிதர்கள் அங்கே! மரங்கள் இங்கே! என்ற இந்த புத்திசாலித்தனமானசெயல்களை எல்லாம் இவர்களுக்குச் செய்வதற்கு கட்டளையிட்டவர்கள் யார்? இவையெல்லாவற்றையும் யார் அமைக்கிறார்கள்? உலகப் பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும்,பெரும் சக்தி வாய்ந்தவர்களையும் எந்த சக்தி ஒன்றிணைக்கிறது?நிச்சயமாக இதை ஒரு பலமான சக்தி இருந்து கொண்டுதான் இணைக்க வேண்டும் அல்லவா? 

மீண்டும் ஒன்றை நினைவுபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இப்போதும் உள்ளது. இங்கு நான் கொடுக்கும் எந்தத் தகவலும்,எனக்குச் சொந்தமானவை அல்ல. இவைகளின் உண்மைத் தன்மை பற்றி என்னிடம் எந்த  ஆதாரங்களும் இல்லை. ஆனால் பல ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள், காணொளிகள் என இணையங்களிலும், அச்சு வடிவங்களிலும் ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவை  கொட்டிக் கிடக்கின்றன. 'சதித் தத்துவம்' (Conspiracy Theory) என்னும் பெயரில், இவை காணொளிகளாக வெளிவருகின்றன. இவை இப்படி இப்படி இருக்கின்றன என்று உங்களுக்குச் சுட்டிக் காட்டுவது மட்டுமே எனது வேலை. அத்துடன் என் கடமை முடிந்து போய் விடுகிறது. படித்த பின் சரியான முடிவுகளை எடுப்பது உங்கள் பொறுப்பு. நான் சொல்லும் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால், நான் சொன்னவை சிறிதளவோ என்று நீங்களே பிரமித்துப் போவீர்கள்.சொல்லாதவை மிக அதிகமாக இருக்கும். இதற்கு மேலும் இது பற்றி நான் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்...........!

  டென்வெர் விமான நிலையம் பற்றியும் நோர்வேயில்அமைக்கப்பட்ட மரங்களின் பாதுகாப்பு மையத்தைப் பற்றியும் நான் எழுதியது உங்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கும் என்றே நம்புகிறேன். அவற்றை யார் முன்னின்று நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழுந்திருந்தது.அவர்கள் யார் என்பதற்கு ஆதாரம் டென்வெர் விமான நிலையத்திலேயே எமக்குக் கிடைத்தது. டென்வெர் விமான நிலையக் கட்டுமானத்தின்போது,அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பற்றிக் கடந்த பதிவில் கூறியிருந்தேன்.அதன் முழுமையான வடிவம் மேலே உள்ள படத்தில் காணப்படுகின்றது. அந்தப் படத்தைச் சரியாகப் பார்த்தீர்களானால், அதில் ஒரு சின்னம் (Symbol) காணப்படுகிறது.அத்துடன் கீழே 'புதிய உலகம்' (New World) என்னும் வார்த்தைகளும் காணப்படுகிறது. இவை இரண்டுமே எல்லா மர்மங்களையும் எமக்கு தீர்க்கப் போதுமானவையாக இருக்கலாம். 


அவை என்ன என்றுதான் பார்ப்போமே!



'புதிய உலக ஒழுங்கு' என்று தமிழில் சொல்லப்படக்கூடிய 'The New World Order' என்னும் அமைப்பு, உலகத்தின் கோடீஸ்வரர்களையும், தொழிலதிபர்களையும், அரசியல் பெரு முதலைகளையும், அதிகார மையங்களின் உச்சங்களில் அமர்ந்திருப்பவர்களையும் தன் அங்கத்தவர்களாகக் கொண்டது என்று சொல்கிறார்கள். ஒரு மாயச் சங்கிலி மூலம் இவர்கள் அனைவரையும் இந்த அமைப்பு இணைத்து வைத்திருக்கிறது.அந்தச் சங்கிலியின் எந்த ஒரு வளையத்திலும் சாதாரண பாமர மக்களான நாங்கள் இருக்கவே முடியாது. இவர்களின் கொள்கை ஒரே ஒரு உலகம், ஒரே ஒரு பணம்,ஒரே ஒரு வங்கி என்பதுதான். அதாவது உலக மக்கள் அனைவரையும் ஒரே ஒரு சக்தி ஆள வேண்டும். அவர்களுக்குப் பணமாக ஒரே ஒரு பணம் இருக்க வேண்டும்.அந்தப் பணத்தை நடை முறைப்படுத்துவதற்கு ஒரே ஒரு வங்கி இருக்க வேண்டும். 



