Friday, November 15, 2013

சச்சின், சச்சின், பை பை சச்சின்..

சச்சின், சச்சின், பை பை சச்சின்..


சச்சின் என்ற தனி நபரின் மலைக்க வைக்கும் சாதனைகள், தேடித்தந்த வெற்றிகள், அவர் மேல் ரசிகர்களும், மற்ற விளையாட்டு வீரர்களும் கொண்டுள்ள அபிமானம் போன்றவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களை மேலோட்டமாக தொகுத்தாலே இந்தப் பக்கம் போதாது. ‘கால்பந்து ஜாம்பவான் பீலேவின் ஆயிரத்து281 சர்வதேச கோல்கள், டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரரின் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், சர் ஸ்டீவ் ரெட்கிரேவ்சின் 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் ஆகியவற்றுக்கு நிகரானது சச்சினின் சாதனை’ என்று மிரர் இதழில் புகழாரம் சூட்டியிருப்பது ஒரு சோறு பதம்.

  2004 ஆம் ஆண்டு...
ஆஸ்திரேலியாவில் விபி கோப்பைத் தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது...
ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கின் சாதுர்யமான பந்துவீச்சில் சச்சின் ஆட்டம் இழந்தார். மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் ஹாக். போட்டி முடிந்ததும் சச்சினிடம் சென்ற ஹாக், அந்தப் பந்தை அவரிடம் நீட்டி, ஆட்டோகிராப் கேட்டார். லேசான புன்முறுவலுடன் பந்தை வாங்கிய சச்சின், தன் கையெழுத்தை அதில் பதித்தார். கூடவே ஒரு வாசகமும். அதைப் படித்துப் பார்த்த ஹாக், பதிலேதும் சொல்லாமல் அர்த்தமுடன் சிரித்துவிட்டு விலகுகிறார். அந்தப் பந்தில் சச்சின் எழுதியிருந்த வாசகம் இதுதான்...
‘இனி இதுபோல் நடக்காது!’ (‘ஐகூ ஙிஐஃஃ Nஉஙஉகீ ஏஅககஉN அஎஅஐN!’)
பந்தில் தான் பதித்ததையே அடுத்த போட்டிகளில் களத்தில் பதிவு செய்தார் சச்சின். அதன் பின் நடந்த 21 போட்டிகளில் ஹாக் பந்தை எதிர்கொண்ட சச்சின், ஒருமுறை கூட அவரது பந்தில் அவுட்டாகவில்லை. இதுதான் சச்சின்.

இதுபோன்ற புள்ளிவிவரங்களும், பட்டியல்களும் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, வேறு பல விளையாட்டுகளிலும் உள்ள சாதனையாளர்களுக்கும் உண்டுதான். ஆனால், சச்சின் என்ற ஒரு மனிதரின் மேல் மட்டும் ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு, மரியாதை..? எதிர்பார்த்த ஓய்வுதான் என்றாலும் ஏன் அதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது..? இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் இருப்பது ஒரே பதில்தான். சச்சினின் தனி மனித ஒழுக்கம், விடாமுயற்சி, தளராத தன்னம்பிக்கை, உண்மையான தேசப்பற்று, பணத்திற்குப் பணியாத நேர்மை..!

அவரது சாதனைகளை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தால், ஒரு விக்கெட்டை வீழ்த்தினால்கூட கங்கனம் நடனம், அரை சதத்தைக் கடந்ததும் வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளிக் குதிப்பது, அவுட் கொடுக்கும் நடுவர்களை முறைத்துப் பார்த்தபடி நடப்பது, அரைவேக்காட்டுப் புகழ் வெளிச்சத்தில் சர்ச்சைகளில் சிக்குவது என சுழலும் இன்றைய கிரிக்கெட் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கிறது. புதுத் தலைமுறை வீரர்கள் சச்சின் அளவுக்கு சாதனைகள் படைக்க வேண்டாம். அவர் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கும் பாடங்களை பின்பற்றினாலே போதும்.

ஆரம்பக் காலத்தில் படிப்பில் மார்க் வாங்குவதை விட, கிரிக்கெட்டில் தான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார் சச்சின் என்பதை உணர்ந்த அவரது அப்பா, மகனை கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபட அனுமதியும்<, ஊக்கமும் அளித்தார். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தார் சச்சின். அப்போது அவரின் நண்பர்கள் பலர் பயிற்சி வகுப்பை கட் அடித்துவிட்டு, பக்கத்தில் உள்ள வடாபாவ் கடைக்கு செல்வது வழக்கம். ஆனால், தந்தை தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பும், சுதந்திரமும் கொடுத்திருப்பதை தவறாக கையாள விரும்பாத சச்சின், ஒரு நாளும் அதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டதில்லை.

