Sunday, January 11, 2015

தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் ட்ரெக்கிங் பயணம்...

தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் ட்ரெக்கிங் பயணம்...

தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் ட்ரெக்கிங் பயணம் போவதென்பது அலாதியான ஒரு அனுபவம். சில்லென்ற குளிர்காற்று முகத்தை வருடிச்செல்ல, அபூர்வ மூலிகைகளும், அற்புதமான இயற்கை காட்சிகளும் நிறைந்த மலைகளில் ஏறுவது உடலுக்கு திடத்தையும், மனதுக்கு புத்துணர்ச்சியையும் தரும்.

அப்படி மலையேற்றம் செய்ய சிறந்த இடங்களை பற்றி முதலில் அறிந்து கொள்வோம் வாருங்கள். 


ஏலகிரி மலையேற்றம்: 


சந்தேகமே இல்லாமல் தமிழ்நாட்டில் ட்ரெக்கிங் போக சிறந்த இடம் என்றால் அது ஏலகிரிதான். ஏலகிரி மலையின் ஊடாக ட்ரெக்கிங் செல்கையில் நாம் இயற்கை அழகு ததும்பும் காட்சிகளையும், அருவிகளையும், பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கலாம். இங்கு ட்ரெக்கிங் செல்ல தேர்ந்தெடுக்க நமக்கு ஏழு பாதைகள் உள்ளன. 

அவற்றுள் அங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் பாதை 14 கி.மீ. தூரமுள்ளதாகும். அதேபோல புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் இங்கு உள்ளது. இந்த இரண்டு பாதைகளும் பலராலும் விரும்பப்படுவதோடு இவை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து ஏலகிரி மலையின் மொத்தத் அழகையும் தரிசிக்கலாம். 

பாராகிளைடிங் : ஹெங் கிளைடிங் போன்றே வானில் பறக்கும் சாகச விளையாட்டு தான் பாராகிளைடிங்கும். இது வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஏலகிரியில் நடத்தப்படுகிறது. உயரமான இடத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிப்பதே இந்த விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் முன் அனுபவம் இல்லாதவர்கள் 'டேன்டம் க்ளிடிங்' என்ற முறைப்படி ஏற்க்கனவே நன்கு பயிற்சி பெற்ற ஒருவருடன் சேர்ந்து பாராசூட் உதவியுடன் பறக்கலாம். 

ஆபத்து குறைவான அதே சமயம் சுவாரஸ்யம் நிறைந்த விளையாட்டு இது.

ஊட்டி - அவலஞ்சி - எமெரால்ட் ஏரி: 

ஊட்டிக்கு தென்மேற்காக அமைந்துள்ள அவலஞ்சி அணை வழியாக மலையேற்றம் மேற்கொள்வது சுலபமானது என்பதுடன் தூரத்தில் தெரியும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, பனிச்சரிவு ஏரி மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவை கண்களுக்கு விருந்து படைக்கும். 

மேலும் இப்பகுதியில் இரவில் தங்குவதற்காக வனத்துறை விருந்தினர் இல்லங்களை ஏற்பாடு செய்துகொடுக்கிறது. எனவே இரவு ஓய்வெடுத்து விட்டு அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் பயணத்தை துவங்கலாம். பின்பு காலையில் புகழ்பெற்ற பிக்னிக் ஸ்தலமான மேல் பவானி அணையிலிருந்து மலையேற்றத்தை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். 

இந்த அணையின் வடக்கே ஊட்டியின் உயரமான சிகரங்களில் ஒன்றான கொல்லரிபெட்டா அமைத்துள்ளது. இங்கிருந்து ஊட்டிக்கு திரும்பும் வழியில் அமைந்துள்ள எமெரால்ட் எனும் அழகிய கிராமத்தை நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது.

நீலகிரி மலைகளில் வருடம் முழுக்க மலையேற்றம் மேற்கொள்ளலாம் என்றாலும் குளிர் காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடுவது அற்புதமான அனுபவமாக அமையும் எனினும் மலையேற்றத்தில் ஈடுபடும் முன் தகுந்த திட்டமிடலும், திடீர் ஆபத்துகளை சமாளிக்க முன்னேர்ப்பாடுகளும் அவசியம். எனவே இப்போதே சிலிர்ப்பூட்டும் நீலகிரி மலையேற்றத்துக்கு தயாராகுங்கள்! 

கொடைக்கானல் - தொப்பித் தூக்கிப் பாறை - பெரியூர் - பெரியகுளம்: 


கொடைக்கானலிலிருந்து பெரியகுளம் வரையிலான இந்த 19 கி.மீ பாதையில் மலையேற்றம் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரமாவது பிடிக்கும். முதல் முறை மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களும் சுலபத்தில் கடக்கும்படியாகவே இந்த பாதை அமைந்திருக்கிறது. மேலும் சாகச மலையேற்றத்தின் போது பாதையில் இருக்கும் காப்பித்தோட்டங்களில் இருந்து வரும் நறுமணமே நமக்கு புத்துணர்வை ஊட்டும்.

அடுத்த புதிய  பயணதில் சந்திபோம் ...

4 comments:

  1. Replies
    1. YEAH CLIMATE IS VERY COOL THANE, NATURAL
      TRUKING

      Delete
  2. நண்பா, அரசு விடுதியில் தங்க முன்பதிவு அவசியமா ?

    ReplyDelete
  3. நண்பா, ஊட்டி மலையேற்றத்தின் போது அரசு விடுதியில் தங்க முன்பதிவு அவசியமா ??

    ReplyDelete

welcome ur comment,