'என்னடா இவன் கதைவிடுகிறானே!' என்று நீங்கள் நினைக்கலாம். சம்பந்தம் உண்டோ, இல்லையோ, இங்கு சொன்னது போல, சம்பவம் ஒன்று சமீபத்தில்நடைபெற்று இருக்கின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட, உலகத்தில் மிகமுக்கியத்துவமும், சக்தியும் வாய்ந்த நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து தனி ஒரு பணமான 'யூரோ'வை (Euro) உருவாக்கியது எம் கண் முன்னாலேயே நடந்தது. ஆசியநாட்டிலுள்ளவர்கள் அனேகருக்கு 'புதிய உலக ஒழுங்கு' அமைப்புப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தன் முகத்தை ஆசிய நாட்டினர்களுக்குப் பெரிதாகக் காட்டாத இந்த அமைப்பைப் பற்றி அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள் நிறையவே தெரிந்து வைத்திருக்கின்றனர். 



இதில் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி என்னவென்றால், The New World Orderஎன்னும் அமைப்பை, 'Free Mason' என்னும் அமைப்பே கொண்டு நடத்துகிறது என்று சொல்கிறார்கள். இந்த Free Mason அமைப்பு மிகவும் பிரபலம் வாய்ந்தது. அது மட்டுமில்லாமல் பலரால் மர்மம் நிறைந்தது என்றும் வர்ணிக்கப்படுவது. இந்த அமைப்பை  'மேசனிக்ஸ்' (Masonics) என்றும் அழைப்பார்கள். இந்த மேசனிக்ஸ் என்பது மதம் சார்ந்தது என்றும், கடவுளுக்கு எதிரானது என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் இருந்தாலும், நாம் அதற்குள் போகத் தேவையில்லை. ஆனால் இந்த அமைப்பு மிகவும் ஆளுமையுள்ள அமைப்பு என்பது மட்டும் உண்மை ஆகும். 



இந்த அமைப்புக்கு எனப் பல சின்னங்கள் இருந்தாலும், கீழே படத்தில்கொடுத்திருப்பதுதான் அதன் முக்கிய சின்னமாகும்.





இந்தப் படத்தில் உள்ள அடையாளத்தையும், டென்வெர் விமான நிலையக்கல்வெட்டில் இருந்த அடையாளத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் மேசனிக்ஸ் அமைப்பு மேலும் சில சின்னங்களைத் தமக்கெனவைத்திருக்கின்றது. மேலே படத்தில் காட்டப்பட்ட கணித வரை கருவிகள்,ஒற்றைக் கண், ஐந்து நட்சத்திர வடிவம், ஆறு நட்சத்திர வடிவம், கைவிரல்களை மடக்கிக் காட்டும் ஒருவித சைகையான அடையாளம், ஆங்கில 'G' என்னும் எழுத்துஎன்பவற்றுடன் ஆச்சரியகரமாக பிரமிட் சின்னமும் மேசன்களின் சின்னங்களாகும். 



















இந்த மேசனிக்ஸ் அமைப்பின் ஆளுமை பற்றிச் சொல்வதானால், நான் ஒரே ஒருசம்பவத்தை மட்டும் சொன்னால் உங்களுக்கு அதன் தீவிரமும், அதிகாரமும் புரியும்.அமெரிக்காவின் ஒரு டாலரை உங்களில் அநேகர் பார்த்திருக்கலாம். அந்த ஒருடாலரில் (One Dollar Note) இருக்கும் படம் இது. 









இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ள 'NERVUS ORDO SECLORUM' என்னும் லத்தீன் வார்த்தைகள் 'Secular New Order' என ஆங்கிலத்தில் அர்த்தம் தருகிறது. இது New World Order என்று தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றது என்று விக்கிப்பீடியா(Wikipedia) தெரிவித்தாலும், இல்லை இது மறைமுகமாக அதையே குறிக்கின்றது எனப் பலர் அடித்துச் சொல்கின்றனர். அவற்றின் விபரங்களை நீங்கள் பல இணையத் தளங்களில் காணலாம். அது தவிர அமெரிக்க டாலரில் ஏன் லத்தீன் வார்த்தைகள் வரவேண்டும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மேசன்களின் அடையாளமான ஒற்றைக் கண்ணும், பிரமிட் அடையாளமும் அங்கு வர வேண்டிய அவசியமே இல்லை எனக் கேள்விகள் வருகின்றது. அத்துடன் அந்தப் பிரமிட்டின் அடுக்குகள் மொத்தமாக 13 ஆகவும் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தப் 13 என்னும் இலக்கம் மேசன்களின் முக்கிய இலக்கங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். சரி, இந்தப் 13 படிகள் என்பது தற்செயலாக அமைந்தது என்று நாம் எம்மைச் சமாதானப்படுத்தினால், அதே டாலரில் இருக்கும் இன்னுமொரு  படம் எம்மை அசர வைக்கிறது. அந்தப் படத்தில் இருக்கும் அமெரிக்கக் கழுகு, தன் இடது காலில் வைத்திருக்கும் இலைகளின் எண்ணிக்கையும்,வலது காலில் வைத்திருக்கும் அம்புகளின் எண்ணிக்கையும் தற்செயலில்லாமல் 13ஆக இருக்கிறது. அது மட்டுமா? அதில் செங்குத்தாக வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளின் எண்ணிக்கை 13. மேலே இருக்கும் லத்தீன் எழுத்துகள் மொத்தம் 13. அதற்கும் மேலே இருக்கும் நட்சத்திரங்கள் 13. இதற்கு மேலும் 13என்பது தற்செயல்தானா என்பதை நீங்களே முடிவு செய்துவிட்டு, படத்தில் எண்ணிப் பாருங்கள்.







"அடப் போங்கப்பா! எதைப் பார்த்தாலும் உங்களுக்குச் சந்தேகம்தான்.எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்" என்று நீங்கள் சொல்லலாம். இருக்கட்டும், இதையும் பாருங்கள். அந்த டாலரில் இருக்கும் படத்தில் மேசனின் ஆறுகோண அடையாளத்தை வரையும்போது என்ன வருகிறது என்று தெரிகிறதா? MASON.








ஆச்சரியம் இத்துடன் முடிந்து விடவில்லை. அமெரிக்க ஒரு டாலரின் முன் பக்கம் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனே (George Washington) ஒரு மேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 










ஆபிரகாம் லிங்கன், கென்னடி ஆகிய இருவர் தவிர்த்து, அமெரிக்க ஜனாதிபதிகளில் அனைவரும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்,இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்தக் கருத்துகளை முன்னணியில் வைத்து'நிக்கலஸ் கேஜ்' (Nicolas Cage) நடித்து வெளிவந்த National Treasure (The Book of Secrets)என்னும் ஆங்கிலப் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கின்றன. முடிந்தால் அவற்றைப் பாருங்கள். அத்துடன் அந்தப் படத்தின் போஸ்டர்களில் பிரமிட்டுக்குள் இருக்கும் ஒற்றைக் கண்ணையும் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.  







இந்து மதத்தின் சின்னங்களில் ஒன்றான ஸ்வஸ்திக் சின்னத்தை, ஹிட்லர்தனக்கென்று ஒரு சின்னமாக மாற்றிவிட்டது சரித்திரத்தில் நடந்தது. அது போல,இன்னுமொரு சின்னத்தையும் தங்களுக்கென வைத்துக் கொண்டார்கள் மேசன்கள்.அது அவர்கள் கைகளாலேயே காட்டும் ஒரு சின்னம். அதை அமெரிக்காவின் எத்தனை பெருந் தலைகள் பாவித்திருக்கின்றனர் என்று நீங்களே பாருங்கள்.இவையெல்லாம் சில உதாரணங்கள்தான். பல கொடுக்க முடியவில்லை.  













