Tuesday, March 31, 2015

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் பலமுறை சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இநத் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். கண்ட கண்ட உணவுகளின் மீது ஆசைப்பட்டு அவற்றை வாங்கி நன்கு வயிறு நிறைய சாப்பிட்டு, பின் அது வெளிவராமல் அவஸ்தைப்படுவோம். ஏனெனில் அந்த உணவுகள் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிமானமாகாதது மற்றும் செரிமானத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள தினமும் போதிய உடற்பயிற்சிகளை செய்து வராததே காரணம் ஆகும். 

ஆகவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, தினமும் ஒருசில யோகாக்களை செய்து வாருங்கள். ஆனால் பலரும் யோகா என்ன செய்யும் என்று அதனை செய்வதில்லை. இருப்பினும் மற்ற செயல்களை விட, உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா பெரிதும் உதவியாக இருக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதனை தவறாமல் செய்து வர வேண்டும். 

இங்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கவும், அந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கவும் செய்ய வேண்டிய யோகா நிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் (Pawanmuktasana) பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்து,க் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, சீரற்ற மாதவிடாய் சுழற்சி நீக்கி, இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹலாசனம் (Halasana) 

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, கைகளால் உடலைப் பிடித்துக் கொண்டு, பின் மெதுவாக கால்களை தலைக்கு பின்புறம் உள்ள தரையை தொட வேண்டும். பின் கைகளை மெதுவாக தரையில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்க வேண்டும். இதேப்போன்று 3 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் செரிமானம், பசி, இரத்த ஓட்டம் மற்றும் மன நிலை போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

திரிகோணாசனம் (Trikonasana) 

முதலில் நேராக நின்று கொண்டு, வலது காலை சற்று பக்கவாட்டில் தள்ளி வைத்து, பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி, வலது கையால் வலது காலைத் தொட்டுக் கொண்டு, இடது கை மேல் நோக்கி நீட்டியிருக்க வேண்டும். இதேப்போன்று மற்றொரு காலிலும் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை என ஆறு முறை செய்ய வேண்டும்.

பாலாசனம் (Balasana) 


பாலாசனம் என்பது தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் மலச்சிக்கல் மட்டுமின்றி, மன அழுத்தம், சோர்வு, நீங்கி, இடுப்பு, தொடை போன்றவை வலிமையடையும். முக்கியமாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலி இருந்தாலும் குணமாகிவிடும்.

சாவாசனம் (Savasana) 

ஆசனங்களிலேயே மிகவும் சிம்பிளானது என்றால் அது சாவாசனம் தான். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கைகளை உடலை ஒட்டியோ அல்லது பக்கவாட்டிலோ வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மலச்சிக்கல் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் குணமாகும்.



No comments:

Post a Comment

welcome ur comment,