Wednesday, January 8, 2014

இரகசிய சமுதாயம் - தொடர்-9

இரகசிய சமுதாயம் - தொடர்-9
 
ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற
முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

 
இரகசிய சமுதாயம் - தொடர்-8 

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (2:208)

இரகசிய சமுதாயம்!. ஒற்றுமை இணையவாசகர்களை ஒரு மாதகாலமாக வலம்வந்த இத்தொடரின் நிறைவுப்பகுதி இது. இத்தொடர் கட்டுரைகள் மூலம் நவீன ஷைத்தானிய, தாவூத்திய சக்திகளின் படுபாதகங்களையும், சூழ்ச்சிகளையும் ஓரளவு அறிந்து கொண்டோம் அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய சூழ்ச்சிகளை வெற்றிகொண்டு முழுமைபெற்ற முஸ்லிமாக வாழ்ந்திட இயலுமோ என்று ஏங்குபவர்களுக்கு சில முக்கிய தகவல்களை வழங்குவதே இந்நிறைவு பகுதியின் நோக்கம். ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற முஸ்லிம்கள் செய்ய வேண்டியவைகள் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.
முஃமின்கள் (இறைவிசுவாசிகள்) மீது ஷைத்தானுக்கு அதிகாரமில்லை.

இறைவிசுவாசிகளே! ஷைத்தானின் சூழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாகவும் சக்திமிக்கதாகவும் தெரிந்தாலும் உண்மையில் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். ஆம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது கட்டளைகளை சரிவர நிறைவேற்றி, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இறைநெறியில் வாழும் ஒரு உண்மை முஃமினுக்கு முன்னால் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன். இன்னும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ள அத்தகைய முஃமின்கள்மீது ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை.

எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் செல்லும். (16:99-100)
''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர'' என்று கூறினான். நிச்சயமாக உன்னைப் பின்பற்றும் அனைவரும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். (15:42-43)

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் தன்னைப் பின்பற்றும் தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். (35:6)

ஷைத்தானை வணங்கும் இலுமனாட்டிகளும் பலஹீனமானவர்களே!
அறிவாற்றல், ஆட்சி அதிகாரம், பணம்பலம் மற்றும் படைபலம் என்று இவ்வுலகின் அனைத்து சக்திகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த மிரோவிஞ்ஜியன் இலுமனாட்டிகளை நாம் வெற்றிகொண்டு தூய இஸ்லாத்தை நிலைநாட்டுவது சாத்தியமா? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு நாம் தெளிவாக சொல்லிக் கொள்கிறோம், லூசிஃபர் எனும் ஷைத்தானின் ஆட்சியை இப்பூமியில் அமைத்திடத் துடிக்கும் இந்த மிரோவிஞ்ஜியன் இலுமனாட்டிகளும் முஃமின்களுக்கு முன்னால் பலஹீனமானவர்களே!. ஆம் நாம் முஃமின்களாக இருக்கும் பட்சத்தில், அல்லாஹ்வின் உதவி நமக்கு இருக்கும் வரை நம்மை எந்த ஷைத்தான்களாலும் வெற்றி கொள்ள இயலாது என்பதை கீழ்க்காணும் இறைவசனங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

... மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான். (4:141)

...அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.(8:7)

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (39:17)

எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
(2:249)

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொல்லாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (3:139)
எனவே உண்மை முஃமின்களுக்கு முன்னால் ஷைத்தானிய இலுமனாட்டிகளும் பலஹீனமானவர்களே என்பதையும், இலுமனாட்டிகளை ஒப்பிடும்போது உண்மை முஃமின்கள் சிறுகூட்டத்தினராக, பலம்குன்றியவர்களாகத் தெரிந்தாலும் இறுதிவெற்றி முஃமின்களுக்குத்தான் என்பதையும் அறியமுடிகிறது – அல்ஹம்துலில்லாஹ்.
நாம் முதலில் முஃமின்களாக இருக்கவேண்டும்.