இங்கு ஒரு விசயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்களெல்லாம்மேசனாக இருந்தால், அப்படி இருப்பதில் எந்தத் தவறும் கிடையாது. மேசன் என்பது மறைந்து தொழிற்படும் ஒரு அமைப்பல்ல. வெளிப்படையாகவே இயங்கும் ஒருஅமைப்பு அது. அதில் அங்கத்தவர்களாக இருப்பது ஒன்றும் தவறானது அல்ல.உலகில் அதி உச்சத்தில் இருப்பவர்கள் பலர் 'நான் ஒரு மேசன்' என்று சொல்லத்தயங்கியதே இல்லை. ஆகையால் இங்கு அமெரிக்க ஜனாதிபதிகளைக் குறிப்பிடும்போது, அவர்கள் தவறு செய்பவர்கள் என்று சொல்வது என்பதல்ல அர்த்தம். மேசன்கள் பற்றிய ஒரு மர்மமான கருத்து உலகில் பலமாக உலவுகிறது என்பதை இங்கு சொல்லி, அதற்கு மேலும் சொல்வதற்காக இவற்றையும் சொல்ல வேண்டி இருக்கிறது அவ்வளவுதான். அதிகம் ஏன், ஜார்ஜ் வாஷிங்டன் போல, ஜார்ஜ் புஷ் கூட மேசன்களுடன் இருக்கும் படங்கள் வெளிப்படையாகவே கிடைக்கின்றன.நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன். 









இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இன்னுமொரு அதிர்ச்சியும் எம்மை வேறொரு புறத்தில் இருந்து தாக்குகிறது. நீங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி அது.எதிர்பார்க்காதது என்பது மட்டுமல்ல, அது பற்றிச் சொன்னால் நீங்கள் நம்பப் போவதே இல்லை. "நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நடப்பதையே இப்படி மாற்றிச் சொல்கிறீர்களே, நீங்கள் எதைத்தான் மாற்றிச் சொல்ல மாட்டீர்கள்?" என்று திருப்பி என்னையே கேள்வி கேட்பீர்கள். அந்த அளவுக்கு நீங்கள் நம்பும் ஒன்று இது. இதை நான் சொன்னால், இதுவரை நான் சொன்னவை எல்லாமே, இப்படிப்பட்ட அபத்தங்கள்தான் என்று முடிவைக் கூட நீங்கள் எடுத்துவிடுவீர்கள். 



"அட! எதற்கு இவ்வளவு பீடிகை?" என்றுதானே கேட்கிறீர்கள். விசயம் அப்படி. நான் சொல்லப் போவதை முதலில் நீங்கள் நம்பாவிட்டாலும், சொல்லி முடிக்கும் வரை கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள். முடிந்தால் அது பற்றி இணையங்களில் தகவல்களையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சரி, இப்போ விசயத்துக்கு வருகிறேன்.



உலகம் வெப்ப மயமாதல் (Global Warming) என்பது தற்போது, மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு பாரிய பிரச்சினை. இதற்குக் காரணமாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். அதிலும் குறிப்பாக உலகமெங்கும் பயணித்துக் கொண்டிருக்கும் வாகனங்கள் வெளிவிடும் புகையால், சுற்றுச்சூழல் மாசடைகிறது என்கிறார்கள். வாகனங்கள் வெளிவிடும் காபனீரொக்சைட் (CO2)என்னும் வாயுவும், மீதேன் (Methene - CH4) என்னும் வாயுவும் சுற்றுச்சூழலை நஞ்சாக்குகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது எமது பூமி சூரியனின் வெப்பக் கதிர்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க தன்னைச் சுற்றி 'கிறீன் ஹவுஸ் விளைவு' (Greenhouse effect) எனப்படும் ஒன்றை, பூமியைச் சுற்றிப் பல வாயுக்களால் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கிறீன் ஹவுஸ்தான் எம்மை இதுவரை காத்து வருகிறது. இந்த கிறீன் ஹவுஸை மேற்படி இரண்டு வாயுக்களும் பழுதடைய வைக்கின்றன எனச் சொல்லப்படுகிறது. 







