Wednesday, December 3, 2014

சீனுகுரு எழுதும் தனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் 1

தனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1


தனுஷ்கோடி இந்த பெயரும் பெயர்சார்ந்த இடமும் மீது எப்போது ஏன்எதற்கு எப்படி ஈர்ப்பு வந்தது என்றுதெரியவில்லை. சற்றே அமானுஷ்யம்பரவிய மணற்பரப்பு, ஓயாமல்அடித்துக் கொண்டு இருக்கும் கடல்காற்று. ஒரு புறம் சாதுவான வங்கக்கடலையும், மறுபுறம் ஆற்பரிக்கும்இந்தியப் பெருங்கடலையும்தனக்கான எல்லைகளாகவரையறுத்துக் கொண்டு அழிந்தும் அழியாமலும் சோகங்களை, தொலைந்துபோன ஆன்மாக்களைத் தேடி நிற்கிறது தனுஷ்கோடி. தனுஷ்கோடி சென்று வந்தகதையை பயணக் கட்டுரையாக மட்டும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் வரலாறுக்குள் புதைந்து எஞ்சியிருக்கும் மணல்பரப்பும், மிஞ்சிஇருக்கும் மக்களும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டனர். 


புயலால் அழிந்து போன தனுஷ்கோடி மீதான தேடல் தொடங்கிய நிமிடம் முதல்இந்த நிமிடம் வரை தனுஷ்கோடி பற்றி கிடைத்து வரும் தகவல்கள் அனைத்தும்சற்றே பிரமிப்பாயும் திகில் கலந்தும் உள்ளது. பயணத்தில் சந்தித்ததனுஷ்கோடி மக்கள் மூலம் கிடைத்த தவல்களும், இணையத்தில் தனுஷ்கோடிபற்றிய தேடல் மூலம் கிடைத்த தகவல்களுமாக இணைந்து இந்த பதிவுமுழுவடிவம் பெறுகிறது. இதற்கு முன் நான் எழுதிய எந்த ஒரு பதிவிற்கும்இவ்வளவு தேடல் மேற்கொண்டது இல்லை அவை எல்லாமே அனுபவப்பதிவுகளாக மட்டுமே இருக்கும், முதல் முறை சற்றே சிரத்தை எடுத்துதகவல்கள் சேகரித்து இந்தப் பதிவை எழுதுகிறேன். அதற்கு முழு காரணமும்தனுஷ்கோடி தான்.




தனுஷ்கோடி பற்றி இணையத்தில் தேடிய பொழுது பல தகவல்கள் கிடைத்ததுஇருந்தும் நான் தேடிய தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கவில்லை,ஆங்காங்கு கிடைத்த தகவல்களை மொத்தமாக ஒரே இடத்திலதொகுத்துள்ளேன். இருந்தும் நூறு சதவீதம் முழுமையான தகவல்கள் அடங்கியபதிவாக இருக்காது. இந்தப் பதிவை படிக்கும் உங்களிடம் நான் வைக்கும்வேண்டுகோள் இரண்டு, எங்கேனும் தவறு செய்திருந்தால் திருந்துங்கள்,காரணம் வரலாற்றைப் பிழையாக்கி விடக்கூடாது, ஏதேனும் தகவல்விடுபட்டிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள், தொடர்புள்ள சுட்டிகொடுங்கள், பதிவுடன் இணைத்துக் கொள்கிறேன். 

குறைந்த கால இடைவெளிக்குள் இரண்டு முறை தனுஷ்கோடி சென்றுவருவேன் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. மூன்று மாதங்களுக்குமுன்பு நண்பர்களுடன் ராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்று வந்த பயணக் கதைஎங்கள் குடும்பத்தாருக்கு ஆர்வத்தை அத்துமீறி கிளப்பி இருக்க வேண்டும்.அதனால் நாள் தான் என்னவோ முதல் நாள் இரவு ஆலோசித்து அடுத்த நாள்பயணித்தும் விட்டோம். இம்முறை தென்காசியில் இருந்து ராமேஸ்வரம்நோக்கி பயணித்தோம். ஆறுமணி நேரப் பயணம், ராமேஸ்வரம் தீர்த்தங்களில்நீராடிவிட்டு தனுஷ்கோடி நோக்கிய பயணம் தொடங்கியது. (ராமேஸ்வரம்பற்றிய விரிவான பதிவை படிக்க இங்கு சுட்டுங்கள்). 

தன்னிலை விளக்கம் சற்றே நீண்டமைக்குப் பொறுத்தருள்க. தாமதியாமல்நாடோடி எக்ஸ்பிரஸினுள் ஏறிக்கொள்ளுங்கள், தனுஷ்கோடி நோக்கிய நமதுபயணத்தை, வரலாற்றுத் தேடலைத் தொடங்குவோம்.




நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் 1964 டிசம்பர் 22. நாம் பயணிக்கும்நேரம், இருள் இருள், இருள் மட்டுமே பரவி இருந்த இரவு நேரம். கடந்த சிலநாட்களாக பெய்திருந்த பேய் மழையில் தென்தமிழகத்தின் கடற்கரையோரப்பகுதிகள் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தன. மிகப்பெரும் மழைக்குப்பின்னான சிறு தூறல்கள் பாம்பன் ரயில் நிலையத்தைக் குளிர்வித்துக்கொண்டிருந்ததன. தனுஷ்கோடி செல்லும் கடைசி ரயிலான பாம்பன்-தனுஷ்கோடி பாசன்ஜர் 110 பயணிகளையும், 5 ரயில்வே அதிகாரிகளையும்சுமந்து கொண்டு புறப்படத் தயாராக இருந்தது. ஏழு பெட்டிகள்கோர்க்கப்பட்டிருந்த ரயிலில் 40 வட இந்தியக் கல்லூரி மாணவர்களும்,துறவிகளும், யாத்ரீகர்களும், உள்ளூர்ப் பயணிகளும் இருந்தனர்.

டிசம்பர் 17ம் தேதியே வங்காள விரிகுடாவின் அந்தமான் பகுதியில் குறைந்தகாற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருந்தது, அந்த காற்றழுத்தம் கொஞ்சம்கொஞ்சமாக வலுபெற்று 19ம் தேதி புயல் சினமாக வலுகொண்டது. எப்போதுவேண்டுமானாலும் புயல் தாக்கலாம் என்ற நிலையில் தான் வங்களா விரிகுடாமற்றும் இந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான கடற்கரை ஓரங்கள் இருந்தன.காரணம் புயல் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததுதுரதிஷ்டவசமாக மக்கள் அதிகம் வாழும் மிக முக்கியமானபகுதிகளான இலங்கையின் வவுனியா வழியாக தலைமன்னாரையும்தனுஷ்கோடியையும் சேதப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். புயல் அந்தமானில் இருந்து மன்னார் வளைகுடாவை வெகுவாகநெருங்கிய நேரம், பாம்பனில் இருந்து ரயில் மெதுவாக தனுஷ்கோடி நோக்கிநகரத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் முன் தனுஷ்கோடியைப் பற்றியவரலாற்றுப் பார்வை ஒன்றைப் பார்த்து விடுவோம். 


தனுஷ்கோடி தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரம். சென்னைதூத்துக்குடிக்குப் பின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் விளங்கியது.பிரிட்டிஷ் அரசு, இந்தியாவையும் இலங்கையையும் ஒருசேர ஆண்டுகொண்டிருந்த 18 - 20 ம் நூற்றாண்டுகளில் கப்பல் போக்குவரத்து மூலம்வியாபாரமும் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது. 




1911ம் ஆண்டு பிரிட்ஷ் அரசு தனுஷ்கோடியிலும் தலைமன்னாரிலும் ஒரேபோன்ற துறைமுகக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டி மூன்றே வருடங்களில்(1914) கப்பல் போக்குவரத்தையும் தொடங்கிவிட்டார்கள். இர்வின், போஷின்என்ற பெயருடைய இந்த இரண்டு நீராவிக் கப்பல்களும் இந்தத் துறைமுகத்தில்இருந்து தான் தங்கள் பயணத்தைத் தொடங்கின. கப்பல் போக்குவரத்துநடைபெற்ற காலத்தில் ஒரு நாளைக்கு ஆறு ரயில்கள் வரை தனுஷ்கோடிசென்று வந்து கொண்டிருந்தன. 

சென்னை எக்மோரில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் தனுஷ்கோடிவரை சென்று வந்தன. இந்தோ-சிலோன் போட் மெயில் (BOAT MAIL) என்றுஅழைக்கப்பட்ட இந்த ரயிலின் சிறப்பம்சமே இந்தியாவையும் இலங்கையையும்இணைத்தது தான். எண்பது ருபாய் கட்டணத்தில் டிக்கெட் எடுத்தால்சென்னையில் இருந்து கொழும்பு வரை சென்று விடலாம். 




சென்னையில் இருந்து தனுஷ்கோடி துறைமுகம் வரை ரயில் பயணம்,தனுஷ்கோடி துறைமுகத்தில் தயாராக இருக்கும் நீராவிக் கப்பலில் ஏறினால்அங்கிருந்து தலைமனார் துறைமுகம் வரை கப்பல் பயணம். தலைமன்னாரில்இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம். இந்தியாவையும்கொழும்புவையும் இணைத்த இந்த போட் மெயில் மூலம் தான் பெரும்பாலானஇந்தியர்கள் வர்த்தகம் மேற்கொண்டனர். இந்தக் கால கட்டங்களில் வியாபாரம்நிமித்தமாக தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று குடியமர்ந்த தமிழர்கள்மலையக தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள். 

