Thursday, August 6, 2015

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் ஒரு முழு வரலாறு - I

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் ஒரு முழு வரலாறு - I


மனிதம் மரித்த அந்த நாள்  


ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் பெர்லின் நகரை சுற்றி வளைத்துவிட, அங்கே பங்கரில் பதுங்கியிருந்த ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதையடுத்து ஹிட்லரின் படைகள் நேரடியாக போரை நிறுத்திவிட்டாலும் ஆங்காங்கே சிறிய அளவில் அமெரிக்கக் கூட்டணி, சோவியத் யூனியன் படைகளுடன் மோதிக் கொண்டிருந்தன. 

மே 8, 1945. இந் நிலையில் ஜெர்மனியின் முப்படையினரும் மே 8ம் தேதி அமெரிக்க- பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் சோவியத் யூனியனிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இத்தோடு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. 

ஆனால், அமெரிக்க கூட்டுப் படையினரிடம் ஜப்பான் சரணடைய மறுக்கவே இரண்டாம் உலகப் போர் பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தது. இதையடுத்து ஜூலை 26ம் தேதி ஜப்பானுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகியவை ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்தன. உடனடியாக சரணடையாவிட்டால் ஜப்பான் மீது அழிவு மிகுந்த தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது Potsdam Declaration எனப்படும் அந்த எச்சரிக்கை. இதை ஜப்பான் நிராகரித்துவிட்டது. 

முன்னதாக 1941ம் ஆண்டில் டிசம்பர் 7ம் தேதி ஹவாய் தீவில் உள்ள தனது பியர்ல் ஹார்பரில் நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டு ஜப்பான் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களைக் கொன்றதோடு, நூற்றுக்கணக்கான போர்க் கப்பல்களையும் மூழ்கடித்ததற்கு பதிலடி தருவதில் ஆவேசமாக இருந்தது அமெரிக்கா. 

(பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் ஏன் தாக்குதலை நடத்தி அமெரிக்க கப்பற்படையின் பசிபிக் பிரிவையே நீருக்குள் மூழ்கடிக்க வேண்டும்... 
இந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த அமெரிக்கக் கடற்படை, ஜப்பானின் கடல் வழி வர்த்தகத்தை முடக்கலாம் என்ற சந்தேகம் தான்) ஜப்பான் மீது உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த அன்றே திட்டமிட்டது. 


Manhattan Project என்ற பெயரிலான இந்தத் திட்டம் மூலம் தான் உலகிலேயே முதன்முதலாக அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. இதில் கனடாவும் இங்கிலாந்தும் அமெரிக்காவுக்கு முழு அளவில் உதவின. விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள், உளவுப் பிரிவினர், ஆயுத நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் லெஸ்லி குரோவ்ஸ் அணு விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் ஆகியோர் தலைமையில் மிக ரகசியமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 நியூமெக்சிகோ பாலைவனத்தில் முதல் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடக்க, அணுகுண்டை ஏந்திச் செல்ல வசதியாக போயிங் B-29 Superfortress போர் விமானங்களை மாற்றி வடிவமைக்கும வேலையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

ஆகஸ்ட் 6, 1945. 
அமெரிக்காவின் மியாமி நகரில் 57 வயதான எனோலா கே தன் வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்க, அவரது பெயர் சூட்டப்பட்ட ஒரு B-29 Superfortress போர் விமானம் லிட்டில் பாய் என்ற அணுகுண்டை ஏந்தியபடி டினியன் என்ற பசிபிக் தீவில் இருந்து அதிவேகத்தில் கிளம்புகிறது. 

அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தது ஏனோலா கேவின் மகனான பைலட் பால் டிபிட்ஸ். இவரது தலைமையிலான டீம் தான் ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டைப் போட்டது. 

விமானத்துக்கு தனது தாயாரின் பெயரை சூட்டியது இவர் தான். 

யுரேனியம் கன்-டைப் அடிப்படையிலான இந்த லிட்டில் பாய் அணுகுண்டு 10 அடி நீளம் கொண்டது. 5 டன் எடை கொண்ட இந்த குண்டு 20,000 டன் டி.என்டி வெடிப்புக்கு சமமானது. 6 மணி நேர பயணத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு மேகக் கூட்டங்களில் மாறி மாறி நுழைந்து, வெளியேறி என ஜப்பானை நெருங்கியது எனேலோ கே. ஹிரோஷிமாவை நெருங்க நெருங்க விமானத்தின் பறக்கும் உயரமும் 31,000 அடிக்கு உயர்த்தப்பட்டது.

 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமாவில் கோடை காலம். மேகக் கூட்டங்கள் குறைவான இந்த மாதம் தான் அணுகுண்டின் தாக்கத்தை பல மடங்கு அதிகரிக்க உதவும் என்பதால் இந்த நாளை தேர்வு செய்திருந்தனர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள். 

ஹிரோஷிமாவை எனோலா கே விமானம் நெருங்கும் வேளையில், அமெரிக்காவின் வானிலை ஆய்வு விமானமான Straight Flush அங்கே தலையைக் காட்டியது. வானிலை சரியாக இருப்பதாக தகவல் தர வேகமாக முன்னேறியது எனோலா கே. முன்னதாக 1945ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே அமெரிக்காவின் B-29 போர் விமானங்கள் ஹிரோஷிமா மீது பறப்பதும், அப்போது ஆரஞ்சு வண்ணத்திலான ‘pumpkins' எனப்படும் சாதாரண ரக வெடிகுண்டுகளைப் போட்டுவிட்டுப் பறப்பதும் வழக்கமாக இருந்தது. இதனால் இந்த B-29 ரக அமெரிக்க விமானங்கள் தங்கள் நகருக்கு மேலே பறப்பதையும, ‘pumpkins' குண்டுகள் விழுவதையும் ஹிரோஷிமா மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட காலம் வந்திருந்தது. 

நகர் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தாலும் கூட B-29 போர் விமானங்கள் தங்கள் தலைக்கு மேலே பறந்தால், மக்கள் பங்கர்களுக்குள் ஓடி ஒளிவதை பெரும்பாலும் கைவிட்டுவிட்டிருந்தனர். இதைத் தான் அமெரிக்காவும் எதிர்பார்த்தது. இதனால் தான் B-29 போர் விமானங்களை வைத்து பல மாதங்கள் ஹிரோஷிமா மக்களுக்கு விளையாட்டு காட்டி ஏமாற்றி வந்தது.

தொடரும்..

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


நன்றி
A.K. கான்.

No comments:

Post a Comment

welcome ur comment,