ஆனால் தற்போது விஞ்ஞானிகள் மிகப்பெரிய எழுத்துகளில், 'குளோபல் வார்மிங்என்பதே பொய்' என்று அலறுகிறார்கள். ஆமாம், நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள்.குளோபல் வார்மிங் என்று சொல்லப்படுவதே முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைக்கும் பொய் என்கிறார்கள். உலகம் வெப்பமாவது என்பது உண்மையிலும் உண்மைதான். அதை எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை. ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணமான மேற்படி வாயுக்களின் மாசுத் தன்மைதான் என்பது மகா பொய் என்கிறார்கள். இதைச் சொல்வது ஒருவர், இரண்டு பேர் கிடையாது.அமெரிக்காவில் மட்டுமே 31457 விஞ்ஞானிகள் இதற்கு எதிராக பெட்டிசன் ஒன்றை உருவாக்கி, அமெரிக்க அரசுக்கு அனுப்பினார்கள். அதில் 9029 பேர் Ph.D என்று சொல்லப்படும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் அனைவருமே குளோபல் வார்மிங் என்பது பொய் என்கிறார்கள். குளோபல் வார்மிங் என்பது உண்மைதான் என்று சொல்லும் விஞ்ஞானிகள் வெறும் 3100 பேர் மட்டுமே! அரசுக்கு விஞ்ஞானிகள் அனுப்பிய கடிதத்தின் ஒரு உதாரணம் இது. 







விஞ்ஞானிகள் சொல்லும் காரணம், காபனீரொக்சைட், மீதேன், நைட்ரஸ் ஒக்சைட்,நீராவி, ஓஸோன் ஆகிய ஐந்து வாயுக்களே, கிறீன் ஹவுஸ் விளைவுக்குக்காரணமாக இருக்கின்றன. இந்த உலக மாசுபடுதலுக்குக் காரணம் என்று சொல்லப்படும் காபனீரொக்சைட்டும் (CO2), மீதேனும்தான் (CH4) இந்த கிறீன் ஹவுஸ்உருவாவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் வாயுக்கள். அடிப்படையில் எமக்குஉதவியாக CO2, CH4 ஆகிய இரு வாயுக்களும் இருக்க, அந்த வாயுக்களால் எப்படிஎங்கள் பூமி மாசுபட முடியும் என்று கேட்கிறார்கள். இந்த இரு வாயுக்களும் எமக்கு உதவிதான் செய்ய முடியுமே ஒழிய, தீமையைச் செய்ய முடியாதவை. அப்படி இந்த வாயுக்களால்தான் பூமி வெப்பமாகின்றது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், இதுவரை வெளியிடப்பட்ட வாயுக்களால் அதிகபட்சம் ஒரு சதம பாகை வெப்பம்தான் அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள்.  



அப்படி என்றால் உலகம் வெப்பமாதல் இல்லையா என்கிறீர்களா? நிச்சயமாகவெப்பமாகிறது. நாங்கள் நினைப்பது போல இல்லாமல், மிகவும் அதிகமாகவேவெப்பமாகிறது. ஆனால் அப்படி வெப்பமாவதற்குக் காரணமே வேறு. சூரியன் சமீபகாலங்களாக மிகவும் ஆவேசமாகத் தன் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது.அதன் வெப்பக் கதிர்த் தாக்குதல் முன்னைவிட மிகவும் அதிகரித்துப் போய் உள்ளது. சொல்லப் போனால், 2012 இல் உலகம் அழியாவிட்டாலும் எதிர்வரும் மிகக் குறுகிய காலத்தில் உலகம் அழியும் அளவுக்கு சீற்றத்தைக் கொடுக்கிறது சூரியன்.