இத்தனை சாதனைகள் புரிந்திருந்தாலும், அவை அத்தனைக்கும் அடித்தளமாக சச்சின் சுட்டிக் காட்டுவது தனது ஒழுக்கத்தைத்தான். கிரிக்கெட் மேல்கொண்ட தீராக்காதலின் காரணமாக, தனது உணவு பழக்கங்களில் கூட ஒரு ஒழுக்கத்தை கடைபிடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் இதை சொல்லியிருப்பது சாட்சாத் சச்சினேதான்.

“அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தின் போது, அங்குள்ள சூடான தட்ப வெப்பத்தை சமாளிக்கவேண்டும் என்பதற்காக போட்டிக்கு முன் ஒரு வார காலத்திற்கு காரமான மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன். இதனால் உடல் சூடு அதிகரிக்காது, அந்த இடத்தில் விளையாட மனதோடு, உடலும் பொருந்திப்போகும். சென்னையில் விளையாடும்போது, அப்போது வெயில் காலமாக இருந்தால், நள்ளிரவில் அலாரம் வைத்து எழுந்து நிறைய தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் உறங்கச் செல்வேன். இதனால் போட்டியின் போது உடலில் நீர் வற்றிப்போதல் குறைந்து, சக்தி பாதுகாக்கப்படும். இப்படி ஊருக்கு ஏற்ப என் உணவு வழக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வேன்” என்கிறார் சச்சின்.

ரசிகர்களிடமும், மீடியாக்களிடமும் பாந்தமாக நடந்துகொள்வதில் சச்சினுக்கு நிகர் எவருமில்லை. “பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் என் புகைப்படமோ, செய்தியோ வருவது இன்றுவரை தன் குடும்பத்தினருக்கு பெரிய சந்தோஷம் தரும் விஷயமாகவே இருக்கிறது” என்கிறார் டைம் பத்திரிகையின் அட்டையில் கூட இடம் பிடித்து விட்ட சச்சின். இப்படி தன் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சச்சின், தன் குருவுக்குக் காட்டும் மரியாதையோ அபரிதமானது.

ரமாகாந்த் அச்ரேகரிடம் கிரிக்கெட் கோச்சிங் எடுத்தபோது, முதல் ஆளாக மைதானத்துக்கு வந்து, கடைசி ஆளாகப் போவார்.
பாராட்டும், புகழும் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஆரம்ப காலத்தில் தன்னை மெருகேற்றிய கோச் அச்ரேக்கரை நன்றியுடன் நினைக்க மறந்ததில்லை. இதை பல மேடைகளில் பதிவும் செய்திருக்கிறார். எந்த நாட்டிற்கு விளையாடச் சென்றாலும், அதற்குமுன் ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசி பெற்று விட்டுத்தான் செல்வார்.

ரிச்சர்ட்ஸ், லாரா, அன்வர், ஜெயசூர்யா, கங்குலி என கிரிக்கெட் உலக ஜாம்பவான்களின் கனவாக இருந்து, கடைசி வரை நிறைவேறாமல் போன 200 ரன்களை முதல் வீரராக தொட்டார் சச்சின். அதுவும் மிகச்சிறந்த அணியான தென்னாப்ரிக்காவுக்கு எதிராக என்பது கூடுதல் சாதனை. ஸ்டெயினும், பார்னலும் உசுப்பேற்றியபோதும் மவுனம் காத்து, தனது ரன் மழையை பதிலாகக் கொடுத்தார். காலீசின் பந்துவீச்சில் வலது புறம் சென்று இடப்பக்கமாக அவர் எடுத்த 4 ரன்கள் இன்றுவரை பந்துவீச்சாளர்களுக்கு புரியாத புதிர்.

சச்சின் 194 ரன்களைக் கடந்த அந்த பெருமைக்குரிய நிமிடத்தில் கேலரியில் இருந்த ரசிகர்களும், டிரசிங் ரூமில் இருந்த சக வீரர்களும் ஆர்ப்பரிக்க, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், மட்டையை உயர்த்தி ஆரவாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அடுத்த பந்தை எதிர் நோக்கி பார்வை குவித்து சச்சின் நின்ற அந்த வினாடி... சாதனை உச்சத்தின் எளிமை. போட்டி முடிந்தபின், ‘இந்த இரட்டை சதத்தை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று அவர் சொன்னபோது, இந்தியா பெருமிதத்தில் நெகிழ்ந்துதான் போனது.