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் சுதந்திரமாக பயணித்துக் கொண்டிருந்த இந்தரயில்வழிபோக்குவரத்து 1964 புயலுக்குப் பின் முடிவுக்கு வந்தது. அதன் பின் இந்தரயில் தற்போது சேது எக்ஸ்பிரஸாக பயணித்து வருகிறது. இர்வினும்போஷினும் தங்கள் பயணத்தை கணித மேதை ராமனுஜம் பெயரில் தொடர்ந்துகொண்டிருந்தன. 1984ல் ஏற்பட்ட இனப் போராட்டம் மூலம் நீர்வழி சேவையும்முடிவுக்கு வந்தது. 




தனுஷ்கோடி கடலில் குளித்தால் காசி தீர்த்தத்தில் நீராடியதற்கு சமம் என்றொருநம்பிக்கை உண்டு, மேலும் காசி புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் நிறைவுசெய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு, அதனால் வாரனாசியில் இருந்துதனுஷ்கோடிக்கு வாரம் இருமுறை இரயில்கள் வந்து செல்லும். மேலும்பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு பாசன்ஜர் ரயிலும் உண்டு. பாம்பனில்இருந்து தனுஷ்கோடி செல்ல முதலில் ராமேஸ்வரம் வழியாகத் தான் ரயில்பாதையை அமைத்திருந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும்பாதை இந்தியப் பெருங்கடலின் கடற்கரையோரம் அமைந்திருந்தது.சாதாரணமாகவே இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மிக அதிகம். இந்தக்காற்றானது அடிகடி இரயிலின் வழித்தடத்தை கடல் மணல் கொண்டுமூடிவிடுவதால் அடிக்கடி ரயில் போக்குவரத்து தடைபடுவது உண்டு. 

இதற்கு மாற்று ஏற்பாடாக பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரயில்பாதையை குந்துக்கல் என்ற இடம் வழியாக மாற்றி அமைத்தார்கள். மேலும்குந்துகல்லில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு இணைப்பு ரயில் உண்டு. 

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பற்றி புயலுக்கு முன் பயலுக்குப் பின் என்றுபார்தோமானால் ராமேஸ்வரம் இராமன் வழிபட்ட தீர்த்தத் ஸ்தலம் மட்டுமேசொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி எதுவும் அடைந்திருக்கவில்லை.தனுஷ்கோடியோ துறவிகளும் யாத்ரீகர்களும் வியாபாரிகளும்வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்ற மிகவும் பரபரப்பான ஒரு நகரம்.மிகப்பெரிய ரயில் நிலையம், தபால் நிலையம், தந்தி ஆபீஸ், கஸ்டம்ஸ் ஆபீஸ்,மேல்நிலைப் பள்ளி, மாநிலத்தின் மிக முக்கியமான துறைமுகம் என்றுபரபரப்பாக இயங்குகின்ற மிக முக்கியமான வர்த்தக நகரம். மீன் கருவாடு உப்புஒப்ன்றவை மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள். மேலும் இந்தியாவில்இருந்து இலங்கை சென்று வர விசா தேவை இல்லை என்பதால் மக்கள்போக்குவரத்தும் அதிகம். 



டிசம்பர் 22 1964, தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே  வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்க வில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு எப்போது எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும் மழை பெய்யும் கடலுக்குள் செல்லக் கூடாது என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது தெரியும் ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.  


ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன்,  காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார், தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும் என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை. 


எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே ரயில் வருவதை தெரிவிக்க தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று ஊகித்துக் நீங்களே கொள்ளுங்கள்.  ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும், அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். விதி சற்றே வலியது அதனால் தானோ என்னவோ அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.     


தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின  அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, இன்ன நடக்கிறது என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. நடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர். 


இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுந்த இந்த அபாய அறிவிப்பை உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள். அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். இதில் நீச்சல் காளி என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.    

                   நீச்சல் காளி

அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி  இல்லை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.


ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . ஆம் பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக்க மூடிக் கொண்டது. 




ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது. 


இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது, படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே போக்குவரத்துக் காரணிகள். மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடார்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி.    


விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். இந்தியாவின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை தேசியப் பேரிழப்பு என்று அறிவித்தது. இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது. 


அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம் என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள்அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை. 




மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை என்று. மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர், இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப் பட்டுவிட்டது. அதில் பயணித்த 115பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது என்று குறிப்பிடுகிறார். 


தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.      


சமீபத்தில் ஆந்திரா மற்றும் ஒரிசாவில் தாகிய புயல் பல ஆயிரம் மக்களை பலி வாங்கியது. அதனுடன் ஒப்பிடும் பொழுது தனுத்கொடியில் உயிரிழப்புகள் குறைவு தான் என்ற போதிலும் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலானா நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.  




ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. நிலமை இப்படி இருக்க தமிழகமோ  புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது. அது பற்றியும் தனுஷ்கோடி புயல் ஏற்படுத்திய விளைவுகளையும், இன்றைய தனுஷ்கோடியின் நிலமையைப்  பற்றி அடுத்த பதிவில் பகிர்கின்றேன். 


பயணிப்போம்... 


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

No comments:

Post a Comment

welcome ur comment,