ஆனால் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, உலகம் மாசாவதால் பூமிவெப்பமாகின்றது என்று கதைவிட ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர் என்றுசொல்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்படிப் பொய் சொல்வதில் "இவர்களுக்கு அப்படிஎன்ன நோக்கம் உண்டு?" என்றுதானே கேட்கிறீர்கள். ஒன்றுமில்லை, வெறும் பணமும் அதனால் கிடைக்கும் அதிகாரமும்தான் அவர்கள் நோக்கம். அதுவும் சாதாரணமான பணம் அல்ல. பில்லியன், ட்ரில்லியன் டாலர் பணம். ஆம்! புவி மாசடைதல் என்பதை வைத்து அறவிடப்படும் பெட்ரோலிய வரி என்பது நீங்கள் கற்பனையே பண்ண முடியாதது. குளோபல் வார்மிங் என்று சொல்லி மாசுக் கட்டுப்பாட்டிற்காக உள்ளீடு செய்யப்பட்ட பணம் மிக மிக மிக அதிக அளவிலான பணம். 



இதில் இரண்டு விசயங்கள் உள்ளன. 1. புவி வெப்பமாதலுக்கான உண்மையானகாரணம் மறைக்கப்படுகிறது. 2. புவி வெப்பமாதல் தவறாக வழி நடத்தப்பட்டு பணம் சம்பாதிக்கப்படுகிறது. முதலாவதில் எங்கள் தொடருக்குச் சம்பந்தமான உலக அழிவு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாகச் சொல்லியதில், உலகம் அழிந்தால் யார் தப்புவதற்கு முயற்சி செய்வார்களோ அவர்கள், அப்படித் தப்புவதற்குக் காரணமாக இருக்கும் கோடி கோடியான பணம் சம்பாதிப்பது. பின்னர் அதன் மூலம்  அசைக்க முடியாத சக்தியாக மாறுவது உள்ளடங்கி இருக்கிறது. 



இந்த குளோபல் வார்மிங் சிக்கலில் முக்கியமாகப் பலர் கையைக் காட்டும் நபர்கள் இருவர். அதில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி போட்டியில், போட்டியிட்ட மாபெரும் கோடீஸ்வரர் ஒருவர். அடுத்தவர் ஐ.நா. சபையில் மிக முக்கிய பதவியை வகித்துப் பின்னர் ஒரு சிக்கலில் பதவியைத் துறந்து, உலகின் உச்சியில் இருக்கும் கோடீஸ்வரர்களில் ஒருவர். இதில் நகைச்சுவை என்னவென்றால், அந்த இரண்டாவது நபர், தற்சமயம் தனது நாடான கனடாவை விட்டுவிட்டு சீனாவில் குடியிருக்கிறார். இந்தச் சம்பவம் உங்களுக்கு '2012' என்னும் ஹாலிவுட் படத்தை நினைவுபடுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்தத் தொடரில் நான் இவர்கள் இருவரின் பெயர்களையும் உங்களுக்குச் சொல்லப் போவது இல்லை. ஆனால் இணையம் இருக்கும் நிலையில் இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சிக்கலான விசயமாக உங்களுக்கு இருக்கப் போவதில்லை. உங்கள் தேடலுக்கு இது ஒரு சவாலாக அமையும், தேடுங்கள்.



இதுவரை நான் சொன்னவற்றில் எங்குமே மாயா வரவில்லை. மாயா இனம் பற்றிச் சொல்லப் போய் எங்கேயோ சென்று விட்டேனோ என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவற்றுக்கும் மாயாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருந்த சித்திரத்தில் மாயா இனச் சிறுமி இருந்தாளோ அதுபோல, இவற்றிலும் மாயா கலந்தே இருக்கிறது. 



அப்படி இங்கு மாயாபற்றி என்ன உள்ளது என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்.அடுத்த தொடரில் சொல்கிறேன்.


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்..






'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-7.
 

No comments:

Post a Comment

welcome ur comment,