ஆனால் ஒரு நிபந்தனை!. அல்லாஹ்வின் உதவியும், ஷைத்தானிய சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பும், வெற்றியும் நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் நாம் முதலில் முஃமின்களாக வாழவேண்டும். இதுவே அந்த நிபந்தனை. நாம் உண்மையான, உளத்தூய்மையான, உறுதிமிக்க முஃமின்களாக வாழ்ந்தால் மட்டுமே உன்னதமான வெற்றிகளை அடைய இயலும். இதைத்தான் திருமறைகுர்ஆனும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களுக்குத் தகுதி கொடுத்து உங்களை நம்மளவில் நெருங்கி வைக்கக் கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான நல்ல அமல் செய்கின்றாரோ அத்தகையோருக்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு. மேலும் அவர்கள் சுவனபதியின் உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். (34:37)

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும் நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (6:32)

நபியே! யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். (6:70)

ஏனென்றால் அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
(7:51)
எனவே ஒவ்வொரு உண்மை முஃமினுடைய இலட்சியமும், குறிக்கோளும் நாளை மறுமையில் ஈடேற்றம் அடைவதை நோக்கியே இருக்கவேண்டும். மறுமையை மறந்து அற்பமான இவ்வுலக வாழ்க்கையின் தற்காலிக சுகபோகத்தில் மயங்கிக் கிடப்பவன் உண்மை முஃமின் அல்ல. அவனுக்கு அல்லாஹ்வுடைய உதவியோ, இம்மை மறுமை வெற்றியோ, ஈடேற்றமோ கிடையாது என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே இவ்வுலக மாயையில் சிக்குண்டு, இஸ்லாமிய மார்க்கத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்ட அத்தகையவர்களுக்கு ஷைத்தான்கள், இலுமனாட்டிகள் என்று (நம் ஒற்றுமை இணையதளம் போல எத்தனை இணையங்கள்) எத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்காது. இவ்வுலக இச்சைகளில் மயங்குவதை விட்டொழித்து மறுமை வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும்வரை அவர்கள் பரிசுத்த முஃமின்கள் என்ற நிலையை அடையவே மாட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

முஃமின்கள் அல்லாஹ்வின் சோதனைகளுக்கு உள்ளாவர்

பிரிவினைகளும், சுயநலமும், சுகபோகமும், சூழ்ச்சிகளும் நிறைந்த இச்சோதனையான காலகட்டத்தில் ஒரு உண்மையான முஃமினாக நாம் வாழ்வதென்றால் கருங்கல்லில் நாற் உரிப்பதைப்போன்று மிகக்கடுமையான ஒன்றாகத்தான் தெரியும். இத்தகைய சூழ்நிலைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் முஃமின்கள் எதிர்நோக்கித்தான் இருந்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, ஒரு முஃமினாக இவ்வுலகில் வாழ்ந்து எல்லையும், உவமையும் இல்லாத பேரின்ப சுவனத்தை இறைவனின் பரிசாகப் பெறவேண்டுமென்றால் படைத்த இறைவனின் சோதனைகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன. 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது'' என்று நாம் ஆறுதல் கூறினோம்.
(2:214)

முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
(3:186)

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் இன்னல்களை சகித்துக் கொள்ளுங்கள் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் இம்மையிலும், மறுமையிலும் நீங்கள் வெற்றியடைவீர்கள்!.
(3:200)

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்.(3:103)

ஆம் உலக சரித்திரத்தில் தங்களுக்கென்று தனிமுத்திரை பதித்துள்ள உலகத்திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட உத்தமத் தோழர்களான சத்திய ஸாஹாபாக்களின் சோதனைமிக்க வரலாறுகளில் நமக்கோர் அழகிய முன்மாதிரி நிச்சயம் இருக்கிறது. சோதனைகளை அல்லாஹ்வின் உதவிகொண்டு சாதனைகளாக மாற்றிக்காட்டி, ஈருலவெற்றிகளின் இருப்பிடமாய்த் திகழும் அத்தியாகச் செம்மல்களிடம் இருந்தது ஒன்றுதான். அது கற்பாறைகளையும் விஞ்சும் உறுதிமிக்க ஈமான் என்றால் மிகையில்லை. எனவே நம்மை எதிர்நோக்கும் சோதனைகளைக் கண்டு துவண்டுவிடாமல், தடைக்கற்களாகத் தெரிபவற்றை படிக்கற்களாக மாற்றி அந்த உத்தமத்தோழர்களின் வெற்றிவழியில் நாமும் நடைபோடுவோமாக.

