Friday, October 18, 2019

ஜானகியின் காதல்

ஜானகியின் காதல்

  கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர்.
அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இராமானுஜனை லண்டன் வருமாறு பேராசிரியர் ஹார்வி அழைத்திருந்தார். ஆனால் கடல்
கடந்து செல்லகூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அதை இராமானுஜன்
மறுத்திருந்தார். அதன்பின் இராமானுஜனை லண்டன் அழைத்துவரும் பொறுப்பை நெவில் எனும் கணித அறிஞரிடம் ஹார்வி ஒப்படைத்தார், அவர்
சென்னை வந்து இராமானுஜனை மிக கன்வின்ஸ் செய்து லண்டன் வர அழைத்தார்.





  இராமானுஜன் இறுதிமுடிவு தன் தாயினுடையதுதான் என கூறிவிட்டார்.
அன்று இரவு இராமானுஜனின் அன்னையின் கனவில் ஐரோப்பியர்களுக்கு மத்தியில் இராமானுஜன் தலையில் ஒளிவட்டத்துடன் அமர்ந்து இருப்பது போல் கனவு வர, அது அவர்களது குலதெய்வம் நாமகிரி தாயார் கொடுத்த
உத்தரவு என கருதி அவரது அன்னை அவரை ப்ரிட்டன் போக அனுமதித்தார்.



1914ம் ஆண்டு இராமானுஜன் லண்டன் கிளம்பினார். அப்போது அவரது வயது 27. அவரது 22வது வயதில் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவி ஜானகி. ஆனால்அன்றைய சம்பிரதாயப்படி அவருக்கு திருமணம் நடக்கையில் ஜானகிக்கு வயது 10 தான்.


  திருமணம் ஆகிய பெண்கள் அதன்பின் வயதுக்கு வரும்வரை தந்தை வீடு
சென்றுவிடுவார்கள். அதுபோல் ஜானகியும் தந்தைவீட்டுக்கு சென்றுவிட்டார்.
வயதுக்கு வந்தபின் தான் இராமானுஜனின் இல்லம்
வந்து சேர்ந்தார். ஆனால் இராமானுஜனின் அன்னை அப்போதும்
அவர்களை தனியாக இருக்க அனுமதிக்கவில்லை. அதன்பின்
இராமானுஜன் சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து இலண்டனுக்கும் ஜானகியை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இலண்டன் செல்ல முடிவானதும் இராமானுஜனின் நண்பர்கள் அவரை லன்டன்
பயணத்துக்கு தயார்படுத்துவதாக சொல்லி படுத்தி எடுத்துவிட்டார்கள்.



  கோட்டு வாங்கலாம், அளவு எடுக்கலாம், தொப்பி வாங்கலாம் என
சொல்லி அலைகழித்தது கூச்ச சுபாவம் உள்ள இராமானுஜனை மிக
சலிபப்டையவைத்தது. லண்டனின் டர்பன் அணிந்து இருந்தால் அங்கே சக
கணிதவியலாலர்கள் அவரை தவறாக நினைக்க மாட்டார்கள்
என்பது அவரது நண்பர்களுக்கு தெரியவில்லை.
இராமானுஜன் சுத்த சைவம். அந்த கால விதிகளின்படி பிராமணர்கள்
சமைத்ததை மட்டுமே உண்னமுடியும். அதனால் கப்பலில்
தானே சமைத்ததை மட்டும் உண்டார். அதுபோக சின்ன, சின்ன
விஷயங்களை கூட அவருக்கு எடுத்து சொல்ல யாரும்
இல்லை. கப்பலில் கடுமையாக குளிர்கிறது என புகார் செய்தபின்
தான் இராமானுஜனுக்கு கப்பலில் உள்ள படுக்கையில் உள்ள போர்வைகளுக்கு அடியே படுக்கவேண்டும் என்ற உண்மையே தெரியவந்தது. அதற்கு முன் இந்தியாவில் கயிற்றுகட்டிலில் படுப்பதுபோல்
கம்பளிகளுக்கு மேலே படுத்து குளிரில் அவதிபட்டுகொண்டு இருந்தார்.