 
 இவை எல்லாவற்றையும் இன்றைக்கு கிரிக்கெட் உலகில் கால் பதித்திருக்கும் இளம் வீரர்கள், சச்சினைப் பார்த்துக் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது. அது விளம்பரப் படங்களில் நடிப்பதற்கான வரையறை அல்லது கொள்கை. கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், மது மற்றும் புகையிலை சார்ந்த எந்த விளம்பரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் மிகத் தீர்மானமாக இருந்தார், இருக்கிறார். வீதியில் கிரிக்கெட் விளையாடும் கோடானுகோடி சிறுவர்களின் ரோல்மாடலாக தான் இருப்பதை உணர்ந்திருக்கும் சச்சின் எக்காரணம் கொண்டும், அவர்கள் தடம் புரள தான் காரணியாக இருந்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். இந்த உறுதியே 20கோடி தருகிறோம் என்ற ஒரு பீர் நிறுவனத்தின் விளம்பர அழைப்பை நிராகரிக்கச் செய்தது. “என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். அவர்களை தீயப்பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்” என்று ஓய்வு அறிவித்தபின்னரும் சொல்லும் இந்த மன திடம் பிற வீரர்களுக்கு வருமா என்பது சந்தேகம்.

வெளியுலக பிம்பத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் போதை வஸ்துக்கள் பக்கம் தலைவைத்து படுக்காதவர். இத்தனை ஆண்டுகால அவரது வாழ்க்கைப் பயணத்தில் இதுவரை அவர் பார்ட்டிகளில் கலந்துகொண்டது போன்றோ, நடிகைகளுடன் குலாவுவது போன்றோ ஒரு துணுக்குக் கூட வந்தது இல்லை என்பது இதற்கான சான்று.

சீசரின் மனைவி மட்டுமல்ல, சச்சினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டே இருந்து வந்திருக்கிறார். சூதாட்ட சர்ச்சைகள் இந்திய கிரிக்கெட் அணியை சூறையாடியபோது, அந்தப் புயலால் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாமல் இருந்த நேர்மை நாயகன். அந்த காலகட்டத்தில் ‘அவர்’, ‘இவர்’ என வீரர்களைப் பற்றிப் பூடகமாக உலா வந்த செய்திகளைப் படித்த மக்கள்கூட, மறந்தும் அந்த அவர், இவரில் சச்சினைப் பொருத்திப் பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கான ரன்கள், முறியடிக்க முடியாத சாதனைகள் என சச்சின் சுமந்திருக்கும் மணி மகுடத்தில் வைரமாக ஜொலித்துக் கொண்டிருப்பது இந்த நேர்மைதான்.

சக வீரர்கள், எதிரணியினர், ரசிகர்கள் என சகல தரப்பினரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கும் சச்சின், போட்டி நடுவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. ஸ்டெம்புகள் எகிறினாலும், மூன்றாவது நடுவரின் முடிவுக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு மத்தியில், பந்தை தைத்திருக்கும் நூலின் இழை தன் பேட்டில் உரசிச் சென்றதாக உணர்ந்தாலே கிளவுஸ்களை கழற்றிவிட்டு, மட்டையை கைகளுக்குள் இடுக்கிக் கொண்டு வானம் பார்த்த சோகப் பார்வையுடன் களத்தைவிட்டு வெளியே நடக்கத் தொடங்கிவிட்டார். ‘ஹவுஸ்சாட்...’ என்ற பந்துவீச்சாளரின் குரல் எழும்பும் முன்னே, பந்தின் பாதை நடுவரின் மனக்கண்ணில் மீண்டும் விரியும் முன்னே மைதானத்தைவிட்டு வெளியே போய்விடுவார். கிரிக்கெட் உலகின் கெடுபிடி நடுவர்களைக் கூட வியந்து பார்க்க வைத்த சச்சினின் நன்னடத்தை இது.

சிறுவர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் சச்சின் பதிலுக்கு அவர்கள் மீது காட்டும் அன்பு அலாதியானது. குழந்தைகள் ஆட்டோகிராப் புத்தகங்களை நீட்டினால் எத்தனை அவசர வேலையாக இருந்தாலும், நின்று அவர்களுக்கு கையெழுத்திட்ட பிறகே நகர்வார். 



அதேபோல் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன நலம் குன்றிய குழந்தைளை எங்கே பார்த்தாலும், அவர்களின் கன்னங்களைச் செல்லமாக தட்டிக்கொடுத்து கொஞ்சுவார். தனது மாமியார் நடத்திவரும் அப்னாலயா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 200 ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார் என்பது சச்சினின் ஈர முகம்.
 
200வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சச்சினை நாம் களத்தில் பார்க்க முடியாது. உடல் முழுக்க பெயிண்ட்டால் சச்சின் என எழுதி தேசியக் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் அந்த தீவிர ரசிகரையும் பார்க்க முடியாது. 

லிட்டில் மாஸ்டர் என்ற பதாகைகளையும் பார்க்க முடியாது. ஆனால் தன் நடத்தையால், பாடங்களால் இன்னும் பல சச்சின்கள் உருவாவதற்கான விதைகளை ஊன்றிவிட்டு, அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குகிறார் சச்சின்.
பை பை சச்சின்..!
- கர்ணா.



நன்றி- சண்டேஸ்பெஷல், தினமலர்.

No comments:

Post a Comment

welcome ur comment,