அல்லாஹ் முஃமின்கள் மீது பேரன்பு கொண்டவன்:

அல்லாஹ் மிகப்பெரும் கருணையாளன், நீதியாளன். அல்லாஹ் வெருமனே முஃமின்களை சோதித்துவிட்டு இருந்துவிடுவதில்லை. மாறாக அதற்கான பரிசுகளையும் வழங்கும் இறைவன் நம்மீது பேரன்பும், நிகரற்ற கருணையும் வைத்துள்ளான் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் (ஹதீஸ்குத்ஸி) சான்று பகர்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனதிற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான வானவர்கள் நிறைந்த சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன். நூல்:புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அல்லாஹ் கூறினான்: 'அடியார்களே!  அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.

என் அடியார்களே! உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத்தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.

என் அடியார்களே!  உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.

என் அடியார்களே!  நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்பை தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.

என் அடியார்களே!  எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.

என் அடியார்களே!  முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.

என் அடியார்களே!  முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.

என் அடியார்களே!  முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்பு ஏற்படாது.

என் அடியார்களே!  நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும். நூல்:முஸ்லிம்.
முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.

2) அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.

3) உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும். பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்? என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

4) இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே. சுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம்? என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒரு இயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் - லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.

5) உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும். ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்களாவது கொண்ட ஒரு இஸ்லாமிய நூலகம் அவசியம் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்குள் வரும் வருகையாளர் இஸ்லாத்தின் அம்சங்களில் எதையாவது ஒன்றை கற்று அறிந்தவராக உங்கள் வீட்டைவிட்டு திரும்பிச்செல்ல வேண்டும்.

6) முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. உலக கல்வி வேறு, மார்க்கக் கல்வி வேறு என்று கல்வி இருகூறாக பிரிக்கப்பட்டுள்ளதின் பின்னனியில் யூதசூழ்ச்சிகள் இருப்பதையும், மார்க்கக் கல்வியோடு கூடிய உலக கல்விதான் உங்களுக்கு பயனளிக்கும் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதை நம் மார்க்கம் கடமையாக்கியுள்ளதை உணர்ந்து நீங்களும், உங்கள் குடும்பமும் அத்தகைய இருகல்விகளையும் ஒருங்கே பெற முயலுங்கள். பிரித்து வைக்கப்பட்டுள்ள இருகல்விமுறையை ஒன்றிணைக்கவும், இதைப்பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்திடவும் பாடுபடவேண்டும். உலக ஊடகங்கள் பொரும்பாலும் இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதையும், பொய்களைப் பரப்புவதையுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவைகளை பிரித்தறிந்து உண்மையை விளங்கும் அளவிற்கு அறிவாற்றல் பெற்றவராக நீங்கள் திகழவேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகிடாமல் அவற்றை அறிவுப்பூர்வமாக அணுகி உண்மை நிலையை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.

7) வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள். உங்களின் வேலைப்பளுக்கலோ, நீங்கள் வாழும் சுற்றுச்சூழலோ, அல்லது நீங்கள் வகிக்கும் பதவிகளோ நீங்கள் இறைவிசுவாசியாக வாழ்வதற்கும், மேற்காணும் நல்ல விஷயங்களை செயல்படுத்துவதற்கும் தடையாக இருப்பின் அத்தகைய நிலையைவிட்டு தெளிவான திட்டமிடலுடன் விரைவாக மீட்சிபெற முயலுங்கள். உங்கள் ஈமானை பலஹீனப்படுத்தி மறுமையை மறக்கடித்திடும் அளவுக்குள்ள பொருளீட்டலோ, வேலைப்பளுவோ, பதவிகளோ அல்லது சுற்றுச்சூழலோ அபாயகரமானது, அவசியமற்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் மிகவும் வேலைப்பளு மிக்கவன், இஸ்லாமிய அறிவில் பலஹீனமானவன் என்பன போன்ற தாழ்வு மனப்பான்மையான, போலியான மாயையை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்திட உறுதிகொள்ளுங்கள்.

இவ்வாக்கத்தில், நீங்கள், உங்களின், உங்களுடைய போன்ற முன்னிலை வாசகங்கள் எங்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே அவற்றை நாம், நமது, நம்முடைய என்ற பொருளில் புரிந்துகொள்ளவும். இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரும் நன்மக்களாக நம் யாவரையும் ஆக்கிஅருள்வதற்கு வல்ல அல்லாஹ் போதுமானவன். ஷைத்தானிய இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்ற முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ்ந்திட பிராத்தனைகளுடன் வாழ்த்தி முடிக்கிறோம்.

... எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (36:17)

எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13:11)

No comments:

Post a Comment

welcome ur comment,