   இங்கிலாந்து சென்றதும் உணவு பிரச்சனை அவரை வாட்டிஎடுத்தது. அது  உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. தன்
உணவை தானே சமைக்கவேண்டும் என்ற நிபந்தனையால்
அவருக்கு குளிர்காலத்தில் காய்கறி கிடைப்பது, ஷாப்பிங் போவது, சமைப்பது முதலியவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டன. 30 மணிநேரம்
தொடர்ந்து ஆராய்ச்சி செய்வார். அதன்பின் 20 மணிநேரம்
தொடர்ந்து உறங்குவார். சமைப்பது ஒரு நாளைக்கு ஒரு
முறை, இருமுறைதான். இதனால் உடல் மிக மெலிந்து விட்டது.
மருத்துவமனையில் சேர்க்கபட்டு பின் இந்திய பயணத்தை உடல் தாங்கும் என மருத்துவர்கள் கூறி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபட்டார், லண்டனில் இருந்த குறுகியகாலத்தில் அவர் செய்த ஆய்வுகளை நூறு ஆண்டுகள் கழிந்தும் இன்னும் கணித உலகில் மிகப்பெரும் அளவில் கொண்டாடபடும் அளவு உள்ளன என்பது குறிப்பிடதக்கது.


  சென்னைக்கு வந்து சேர்ந்ததும் அவரது தாயார் மட்டும் வந்து இருந்தார். "எங்கே ஜானகி" என கேட்கவும் அவரை நாமக்கல்லில் விட்டுவிட்டு வந்ததாக தாயார் கூறினார். கடும்கோபமடைந்த இராமானுஜன் ஜானகியை தன்
மாமியாருடன் சென்னைக்கு வரவழைத்தார். சென்னையில் கடைசி மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் ஜானகி அவருடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டார். இராமானுஜனின் கடைசி 3 ஆண்டுகள் ஜானகியுடன் கழிந்தது. "அவருக்கு அரிசி, லெமென் ஜூஸ்,
பால், நெய் கொடுத்துவந்தேன். வலி எடுக்கையில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பேன். அந்த பாத்திரங்கள் கூட இன்னும் அந்த நினைவாக என்னிடம் உள்ளன" என பெருமிதத்துடன் பின்னாளில் கூறினார் ஜானகி.

   இராமானுஜனுடன் அவரது மனம் முழுமை அடைந்ததா என்பதே பலரும்
சந்தேகித்த விஷயம். சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன்
33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார்.  அப்போது ஜானகியின் வயது 21.



  அதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. 'நான் இறந்தாலும் என் கணிதம் உன்னை காப்பாற்றும்" என மரணதருவாயில் இராமானுஜன் கூறியிருந்தார்.

  1962ம் ஆண்டு இராமானுஜனின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது தான் ஜானகி என ஒருவர் இருப்பதே தெரிந்து அவர்களுக்கு 20,000 ரூபாய் பரிசளித்து மாதம் 1000 ரூபாய் பென்ஷன் வழங்கினார்கள். இராமனுஜனின் வார்த்தைகள் இப்படி பலவருடங்கள்
கழித்தே உண்மையானது,.



  அரசாங்கம் மறந்தாலும் கணித உலகம் ஜானகியை மறக்கவில்லை. உலகின் புகழ்பெற்ற கணித நிபுணர்களான ஆண்ட்ரூஸ், பெர்னபார்ட் முதலானோர் சென்னை வந்தபோதெல்லாம் ஜானகியின் தையல்
கடைக்கு சென்று அவரை சந்திக்க தவறவில்லை. இராமனுஜனுடன் வாழ்ந்த
சிலவருடங்களை தன் இறுதிகாலம் வரை மனதில் சுமந்த
ஜானகி இறக்கையில் அவரை சந்திக்கபோவதாக சொல்லி மகிழ்ச்சியுடன் உயிர்நீத்தார். வருடம் 1994. அன்று ஜானகியின் வயது 95.

No comments:

Post a Comment

welcome ur comment,