Wednesday, April 1, 2015

இந்தியாவில் கொஞ்சம் வினோதம், கொஞ்சம் விசித்திரம்!!!

இந்தியாவில் கொஞ்சம் வினோதம், கொஞ்சம் விசித்திரம்!!!

இந்தியாவில் விசித்திரம் அல்லது வினோதங்களுக்கு பஞ்சமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவே ஒரு விசித்திரமான நாடுதான். 

இங்கு விநாயகர் சிலை பால் குடிக்கும், கருங்கல் நந்தி சிலை வளரும். அந்த வகையில் வினோதமாகவும், கொஞ்சம் விசித்திரமாகவும் இருக்கின்ற சில இடங்கள் பற்றி இங்கு காண்போம்.

புல்லட் பாபா கோயில் 


ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளை கடவுளாக மக்கள் வணங்கும் அதிசயத்தை காண நீங்கள் ராஜஸ்தானின் ஜோத்பூருக்குத்தான் வரவேண்டும். இந்த வினோதமான ஆலயம் ஜோத்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் சோட்டிலா எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. அதாவது 1991-ஆம் ஆண்டு ஓம் சிங் ரத்தோர் என்பவர் தன் புல்லட்டில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு மரத்தில் மோதி இறந்துவிட்டார். 

அதன்பிறகு அந்த வாகனம் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மறுநாள் அது விபத்து நடந்த மரத்தருகே நின்றுகொண்டிருந்ததாம். எனவே அந்த புல்லட் திரும்பவும் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் மறுநாள் அதே மரத்தருகே சென்றுவிட்டதாம் அந்த புல்லட் வண்டி. அன்றிலிருந்து ஓம் பன்னா அல்லது புல்லட் பாபா ஆலயம் என்று அந்த மரத்தையும், புல்லட்டையும் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள். யார் இந்த புல்லட் பாபாவை வணங்கினாலும் அவர்கள் பயணம் பாதுகாப்பானதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

ரூப்குந்த் லேக் 




1942-ஆம் ஆண்டு உத்தரகண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். அதோடு அந்த ஆண்டு கோடை காலத்தில் உருகிய ஏரி இன்னுமின்னும் மனித எலும்புக்கூடுகளை கக்கிக்கொண்டிருந்தது. 

முதலில் இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகள் இவையென்று சொல்லப்பட்டன. ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

பறவைகள் தற்கொலை செய்யும் இடம்! 


அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர். 

அதேபோல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கொடிஞ்சி இரட்டையர் கிராமம் 



கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது. 

அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.

மேக்னடிக் ஹில் 



உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம். இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

No comments:

Post a Comment

welcome ur comment,